Last Updated : 02 Oct, 2017 06:55 AM

 

Published : 02 Oct 2017 06:55 AM
Last Updated : 02 Oct 2017 06:55 AM

மூழ்குபவரைக் காப்பாற்றினாரா, அவரின் சட்டையைக் காப்பாற்றினாரா காந்தி?

அந்தப் பூங்காவுக்கு முன்னால் சில இளைஞர்கள் தற்காலிக நிழற்குடை அமைத்துக்கொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த வழியில் வருபவர்களிடம் பகவத் கீதையின் சிறப்பையும் தங்கள் குருவின் சிறப்பையும் ஒருவர் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன். அவர் கிருஷ்ணரைப் பற்றிப் பேசினார். தங்கள் குருவைப் பற்றிப் பேசினார். ஆன்ம விடுதலையைப் பற்றிப் பேசினார். நான் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிப் பேச்செடுத்தேன். அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக காந்தியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். ஒரு கணம் தயங்கிவிட்டுப் பிறகு பேச ஆரம்பித்தார் அந்த இளைஞர், "ஒன்று சொல்லவா? ஒருத்தன் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைக் காப்பாற்றுவதற்காக ஓடிவருகிறீர்கள். தண்ணீரில் இறங்கி அவனைக் காப்பாற்றுவீர்களா, இல்லை அவனது சட்டையைக் காப்பாற்றுவீர்களா? காந்தி செய்ய முயன்றது சட்டையைக் காப்பாற்றுவதுதான்" என்றார். அங்கே வாக்குவாதம் நிகழ்த்தி ஏதும் இடையூறு விளைவிக்க வேண்டாம் என்பதற்காக, அவருடன் நான் உடன்படவில்லை என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

பசி பட்டினி, வறுமையால் கோடிக்கணக்கானோர் வாடிக்கொண்டிருந்தபோது, லட்சக்கணக்கானோர் செத்துமடிந்துகொண்டிருக்கும்போது தியானத்தின் மூலமும் மதத்தின் மூலமும் இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஆன்மிகத்தின் மூலமும் விடுதலை பெறுவதென்பது எவ்வகையில் சாத்தியம்? பசியால் சுருண்டுவிழுந்துகொண்டிருப்பவனிடம் போய் “நீ யோகா செய். உனது பசி போய்விடும்” என்று சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும்!

எனினும், காந்தியின் இலக்கென்பது வெறுமனே அரசியல் விடுதலையோ அல்லது வெறுமனே ஆன்மிகரீதியான மாற்றமோ அல்ல; இரண்டும் கலந்து ஆன்மிக-அரசியல் விடுதலைதான் அவரது இலக்கு. அவரைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது தனியே எங்கோ ஒரு மலைக்குப் போய் தியானம் செய்து முக்தி அடைவதில் இல்லை. அன்றாட வாழ்விலேயே ஆன்மிக ஈடேற்றம் காண வேண்டும்; காண முடியும் என்று நம்பினார் காந்தி. அதே போல் அவருக்கு அரசியல் வேறு ஆன்மிகம் வேறல்ல. ஆன்மிகத்தின் தார்மிக வலிமை கொண்டதாக அரசியல் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால்தான் தனது அரசியல் பிரச்சாரங்களின்போது வெவ்வேறு மத நூல்கள் கூறும் கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

அடிமைகள் நிகழும் பகுதி: காந்தி இந்தியாவுக்குத் திரும்பி வருவதற்கு முன்பே, தென்னாப்பிரிக்காவிலேயே இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் ஒரு விஷயத்தைக் கண்டுணர்ந்தார். இந்தியர்களை அடிமைப்படுத்தியது ஆங்கிலேயரின் தனித்திறனோ வலிமையோ மட்டுமல்ல, அடிமைகளாவதற்கான அனைத்து இயல்புகளையும் இந்தியர்கள் கொண்டிருந்தார்கள். ‘விபத்து நிகழும் பகுதி’ என்பதுபோல் இந்தியா ‘அடிமைகள் நிகழும் பகுதி’ என்பதை ஆங்கிலேயர்கள் வெகு எளிதாகக் கண்டுகொண்டார்கள். தங்களை விட இந்தியர்கள் தாழ்வானவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நம்பியது மட்டுமல்லாமல் வெற்றிகரமாக இந்தியர்களையும் நம்ப வைத்தார்கள். ‘வெள்ளைக்காரத் துரை’ இந்தியாவில் வெற்றிகரமாக உருவாக ஆரம்பித்தார். காவல் நிலையத்தில் முதல் நாள் இரவில் போலீஸ்காரரால் அடித்து நொறுக்கப்பட்ட கைதி, அடுத்த நாளில் லாக்கப் கதவு திறக்கப்படும்போது எந்த விதமான நடுக்கத்துக்கு உள்ளாவாரோ அதே போன்றதொரு நடுக்கத்தைத் தங்கள் மனதின் அன்றாட இயல்பாகக் கொண்டிருந்தனர் இந்தியர்கள்.

இந்தியாவுக்கு வந்த காந்தி செய்ய நினைத்தது இந்த அச்சத்தை முதலும் முடிவுமாக அடித்து விரட்டுவதைத்தான். இந்த அச்சத்தை அகற்றாமல் எந்த விடுதலையையும் பெற முடியாது என்பதை காந்தி உணர்ந்தார். அச்சத்தை ஆயுதங்கள் மூலம் அகற்ற முடியாது. தன்னை நம்பும் ஒருவருக்கு, அசாத்திய உளத்துணிவு இருக்கும் ஒருவருக்கு ஆயுதமே தேவையில்லை என்று காந்தி நம்பினார். ஆயுதத்தையும் அடியையும் பொருட்படுத்தாமல் நெஞ்சைத் திறந்துகாட்டியபடி வருபவரிடம் நிச்சயம் நம்மை விட அதிகத் துணிவு இருக்கிறது என்ற எண்ணம் எதிராளியின் மனதில் விதைக்கப்படுகிறது.

சம்பாரண் போராட்டத்தின் அழகே போராட்டமே நடத்தாத போராட்டம் அது; மக்களைச் சரியாக ஒருங்கிணைத்தல், முறையான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை நடத்தியதன் மூலம் வெற்றி பெற்ற போராட்டம் அது. சம்பாரண் மக்களை ஆயுதம் ஏந்திப் போராடுமாறு காந்தி தூண்டியிருந்தால் அந்த மக்களை மிக எளிதாக ஆங்கிலேயர்கள் அழித்தொழித்து முன்பைவிட மோசமான நிலையில் தள்ளியிருப்பார்கள். சம்பாரண் மக்களிடையே உள்ள அச்சத்தை அகற்றி அவர்களைத் தன்னிடம் பேச வைத்ததும், பெருந்திரளாக நீதிமன்றத்துக்கு வரச் செய்ததும் காந்தியின் முதல் வெற்றி!

நீதிமன்றத்திடமும் அதிகாரிகளிடமும் அதிகபட்ச பணிவின் மூலமாகத் தன் அதிகபட்ச எதிர்ப்பை காந்தி காட்டியபோது மக்களுக்குப் புதுப் போராட்ட வடிவம் ஒன்று உருவாகியிருப்பது தெரிந்தது. அதில் உடனடி வெற்றி கிடைப்பதற்கான அறிகுறி பிறந்ததும் நம்பிக்கை பிறந்து அவர்கள் மனதில் உள்ள அச்சம் அகன்றது. சம்பாரண் போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் பல போராட்டங்கள் நடத்தி இந்தியர்கள் மனதிலுள்ள அச்சத்தை விரட்டித் துணிவை விதைப்பதில் காந்தி கணிசமான வெற்றியைப் பெற்றார்.

கீழ்மைகளுடன் எப்படி ஆன்ம விடுதலை? - இப்படி அச்சத்தை அகற்றினால் மட்டுமே போதாது என்பதையும் காந்தி உணர்ந்தார். தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மதப்பிரிவினைவாதம் முதலான கீழ்மைகளைக் கொண்டிருக்கும் இந்திய மனதுக்கு ஆன்ம விடுதலையோ அரசியல் விடுதலையோ தேடுவதற்கான தகுதி இல்லை என்பதை காந்தி உணர்ந்தார். கறைபட்ட ஆன்மாவைக் கொண்ட ஒருவர் ஆன்ம விடுதலையை எப்படி அடைய முடியும்? தங்கள் ஆன்மாமீது உள்ள களங்கத்தைப் பெருவாரியான இந்தியர்களுக்கு உணர வைத்தவர் காந்தி!

தீண்டாமைப் பிரச்சினையைக் குறித்துத் தேச அளவிலான விழிப்புணர்வை காந்தி ஏற்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரமும் முடுக்கிவிடப்பட்டது. பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக காந்தி நடத்திய போரும் அப்படிப்பட்டதே. போகிற இடங்களிலெல்லாம் பெண்களைத் தனது போராட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தார். உலக வரலாற்றில் ஒரு தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு நிகழ்ந்தது இந்திய சுதந்திரப் போராட்டத்தில்தான் என்ற சாதனையை நிகழ்த்தியது காந்திதான்.

ஒரு இந்துவாக இருந்துகொண்டு இந்துத்துவத்துக்கு எதிராக காந்தி நிகழ்த்திய போரில் உச்சபட்சமாக அவர் தனது உயிரையே இழந்தார். ஆனாலும், இன்றுவரை இந்துத்துவத்துக்குப் பெரும் எதிரியாக காந்தி நீடிக்கிறார் என்பதுதான் அவருடைய சிறப்பு!

அது மட்டுமல்லாமல், இந்தியர்கள் ஆன்ம-அரசியல் விடுதலை பெறுவதற்கு என்னவெல்லாம் தடைகளாக இருந்தனவோ (சுயச்சார்பின்மை, சுகாதாரமின்மை என்று பற்பல தடைகள்) அவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் தகர்க்க முயன்றார் காந்தி. ஆன்ம விடுதலையோ அரசியல் விடுதலையோ எதுவாக இருந்தாலும் இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. தன் வீட்டுக் கழிப்பறையை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை விட்டு சுத்தம் செய்பவர் ஒருபோதும் ஆன்மிக-அரசியல் விடுதலை அடைய முடியாது. ஆகவே, யோசித்துப் பார்க்கும்போது காந்தி சட்டையையும் உயிரையும் சேர்த்தே காப்பாற்ற முயன்றார்; என்ன, சட்டை ரொம்பவும் கிழிந்துபோய்விட்டிருந்தது; ஆளும் அரைகுறை உயிரோடுதான் இருந்தார். எனினும் அங்கிருந்து புத்துயிர்ப்பு பெற முடியும். அதுதான் காந்தி தேடித்தந்த ஆன்மிக-அரசியல் விடுதலை!

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x