Published : 17 Oct 2017 08:34 AM
Last Updated : 17 Oct 2017 08:34 AM

கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்!

மீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன.

குர்திஷ்களும் கேடலோனியர்களும் இந்த உலகின் எதிரெதிர் துருவங்களில் வாழ்கின்ற இனங்கள் என்றாலும், அவர்களுடைய தலையெழுத்துகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒரு இனம், ஜனநாயகத் தின் தொட்டில் என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கிறது. மற்றொரு இனம், ஜனநாயகக் காற்று வீசாத பாலை எனக் கருதப்படும் மேற்காசியாவில் இருக்கிறது. கேடலோனியர்கள் ஆயிராமாண்டு காலமாக இருந்துவரும் தமது தாயகத்துக்கான சுயாட்சியை முன்பே வென்றெடுத்தார்கள். பெற்ற சுயாட்சி உரிமைகளை ஸ்பெயின் அரசு பறிக்க முயன்றபோது, சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

சுதந்திர வேட்கை

குர்திஷ் மக்களின் நிலையோ படுமோசம். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் அவர்களது தாயகம் இராக், ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நான்கு நாடுகளால் துண்டாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மேற்காசியாவின் சாம்ராஜ்ய மும்மூர்த்திகளான துருக்கியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் குர்திஷ்களின் இன அடையாளத்தைக்கூட ஏற்கத் தயாராக இல்லாமல், இனப் படுகொலைகளினூடாக வும் ஒடுக்குமுறைகளினூடாகவும் அந்த இனத்தை அழித்துவந்தனர். 90-களில் இராக்கில் அமெரிக்கா நுழைந்த பிறகு, அமெரிக்காவின் உள்ளூர் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இராக்கிலுள்ள குர்திஷ் மக்களுக்கு என ஒரு பிராந்திய அரசு அமைந்தது. இப்போது தனி நாடாவதற்கான வாக்கெடுப்பை நடத்தியது அந்த அரசுதான்.

இராக்கில் உள்ள குர்திஷ் மக்கள் செப்டம்பர் 25-ல் நடந்த வெகுசன வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என வாக்களித்தார்கள். பல முறை நடத்தத் திட்டமிடப்பட்டு, ஆனால் முடியாமலேயே போயிருந்த நிலையில், இந்த முறை அது வெற்றிகரமாக நடந்தது. கேடலோனியாவைப் பொறுத்தவரை அக்டோபர் 1-ல் நடைபெற்ற வாக்கெடுப்பைச் சட்டவிரோதம் என்று ஸ்பெயின் அரசு கூறினாலும், கேடலோனிய அரசுத் தலைவர் கார்லஸ் பியூஜ்டிமாண்டின் உள்ளிட்டோர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் வாக்கெடுப்பை நடத்தினார்கள். ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோயின் மிரட்டல்களும் அவரது அரசின் போலீஸ் தாக்குதல்களும் ஸ்பானிய ஆளும் தலைகளின் ஆணவப்போக்கும் கேடலோனியாவில் சுதந்திரம் குறித்து முடிவெடுக்காமல் குழம்பியிருந்த மக்களைக்கூட சுதந்திரத்துக்கு ஆதரவானவர்களாக மாற்றியது. வாக்களித்த 43% மக்களில் 92% பேர் சுதந்திரம் வேண்டும் என்றே தேர்வு செய்திருந்தார்கள்.

எதிர்விளைவுகள்

இவ்விரு நிகழ்வுகளும் உலக அரங்கில் கடுமை யான எதிர்விளைவுகளை உருவாக்கியுள்ளன. பெரிய நாடுகள் இதுவரை கேடலோனியாவையோ குர்திஸ் தானையோ அங்கீகரித்துவிடவில்லை. குறிப்பாக, குர்திஸ்தான் வாக்கெடுப்பை முழுமையாக நிராகரித் தார் அமெரிக்க அரசுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன். இன்றைய உலக ஒழுங்கில் வல்லரசுகளின் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியில் இருந்தால்தான், பிரிவினைப் போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சமீபகாலத்தில் தனிநாடுகளாக ஆன தெற்கு சூடான், கோசாவா போன்றவைகூட அதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. எல்லா வல்லரசுகளும் ஒன்று திரண்டு எதிராக நின்றால், ஒரு விடுதலைப் போராட்டத் தைச் சுவடின்றி அழித்துவிட முடியும் என்று தமிழ் ஈழப் போராட்டத்தின் முடிவு காட்டுகிறது.

ஐரோப்பாவில் சுயநிர்ணய உரிமைகள் என்பது வரலாற்றுரீதியாக ஏற்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், ஆசியாவில் எந்த நாட்டிலும் அதற்கு ஏற்பு இல்லை என்பதும் வெளிப்படை. 90-களில் சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா போன்ற கூட்டமைப்புகள் தகர்ந்து, பல நாடுகள் உருவாயின. அந்தச் சம்பவங்கள், ரஷ்யப் புரட்சியினூடாக விளதிமிர் லெனினும் முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனும் முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் மேற்குலகில் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டிருப்பதன் அடையாளம் என்றும் கருதப்பட்டது.

மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஆதிக்கத்தை உடைப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்கிற ஆயுதத்தை எடுத்த எந்த மேற்கு, தெற்கு ஐரோப்பிய நாடும் தங்கள் நாட்டில் அதே கோரிக்கை எழுகிறபோது அதை ஏற்றுக்கொள்வதில்லை. பழைய சாம்ராஜ்யங்களோ புதிய வல்லரசுகளோ தங்களுடைய தேவைக் கும் நலனுக்கும் ஏற்பவே நாடுகளை உருவாக்கத் துணைபுரிகின்றன. இந்தப் பின்னணியில்தான் கேடலோனியாவில் வாக்கெடுப்பு, ஸ்பெயினில் விடுதலைக்குப் போராடும் பாஸ்க் இனத்தவர்க்கும், அருகே பிரிட்டனில் ஸ்காட்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. ஆனால், ஸ்பெயின் அரசின் மனநிலையையே பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற அரசுகள் பிரதிபலித்தன.

வல்லரசுகளுக்குச் சவால்

ஐரோப்பாவிலேயே இப்படி என்றால், குர்திஸ்தான் விவகாரத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளூர் தாதாக்களான இராக், ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடு களுக்குள் ஆயிரம் போட்டியிருக்கலாம். ஆனால் குர்திஸ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் அவை ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன. வாக்கெடுப்பு நடந்த நாள் முதலாகவே குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் மீது அனைத்துவிதமான தடைகளையும் அவை போடத் தொடங்கின. இராக்கிய குர்து அரசின் தலைநகரமான எர்பிலுக்கு பயணியர் விமானப் போக்குவரத்தைத் தடைசெய்தது இராக். அங்கேயிருந்து வெளிவரும் எண்ணெய் குழாய்களை அடைக்கப்போவதாக மிரட்டியது துருக்கி. குர்துப் பகுதியுடனான எல்லையை மூடியது ஈரான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சதாம் உசைனின் இராக்கில் இனப்படுகொலைக்கு உள்ளான குர்திஷ் மக்களுக்கு பிராந்திய அரசை ‘உருவாக்கித் தந்த’ அமெரிக்காவும் தன்னுடைய நிஜ முகத்தைக் காட்டிவிட்டது. மசூத் பர்சானி தலைமையிலான குர்திஷ் பிராந்திய அரசு அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அமெரிக்க நலன்களுக்கு ஒத்தாசை செய்துவந்தது. அமெரிக்கர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதில் குர்திஷ்களின் பெஷ்மெர்கா படையினரின் பங்கு அதிகம். குர்திஷ் பகுதி தனிநாடாகச் செல்லவேண்டும் என்று அவர் உறுதியாக முடிவெடுத்தபோது. அவரைக் கைகழுவியது அமெரிக்கா.

அப்படியென்றால் கேடலோனிய, குர்திஷ் கனவுகள் என்ன ஆகும்? வல்லரசியவாதிகளின் முடிவு என்னவாக இருந்தாலும், மக்கள் முடிவெடுத்துவிட்டால், நீண்ட காலம் அதை மறுத்து நிராகரிக்கும் ஆற்றல் யாருக்குமே இல்லை என்பது வரலாறு. காலனிய சகாப்தத்தில் போடப்பட்ட எல்லைக் கோடுகளை மாற்றவிடக் கூடாது என்று வல்லரசுகள் விரும்புகின்றன. அதை மீறி சுதந்திரம் வேண்டுமானால், வல்லரசுப் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியை அனுசரித்து சுதந்திர யாசகம் கேட்கவேண்டிய கட்டாயத்தை அவை உருவாக்கி வைத்திருந்தன. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள அதே நேரத்தில், குர்திஸ்தான்களும் கேடலோனியாக்களும் சுயநிர்ணய உரிமையை வெல்வதற்கான வழியைக்கூட சுயமாக நிர்ணயித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதுதான் இப்போது வந்திருக்கும் புதிய செய்தி. இது உலக, வட்டார வல்லரசுகளுக்கு விடப்பட்டுள்ள புதிய சவாலும்கூட!

- ஆழி செந்தில்நாதன்,

மொழி நிகர்மை உரிமை இயக்கத்தின் செயலர். தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x