Published : 16 Oct 2017 12:29 PM
Last Updated : 16 Oct 2017 12:29 PM

தெற்கிலிருந்து ஒரு சூரியன்!- நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு, அடுத்து, திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சி நிறைவு, தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி நிறைவு இந்த மூன்று முக்கியமான நிகழ்வுகளையும் ஒன்றுசேரக் கொண்டாடும் வகையில் வெளிவரவிருக்கும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ புத்தகத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ அக்.17 அன்று ‘தி இந்து’ இணைய தளத்தில் வெளியாகிறது.  

நவீன இந்தியாவின் முக்கியமான அரசியல் இயக்கங்களில் ஒன்றான திராவிட இயக்கம் கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை இன்றைய தலைமுறையினருக்குக் கடத்தும் வகையில் தயாராகியிருக்கும் நூல் இது.

1916-ல் நீதிக் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் தொடங்கி இன்று வரை திராவிட இயக்கம் கடந்து வந்திருக்கும் பாதையையும், கூடவே நாட்டிலேயே வளர்ச்சியில் முன்னிற்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை அது வளர்த்தெடுத்த வரலாற்றையும் இந்நூல் சொல்லவிருக்கிறது.

சர்வதேச அளவிலான அறிவாளுமைகள் அமர்த்திய சென், ழீன் தெரெசே, இஸ்ரேலிய அறிஞர் டேவிட் ஷுல்மன் ஆகியோரில் தொடங்கி யோகேந்திர யாதவ், பிரேர்ணா சிங், பால் சக்காரியா வரை பலரின் படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

திராவிட இயக்கம், குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி தேசிய அளவில் எத்தகைய மாற்றங்களையெல்லாம் முன்னெடுத்தார் என்று முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்பட பலர் பேசியிருக்கின்றனர்.ஒரு அரசியல் தலைவராக, எழுத்தாளராக, சினிமா கலைஞராக என்று கருணாநிதியின் பங்களிப்புகளைத் தனித்தனியே மதிப்பிடும் இந்நூலில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருணாநிதி எப்படியிருந்தார் என்பதை அவருடைய மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி; கருணாநிதியின் செயலர்கள் ராஜமாணிக்கம், சண்முகநாதன் ஆகியோர் பேசியிருக்கின்றனர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படைக்கும் ‘கேஎஸ்எல் மீடியா’வின் ‘தமிழ் திசைப் பதிப்பகம்’ பதிப்பித்திருக்கும் இந்நூல் தமிழ்நாடு முழுவதுமுள்ள புத்தகக் கடைகளில் அடுத்த வாரத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x