Last Updated : 11 May, 2017 09:07 AM

 

Published : 11 May 2017 09:07 AM
Last Updated : 11 May 2017 09:07 AM

ஒரு நிமிடக் கட்டுரை: ரிசர்வ் வங்கிக்கு புதிய அதிகாரம் சரிதானா?

வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ. 9 லட்சம் கோடியைத் தாண்டி அதிகரித்துக்கொண்டே போக பல வகைகளில் அதனைக் குறைக்க அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் முயன்று தோற்றுள்ளன. இப்போது அவசரச் சட்டம் மூலமாக 1934-ன் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தைத் திருத்தி, ரிசர்வ் வங்கிக்குப் புதிய அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் சிக்கலைத் தீர்த்துவைக்க நேரடியாகச் சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி இனி எடுக்கலாம்.

ஒன்று, குறிப்பிட்ட வங்கியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கணக்கின் வாராக் கடனை உடனடியாகத் தீர்த்து, கடனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கட்டளையிடலாம். கடனை வாங்கியவர் கடனைத் திரும்பச் செலுத்த முடியாது என்ற பட்சத்தில், அடுத்தகட்டமாக, கடன் வாங்கியவரின் சொத்துக்களை விற்று அதன் மூலம் பெறப்படும் தொகையை வரவு வைத்து, மீதம் உள்ள கடனைத் தள்ளுபடி செய்ய ஆணையிடலாம். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் வங்கிகள் தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த முடியும். ஆனால், இவற்றால் கடன் முழுவதையும் வசூலிக்க முடியாது என்பதால் வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவருக்குச் சாதகமாக நடந்துகொண்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்ற ஐயம் உள்ளது. எனவேதான், வங்கிகள் வாராக் கடனை, குறிப்பாகப் பெரிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொகை வாராக் கடனை வசூலிக்கத் தயங்குகின்றன.

இப்போது ரிசர்வ் வங்கி ஆணையின்படி வாராக் கடனை பத்துக்கு ஒன்று என்ற அளவில் வசூலித்தாலும், ஊழல் குற்றச் சாட்டில் இருந்து தப்ப முடியும். எனவே இந்தச் சட்டத் திருத்தம் அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளின் வாராக்கடன் அளவைப் பெரிய அளவில் குறைக்கும் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய அணுகு முறையில் சில சிக்கல்கள் உள்ளன. தவறானக் கடனை வழங்கிய வங்கி அதிகாரிகளும், வாங்கிய கடனை வேறு வகையில் பயன்படுத்திவிட்டு, வங்கிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களும் எந்தத் தண்டனையும் இல்லாமல் தப்பிக்கவும் கூடும். எல்லா நாடுகளிலும் மத்திய வங்கி என்பது பணக் கொள்கையை வகுப்பது, அதற்கேற்பப் பண அளிப்பு, அடிப்படை வட்டி விகிதத்தைக் கட்டுப்படுத்துவது, வங்கி களை முறைப்படுத்தி, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது ஆகிய பணிகளையே மேற்கொள்கின்றன. வங்கிகளின் வியாபார செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. வாராக் கடன் அளவு உயர்ந்தால், அதற்கு வங்கிகளின் முதலீட்டாளர்கள், (இந்தியாவில் அரசு வங்கிகளைப் பொறுத்தவரை மத்தியஅரசு) வியாபார ரீதியாக முடிவெடுக்க வேண்டும். இந்த வியாபாரச் சிக்கலில் ரிசர்வ் வங்கி தலையிடுவது தவறான முன்னுதாரணமாகும்.

-இராம.சீனுவாசன்,பேராசிரியர். தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x