Published : 11 Jan 2023 06:53 AM
Last Updated : 11 Jan 2023 06:53 AM

தமிழ்நாடு பெயர் சூட்டல் வரலாறு!

ஆர்.முத்துக்குமார்

தமிழ்நாடு - தமிழகம் குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. இதன் பின்னணியில் வரலாற்றுத் தரவுகளைப் பதிவுசெய்வது இதுகுறித்த அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தும்.

முழக்கமும் உயிர்த் தியாகமும்: ‘மெட்ராஸ் ஸ்டேட் என்பதெல்லாம் பிரிட்டிஷார் காலத்தோடு போகட்டும், நாம் நமது மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்த காலம் அது. “தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்துபோன பிறகும்கூட, தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது. இனி, தமிழர்கள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்றே எழுத வேண்டும்” என்றார் பெரியார்.

திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக இதை வலியுறுத்தின. காங்கிரஸில் இருந்த சிலருக்கும் அந்த எண்ணம் இருந்தது. அதனால்தான் தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார் சங்கரலிங்கனார். ஆனால், அவற்றை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை.

உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு. அதன் பிறகு, சட்டமன்றத்துக்குள் நுழைந்த திமுக, 1957 மே 7இல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது. சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் தீர்மானம் என்பதால், முதலமைச்சர் காமராஜர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விவாதங்கள் முடிந்ததும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் அந்த முழக்கத்தைத் தொடர்ந்து எழுப்பியது திமுக.

தொடர் முயற்சிகள்: 1961 ஜனவரி 30இல் சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஆளுங்கட்சியினர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்கக் கோரிக்கை விடுத்தார் காமராஜர்.

அது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டன. மூன்று நாள்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. வேண்டுமானால், நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடலாம் என்றது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அது முழுமையான திருப்தியைத் தரவில்லை.

நாடாளுமன்றத்தில்..: இந்தக் கோரிக்கை இந்திய அரசியலில் பேசுபொருளாகக் காரணம் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தாக்கல் செய்வதாக இருந்தது.

ஆனால், அன்றைய தினம் அவர் அவையில் பங்கேற்க இயலாததால் குப்தா தாக்கல் செய்தார். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்த காங்கிரஸ், தமிழ்நாடு என்று மாநிலத்துக்குப் பெயர் சூட்ட ஏன் மறுக்கிறது?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, மசோதாவை ஆதரித்துப் பேசினார். “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்புவரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு, ‘பரிபாடல்’, ‘பதிற்றுப்பத்து’, ‘மணிமேகலை’, ‘சிலப்பதிகாரம்’ உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லிப் பதிலளித்த அண்ணா, கம்பரும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், ‘தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?’ என்று கேள்வி எழுப்பினார்.

உடனே அண்ணா, ‘பார்லிமென்ட்டை லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்?’ என்றெல்லாம் வாதிட்டார். என்றாலும், அந்தத் தனிநபர் மசோதா தோல்வியடைந்தது.

வாதப் பிரதிவாதங்கள்: 1963 ஜூலை 23 அன்று மீண்டும் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், “மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும்போது பெருமையாக இருக்கிறது. பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும்” என்றார்.

உடனே, ‘கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. அப்படியிருக்க ஒரு மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?’ என்று திமுக கேட்டது. சட்டமன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால் அந்தத் தீர்மானமும் தோல்வியடைந்தது.

இறுதி வெற்றி: 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு தமிழ்நாடு பெயர் சூட்டல் விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு - Tamil Nadu’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

1967 ஜூலை 18 அன்று சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. “மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்ட வேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன் யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் தமிழ்நாடு என்ற பெயர் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் அண்ணா, “மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘தமிழ்நாடு என்ற பெயரைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, இந்தியப் பேரரசுக்கு அனுப்பிவைத்தால், அதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதில் தடை ஏதும் இல்லை’ என்றனர். ஆகவே, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துமே ஒருமித்த கருத்துக்கு வந்திருந்ததால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் அண்ணா.

அத்தோடு, “நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது.

- ஆர்.முத்துக்குமார்
‘திராவிட இயக்க வரலாறு’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

To Read in English: The history of naming the State as Tamil Nadu

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x