Last Updated : 08 Dec, 2016 09:55 AM

 

Published : 08 Dec 2016 09:55 AM
Last Updated : 08 Dec 2016 09:55 AM

தமிழ் இதழியலின் அங்கதக் குரல்!



தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு நபர் ராணுவம்போல ஆசிரியர்கள் செயல்பட்டு, நடத்தப்பட்ட பத்திரிகைகள் குறைவு. அதில் வெற்றிகரமான வெகுஜனப் பத்திரிகை 'துக்ளக்' மட்டுமே. அரசியல் என்றால் வெறும் அரசியல் மட்டுமே. நடுப்பக்கத்திலே, கடைசிப் பக்கத்திலே என்றுகூட சினிமா கவர்ச்சியைத் தொடாமல் பத்திரிகையைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர் சோ. லட்சக்கணக்கில் விற்பனையாகவில்லை என்றாலும், விசுவாசமான வாசகர்களை ஆயிரக்கணக்கில் தக்கவைத்துக் கொண்டது 'துக்ளக்'.

அங்கதச் சுவையைக் குழைத்து அவர் எழுதிய கட்டுரைகளை ஏற்காதவர்கள்கூட, நமட்டுச் சிரிப்போடு படித்துக் கடப்பதுண்டு. சோ இப்படித்தான் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதை எப்படித் தர்க்கரீதியாகச் சொல்கிறார் என்று பார்ப்பதற்காகவே படிப்பார்கள். அவருடைய வாசகர்களில் சரிபாதிக்கும் மேல் அவர் கருத்தை ஏற்றவர்கள் அல்ல; என்றாலும் அந்நாட்களில் 'ஜெலுசில்', 'கேஸக்ஸ்', 'பைலக்ஸ்', 'டயானில்' மாத்திரைகளோடு பல பெரியவர்களுக்கு வாரந்தோறும் தேவைப்பட்டது 'துக்ளக்'.

தேர்தல் நடப்பதற்கு முன்னால், சோவின் கணிப்பு என்ன என்று அறிய வாங்கிப் படிப்பார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் முடிவுகளுக்கு அவர் என்ன வியாக்கியானம் சொல்கிறார் என்று படிப்பார்கள். ஜெயேந்திரர் கைதா, ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கா, நரேந்திர மோடியை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டமா சோ இதில் கூறும் அரசியல் வாதம் என்ன, சட்டப்பூர்வமான கணிப்பு என்ன என்று ஆர்வமாகப் படிப்பார்கள்.

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வளர வேண்டும், அதிமுக தவிர மற்றவை செல்வாக் கிழக்க வேண்டும் என்று சோ மனதார விரும்பினார் என்றே தோன்றுகிறது. அதை அவர் மறைத்ததே இல்லை. காமராஜரின் பெருந்தன்மையை, நிர்வாகத் திறமையைக் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் எழுதிக் குவித்தார். நேரு, காந்தி மீது மரியாதை கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மீது நன்மதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தினார். கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தனிப்பட்ட வகையில் பாராட்டிக்கொண்டே கம்யூனிஸக் கொள்கைகளைத் தாக்கி எழுதினார்.

எப்பேர்ப்பட்ட தலைவரையும் கேலிசெய்ய 'துக்ளக்' தயங்கியதே இல்லை. தலையங்கம், கட்டுரைகளில் சொல்ல முடியாதவற்றைக் கேள்வி - பதிலில் அல்லது எச்சரிக்கையில் தெரிவித்துவிடுவார். 'துக்ளக்' விலை உயர்கிறது என்று அறிவிக்காமல், நல்ல தரத்துக்கேற்ப மதிப்பை அதிகம் பெறுகிறது என்று ஊசியைச் செருகுவார். 'துக்ளக்' வாசகர்கள் விழாவில் எல்லோரையும் கேள்வி கேட்க அனுமதிப்பார். ஆனால், தருமசங்கடமான கேள்விகள் என்றால் தொடங்கும்போதே, 'கடைசியில் பதில் சொல்கிறேன்' என்பார் அல்லது அந்தக் கேள்வி கேட்கும் வாசகரையே பகடித்து காலிசெய்துவிடுவார்.

அவருடைய கேள்வி பதில் பகுதி 'துக்ளக்' பத்திரிகையில் பிரசித்தி பெற்றது. "சிக்கு மங்கு, சிக்கு மங்கு செச்ச பப்பா என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி. "சிக்கு என்ற அம்மாவுக்கும் மங்கு என்ற அப்பாவுக்கும் பிறந்த குழந்தை" என்று பதில் எழுதினார் சோ. "இந்த நேரத்தில் ராஜாஜி இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார்?" என்று ஒருவர் கேட்க, "குசே பசே தசே" என்று அர்த்தமற்ற கேள்விக்கு அர்த்தமற்ற பதிலைப் பொருத்தமாகத் தந்திருப்பார். "சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்?" என்று ஒரு கேள்வி. "அதுவும் கொஞ்சம் சாயும்" என்பது பதில்.

ஆளும்கட்சியின் வட்ட, மாவட்டச் செயலர்கள் அதிகார மையங்களாக அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைத்தபோது அவர் களுடைய அரசியல், பொருளாதார அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வட்டமும் மாவட்டமும் பேசிக் கொள்கிறார்போல குறுங்கட்டுரைகளை வெளி யிட்டார். "பணவீக்கத்தைப் போக்க என்ன செய்யலாம்?" என்று வட்டம் கேட்க, "அமிர் தாஞ்சனம் தடவலாம்" என்று பதில் தருவார் மாவட்டம். "ஏன் தவிட்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாதா?" என்று வட்டம் கேட்டதும், "நல்ல யோசனை தவிட்டு ஒத்தட வாரியம் தொடங்கலாம்" என்று பரபரப்பார் மாவட்டம்.

வெறும் அரசியல் மட்டுமல்லாமல் உலக நடப்புகளையும் சுருக்கமான செய்திகளாகத் தந்தது 'துக்ளக்'. உலக சினிமாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையோ நல்ல திரைப்படங்கள் எது என்றோ அடையாளம் காட்டாவிட்டாலும் தமிழ்த் திரைப்படங்களை 'போஸ்ட்மார்ட்டம்' என்ற தலைப்பில் அலசினார். கூடவே இயக்குநரின் பதிலையும் வாங்கிப்போட்டார். ஒரு இயக்குநர் அவருடைய விமர்சனத்துக்குப் பதிலாக, "உங்களுடைய போஸ்ட்மார்ட்டம் என்ற பிணப் பரிசோதனைக்கு நான் பதில் தர விரும்பவில்லை" என்று தன்னுடைய ஆங்கிலப் புலமையை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் ரசித்து அடுத்த வாரம் செய்தியாக்கினார் சோ.

வழக்கமான நகைச்சுவை போதாது என்று கருதியபோது சிறப்பு நிகழ்வாக 'ஒண்ணரை பக்க நாளேடு, ஓசியில் படிக்க வேண்டிய ஒரே பத்திரிகை டூப் … கப்சா…' என்று போட்டுக் கலக்கினார். 'ஆனந்த விகடன்' அலுவலகத்திலிருந்துதான் 'துக்ளக்' வெளிவந்தது என்றாலும் 'ஆனந்த விகட'னையே கேலிசெய்து ஒண்ணரைப் பக்க நாளேட்டை வெளியிட்டு கலாய்த்தார். 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து சம்ஸ்கிருத சுலோகங்கள்' என்று தொடர்ந்து வெளியிட்டுவிட்டு, கடைசியில், "அதெல்லாம் உண்மையல்ல" என்ற குண்டு போட்டார். எழுதுவது யார் என்று தெரிவிக்காமல் உலக நடப்புகளை எழுத வைத்து, அவற்றை எழுதியது ஜெயலலிதா என்று பிறகு அறிவித்தார். விளையாட்டாக பத்திரிகையைத் தொடங்கியிருந்தாலும் எந்தவிதச் சமரசங்களையும் செய்துகொள்ளாமல் அதைத் தொடர்ந்ததுடன் மாதம் இரு முறை என்பதை வாராந்தரியாக மாற்றினார். 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற ஆங்கில சஞ்சிகையைத் தொடங்கினாலும் அது கையைக் கடிக்கும் என்று தெரிந்ததுடன் நிறுத்திக்கொண்டார்.

தன்னுடைய வலிமை, வலிமையின்மை இரண்டையும் உணர்ந்து செயல்பட்டதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். அதிகம் அலட்டிக்கொள்ளாத வாழ்க்கைபோலத் தோன்றினாலும், அலட்டிக்கொள்ளாத மனம் அது என்று அவருடைய பணிகளைச் செய்யும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களுக்குப் புரியும். தமிழ்ப் பத்திரிகையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க குரல் அது. சம்பிரதாயமான சொற் களாக இருக்கலாம்; உண்மையாகவே சோவின் குரல் யாராலும் பூர்த்திசெய்ய இயலாதது!

வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x