Published : 26 Dec 2016 10:16 AM
Last Updated : 26 Dec 2016 10:16 AM

இப்படிக்கு இவர்கள்: நடவடிக்கை வேண்டும்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், சென்னை போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைச் சந்தித்தார்கள் என்ற செய்தி வேதனை அளிக்கும் ஒன்று. ஆட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாத இவரைச் சந்தித்ததும், கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டதும் இவர்கள் வகிக்கும் பதவிக்கே இழுக்கு. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சாதாரண அரசியல்வாதிகளைப் போல் இவர்கள் அவருக்கு விசுவாசம் காட்ட வேண்டிய அவசியமென்ன?

- தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.



பாஜகவின் தவறு மட்டுமல்ல!

டிசம்பர் 23 அன்று ‘என்ன நினைக்கிறது தமிழகம்?’ பகுதியில் வெளியான பதிவர் ஷாஜஹானின் பதிவைக் கண்டேன். டெல்லியில், ஆறு ஆண்டுகளாகக் காவல் துறையினர் ரோந்து சுற்றும் வாகனங்களுக்கு வாடகையாக ரூ.300 கோடி அளிக்கப்பட்டதற்கு பாஜக அரசைச் சாடியிருந்தார். டெல்லி காவல் துறை நிர்வாகம் மத்திய அரசின் கீழ் வருவது என்றாலும், மோடி அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள்தானே ஆகின்றன? ஆறு வருடங்கள் என்றால், இத்திட்டத்துக்கு வித்திட்ட காங்கிரஸ் அரசும் அல்லவா குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்?

- முத்து, மின்னஞ்சல் வாயிலாக...



வேடிக்கையான வேதனை

பேரிடர் மேலாண்மை என்பது, இடருக்குப் பின் செயல்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, விழிப்புடன் செயல்பட வேண்டிய ஒன்று. பேரிடர் மேலாண்மைக்கான பல அடிப்படை விவரங்களைக் கொண்ட அரசின் இணைய தளம் ஒன்று உள்ளது. அதில் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக்கூடிய பேரிடர் மீட்புக் கருவிகள், கனரக வாகன விவரங்கள், ஆம்புலன்ஸ், அதன் ஓட்டுநர், சிறப்பு மருத்துவர்கள் போன்ற பல்வேறு பேரிடர் கால அவசரத் தேவைகள் பற்றிய முழு விவரங்களையும் முறையாகப் பதிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் இணையத்திலோ, பல வருடங்களுக்கு முன் பதிந்து வைத்துள்ள பழைய விவரங்களை மட்டுமே காண முடிகிறது. இணையதள விவரங்கள் முறையாக ஆட்சியாளர்களால் புதுப்பிக்கப்பட வேண்டும். டிசம்பர் 21-ம் தேதி வெளியான, ‘பேரிடர்களை எதிர்கொள்ள இன்னும் நாம் பழகவில்லை’ தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல், ஆட்சியாளர்கள் இன்னும் நிறையப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

- பி.ஆறுமுகநயினார், தச்சநல்லூர்.



முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புயல் எச்சரிக்கை வந்தால், கிராமங்களில் அடர்ந்த மரங்களின் கிளைகளை வெட்டியும், இலைகளைக் கழித்தும் விடுவார்கள். அதுபோன்று சென்னையிலும் செய்திருந்தால் ஓரளவு மரங்களைக் காப்பாற்றியிருக்க முடியும். தானே புயல் முன்னேச்சரிக்கை வந்தவுடன் எங்கள் ஊரில் அடர்ந்த மரங்களின் கிளைகளை வெட்டிப் பல மரங்களைக் காப்பற்றினோம்.

- மா.பா.இராஜீவ், மின்னஞ்சல் வழியாக.



நொய்யல் தந்த ரணம்

கா.சு.வேலாயுதன் எழுதிவரும் நொய்யல் ஆறு பற்றிய தொடரில், ‘காட்டாறுகளையே காணாமல் போகச்செய்த விதிமீறல்கள்’கட்டுரையைப் படித்ததும் (டிச.22) நெஞ்சில் வலி ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான நீரோடைகளை ரியல் எஸ்டேட்காரர்கள், பெரிய கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், பண்ணை வீடுகள், செங்கல் சூளைக்காரர்கள், மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஆகியோர் ஆக்கிரமித்துவிட்டதால், நொய்யலுக்கு வரும் நீர்வழித் தடங்களே அடைபட்டுப்போயின. அரசு தக்க நடவடிக்கை எடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நொய்யலை ஜீவநதி ஆக்குமா?

- ந.பாலகிருஷ்ணன், கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x