Last Updated : 20 Jul, 2014 09:18 AM

 

Published : 20 Jul 2014 09:18 AM
Last Updated : 20 Jul 2014 09:18 AM

வரலாற்றில் இந்துத்துவா

இந்தியாவும் இந்தியக் கலாச்சாரமும் காலந்தோறும் வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பது இந்துத்துவச் சிந்தனையாளர்களின் எண்ணம்.

இருவேறு தேசிய சித்தாந்தங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை, ‘ஒரு வரலாறு உருவாகிறது' (ஹிஸ்ட்ரி இன் த மேக்கிங்) என்ற தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில் எழுத்தாளர் ஜே.எச். எலியட் மிகவும் ருசிகரமாக விவரித்திருக்கிறார். ஒரு பக்கத்தில், தங்களுடைய நாடுதான் கடவுளால் ‘தெரிவுசெய்யப்பட்ட' - ஆன்மிகத்தில், உயிரியலில், இனத்தில் தனித்தன்மை வாய்ந்த - நாடு என்ற மனோபாவம்; அந்த மனோபாவம் காரணமாக உலக விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் போக்கு. இன்னொரு புறம், ‘பாதிக்கப்பட்ட' நாடு என்ற மனோபாவம். ஒரு ஏழை நாடு அல்லது போரில் தோற்ற நாடு, தன்னுடைய துயரங்களுக்கும் துரதிர்ஷ்டங்களுக்கெல்லாம் பிற நாடுகள்தான் காரணம் என்று கூறி சொந்த நாட்டின் குறைகளை, தோல்விகளைப் பார்க்க மறுக்கும் மனோபாவம்.

ஐரோப்பிய, வட அமெரிக்காவில் ஆதிக்க மனோபாவத் துக்கு ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடு களையும், கழிவிரக்க மனப்பான்மைக்கு போலந்து, செர்பியா போன்றவற்றையும் எலியட் உதாரணமாகக் காட்டுகிறார்.

எலியட்டின் இந்தக் கருத்து எந்த அளவுக்கு தெற்காசிய நாடுகளுக்குப் பொருந்துகிறது?

பாகிஸ்தான், வங்கதேசம்

பாகிஸ்தான் உருவாகி 66 ஆண்டுகள் ஆன பிறகும், தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவும் அதனாலேயே பின்தங்கியிருப்பதாகவும் அந்நாட்டுத் தலைவர்கள் நினைக்கின்றனர். தங்களுடைய பிரச்சினைகளுக்கு எல்லாம் வெளிநாட்டவர்கள்தான் காரணம் என்று பல பாகிஸ் தானியர்கள் இப்போதும் குற்றம்சாட்டுகின்றனர். பலர், இந்தியாவை ராட்சசனாகச் சித்தரிக்கின்றனர்; மேலும் பலர், அமெரிக்காவை எதிரியாகக் கருதுகின்றனர். பக்கத்து இந்து நாடும், வல்லரசான கிறிஸ்தவ நாடும்தான் தங்கள் நாட்டு மக்களிடையே நிலவும் இன அடிப்படையிலான மோதல்களுக்கும், அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கும், பொருளாதாரத்தில் பாதுகாப்பற்ற நிலைமைக்கும், பிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று சாடுகின்றனர்.

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்று 42 ஆண்டுகள் ஆன பிறகும், தான் இன்னமும் பாதிக்கப்பட்ட நாடு என்றே வங்கதேசம் கருதிக்கொள்கிறது. பாகிஸ்தானிய ஆட்சியா ளர்களின் அடக்குமுறைகள் அதன் நினைவிலிருந்து இன்னமும் நீங்கவில்லை, பொது விவாதங்களில் அது வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இத்துடன், பக்கத்து நாடான இந்தியா, ‘பெரிய அண்ணன்' தோரணையில் தங்களை ஆதிக்கம் செலுத்துவதாகப் புதிய குற்றச்சாட்டும் சேர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், வங்கதேசத்தில் உள்ள படித்த மக்களும், விழிப்புணர்வு மிக்கோரும், தங்களுடைய பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தாங்கள்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

இந்திய தேசிய மனோபாவம் எப்படி?

எல்லாம் சரி, இந்திய தேசிய மனோபாவம் எப்படிப்பட்டது? இந்தியாவின் முன்னணிச் சிந்தனையாளர்களின் செல்வாக்கு காரணமாக, தாங்களும் பிற நாடுகளின் ஆக்கிரமிப்பாலும் தலையீட்டாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டதாக இந்தியர்கள் நினைப்பதில்லை. பிரிட்டிஷாரின் ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டும் என்று போரிட்ட இந்தியத் தலைவர்களும் சீர்திருத்தவாதிகளும் தங்கள் சமூகத்தில் உள்ள அவலங்களை முதலில் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து சிறிதும் விலகவில்லை. 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கோபால கிருஷ்ண கோகலேயும் ஜோதிபா புலேயும் தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு நம்மை ஆளும் ஆங்கிலேயர்கள் எந்த விதத்திலும் காரண மில்லை, நம்முடைய பாரம்பரிய வர்ணாசிரம சிந்தனைகளும் செயல்களும்தான் காரணம் என்று சரியாக அடையாளம் கண்டனர்.

திறந்த மனதுடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ஆத்ம பரிசோதனை 20-வது நூற்றாண்டிலும் தேசியத் தலைவர் களால் தொடர்ந்தது. “உலகின் எந்தப் பகுதியில் ஞான விளக்கு ஏற்றப்பட்டாலும் இந்தியர்கள் அதன் ஒளியில் பயன்பெற வேண்டும்” என்றார் ரவீந்திரநாத் தாகூர். காந்தியின் இயக்கம் காரணமாக வெளிநாட்டவர்கள் என்றாலே வெறுக்கும் போக்கு மக்களிடையே பரவி விடும் என்று தோன்றியதால், காந்தியிடமே இதைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தும் பணியைச் செய்தார் தாகூர். இதையடுத்து காந்தி தனது தவறைத் திருத்திக்கொண்டார். மேற்கத்திய நாடுகளையும் அமைப்புகளையும் வெறுக்கத் தக்கவையாகச் சித்தரிக்கும் போக்கைக் கைவிட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பிரிட்டனுடன் இந்தியா சரிசமமான கூட்டாளியாவதையும், அதன் சுகதுக்கங்களில் பங்கேற்பதையும் பார்க்க விரும்புவதாக 1930-களில் காந்தி பேச ஆரம்பித்தார்.

காந்தியும் தாகூரும் கொண்டிருந்த தேசிய உணர்வு, தங்களை மற்றவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்பதால் ஏற்பட்ட கழிவிரக்கமோ, கலாச்சார - இன அடிப்படையிலான கர்வமோ அல்ல; அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர் கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சித்தாந்தங்கள் அடிப்படையில் அல்லாமல் அவர்கள் கொண்டிருந்த தேசிய உணர்வு, அப்போதே சவாலைச் சந்திக்க நேர்ந்தது. இப்போது நாம் அடையாளப்படுத்தியுள்ள இந்துத்துவா என்ற கொள்கையை 1930-களிலும் 1940-களிலும் இரண்டு தனிநபர்களும் இரண்டு இயக்கங்களும் முன்னிறுத்தினார்கள். அவர்கள், இந்து மகாசபையின் விநாயக் தாமோதர் சாவர்க்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்கின் (ஆர்.எஸ்.எஸ்.) மாதவ சதாசிவ கோல்வால்கர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் கடைசிப் பகுதியில், இந்துத்துவா கருத்துகளுக்கு அரசியல்ரீதியாக மிகச் சிலரே ஆதரவு தெரிவித்தனர். நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுகளில் அரசியல்ரீதியாக செல்வாக்கற்றதாகவே அந்தக் கருத்துகள் இருந்தன. 1980-களின் தொடக்கத்திலிருந்து படிப்படியாக அவற்றுக்கு ஆதரவு பெருகியது. அந்தக் கருத்துகளை ஆதரிப்போர் சில மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தனர். 1998-2004 வரை அந்தக் கட்சியினர் மத்திய அரசிலும் ஆட்சியைப் பிடித்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 16-வது மக்களவைப் பொதுத் தேர்தலில் இந்துத்துவா ஆதரவாளர்கள் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

எலியட்டின் பார்வையில் இந்துத்துவா

ஜே.எச். எலியட் வகுத்தளித்த இலக்கணப்படி, இந்துத்துவாவை எப்படி எடைபோடுவது? முதல் பார்வையில் இது, ‘பாதிக்கப்பட்ட நாடு' என்ற சித்தாந்தத்தின் வெளிப் பாடாக இருக்கிறது. 11-வது நூற்றாண்டில் குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் மீது முகம்மது கஜினி படையெடுத்தது, 17-வது நூற்றாண்டில் இந்துக்கள் மீது ஜிஸியா என்ற வரியை மன்னர் ஔரங்கசீப் விதித்தது, 18-வது நூற்றாண்டில் வங்கத்தின் பிளாசி என்ற இடத்தில் ராபர்ட் கிளைவிடம் இந்தியர்கள் போரில் தோற்றது, 19-வது நூற்றாண்டில் மெக்காலே என்ற ஆட்சியாளர் ஆங்கிலக் கல்வியை இந்தியர்கள் மீது திணித்தது, 20-வது நூற்றாண்டில் - ஜின்னா வலியுறுத்தி, நேரு ஒத்துழைத்து - பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது ஆகிய அனைத்தும் இந்து சமுதாயத்தின் மீது மற்றவர்கள் நடத்திய தாக்குதல்கள் என்று இந்துத்துவா ஆதரவாளர்கள் பட்டியலிடுகின்றனர்.

அதே சமயம், இந்துத்துவா என்ற சிந்தனை இந்து சமூகத்தின் தனிச் சிறப்பையும் ஈடுஇணையற்ற தன்மை யையும் புகழ்ந்து பேசுகிறது. புனித நூல்களிலேயே மிகவும் புராதன மானவை இந்திய வேதங்கள். வேதாந்தக் கருத்துகளைத் தொகுத்தும் விரித்தும் சொல்வதில் உபநிடதங்களும் கீதையும் உயர்வானவை. வேதகால இந்துக்கள் அறிவியல் முன்னோடிகள், வானியலில் அவர்களுடைய பங்கு மகத்தானது, கணிதத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பூஜ்யத்தைக் கண்டுபிடித்ததே இந்தியாதான் என்று பட்டியலிடுவார்கள்.

பத்தாண்டுகளோ அதற்கும் மேலோ மத்தியில் பாஜக ஆட்சி செய்தால், இந்தியா மிகப் பெரிய வல்லரசாகிவிடும் என்று கூறுவோர் பலர் உள்ளார்கள். நாடு இப்போது பொருளாதாரரீதியாகப் பின்தங்கியும் அரசியல்ரீதியாக வலுவற்றும் இருக்கிறது. ஆனால், உலகின் பிற நாடு களைவிட, பிற நாகரிகங்களைவிட, இந்தியர்களின் கலாச்சாரம்தான் உயர்வானது என்பதால், உலகுக்கே வழிகாட்டும் இடத்தில் இந்தியாதான் இருக்கிறது என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இந்துக்கள் மீண்டும் செல்வந்தர்களாகி, வலுப்பெற்று உலகையே மாற்றி அமைக்கப்போகிறார்கள் என்று பலர் கூறிவருகின்றனர்.

இந்துக்கள் உலகையே ஆளும் தகுதி படைத்தவர்கள் என்று முதலில் கூறியவர் ஜனசங்கத்தை உருவாக்கிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி. இந்துத்துவா மீண்டும் தழைப்பதால், இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான மக்கள் மட்டும் அல்ல, உலகம் முழுக்க உள்ள மக்கள் அனைவரும் இன்னல்கள் நீங்கி மேன்மை பெறுவர் என்று பிலாஸ்பூரில் 1944 டிசம்பரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் டாக்டர் முகர்ஜி. “மேற்கத்திய நாடுகள் செல்வத் துக்குத்தான் முதலிடம் தருகின்றன, இந்தியா மட்டுமே மனிதனின் ஆன்மத் தேடலுக்கு விடை சொல்கிறது” என்பது அவருடைய வாதம். புதிய மனித நாகரிகம் ஏற்பட இந்துத்துவாவால்தான் சரியான வழிகாட்ட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை.

இந்துத்துவா தனித்தன்மை உடையதா?

ஒரே சமயத்தில் - பாதிக்கப்பட்டதாகவும், தனிச் சிறப்பு வாய்ந்ததாகவும் - கூறப்படும் இந்துத்துவா தனித்தன்மை உடையதா? யூதர்களும் இதையேதான் கூறிவந்தனர். உலகுக்கே வழிகாட்டக்கூடியவர்கள் தாங்கள்தான் என்றும், கடவுளுடன் தங்களுக்கே நெருக்கமான உறவு இருப்பதாகவும் கூறினர். இரு தரப்பினரிடையேயும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. யூதர்கள் தங்களுக்கு வாக்களிக் கப்பட்ட இடம் என்று கருதுவது பரப்பில் மிகச் சிறியது. ஆனால், இந்துத்துவா ஆதரவாளர்கள் அடைய விரும்பும் அகண்ட பாரதமோ அளவில் மிகப் பெரியது. யூதர்கள், இஸ்ரேல் - பாலஸ்தீன நிலப்பரப்பைத் தவிர, பிற பகுதிகளுக்குத் தங்களுடைய கலாச்சாரத்தைக் கொண்டுசெல்ல விரும்புவதில்லை. இந்துத்துவவாதிகளோ இந்துத்துவச் சிந்தனைகள், வாழ்க்கை முறையின் சிறப்பை உணர்ந்து மற்றவர்கள் அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்று கருதுகின்றனர்.

இந்துத்துவச் சிந்தனையில் மேலதிகமாக இருப்பது, தங்களைப் பல்லாண்டுகளாக மற்றவர்கள் அடிமைப்படுத்தி விட்டார்கள் என்பது. அதே சமயம், இதிலிருந்து விடுபட்டு மீண்டும் செல்வாக்கு பெறுவோம் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த வகையில், இந்துத்துவா தனித்துவம் மிக்கது, இணை ஏதும் இல்லாதது - அதாவது, அச்சமும் பெருமிதமும் ஒருசேரக் கலந்தது.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி' உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்; தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x