Last Updated : 08 Nov, 2016 09:31 AM

 

Published : 08 Nov 2016 09:31 AM
Last Updated : 08 Nov 2016 09:31 AM

நெருக்கடி நிலைக்குத் தொடர்பு கொள்ள ‘2016’

மாற்று வரலாறுக்கான இந்தப் பருவத் தில், இந்திரா காந்தி காலத்திய நெருக்கடி நிலைக்கு மாற்று ஒன்றைச் சிந்திக்க முடியுமா? சுதந்திர இந்தியாவின் இருண்ட காலம் அது; அதை எதிர்க்கும் துணிவு இல்லாமல் சமுதாயத்தின் பல தரப்பினர் - இதழியல் துறையினர் உள்பட - அதை ஏற்றுக்கொண்டனர்; நீதித்துறை அதற்கு எதிரான போராட்டத்தில் பின்னர் இணைந்துகொண்டது. அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேவ் காந்த் பரூவாவின் “இந்திரா தான் இந்தியா” கோஷமும் இந்திராவின் புதல்வர் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகளும் மக்களுடைய கோபத்தை நிறையவே கிளறின.

பிரதமர் மோடி இப்போது நெருக்கடி நிலை குறித்து அடிக்கடி நினைவூட்டிப் பேசுகிறார்; அது மீண்டும் வராமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார். இந்தியன் எக்ஸ் பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ராம் நாத் கோயங்கா பெயரிலான விருதுகளைப் பத்திரி கையாளர்களுக்கு அளித்தபோது கூட மோடி இதைப் பேசினார். நெருக்கடி காலத்தில் அதை எதிர்த்த இந்தியப் பத்திரிகைத் துறையின் பெருமைக்குரிய முகமாக கோயங்கா இருந்தார். நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியிருக்கலாம், ஆனால் அத்தகைய எதேச்சாதி கார நிர்வாகம் மீண்டும் திரும்புவதற்கான ஆபத்து காத்திருக்கிறது. பதான்கோட்டில் ராணுவ முகாம் மீது ஊடுருவல்காரர்கள் நிகழ்த்திய தாக்குதலை, செய்தியாக ஒளிபரப்பிய விதம் செய்தி, ஒலிபரப்புத்துறை வகுத்தளித்த நடத்தை நெறிகளை மீறியதாக இருந்ததால், ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்துமாறு என்.டி.டி.வி.க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள சமயத்தில், மோடி இப்படிப் பேசியிருப்பதும் நிகழ்ந்திருக்கிறது.

மோடியின் பேச்சும், மத்திய அரசின் தடை ஆணையும் ஒரே சமயத்தில் தற்செயலாகத்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வோம். மீண்டும் நெருக்கடி நிலை வராமல் விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் பேசியது பிரசுரமான அதே நாளில், இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (இ.ஜி.ஐ.) என்.டி.டி.வி.க்கு விதித்த தடையைக் கண்டித்ததுடன் அதை நெருக்கடி கால அடக்குமுறையோடு ஒப் பிட்டது. இச்சங்கம் எந்த அறிக்கையாக இருந்தா லும் மிகுந்த சுயகட்டுப்பாட்டோடு, மிதமான வார்த் தைகளைப் பயன்படுத்தி, மிகுந்த நிதானத்தோடு கருத்துகளைத் தெரிவிக்கும். ஆனால் என்.டி.டி.வி. மீதான தடை மட்டும், வெடிமருந்தும் கார மிளகாயும் கலந்த வார்த்தைகளில் கண்டிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“ஆட்சியில் இருப்பவர்கள், சற்றே குனியுங்கள் என்று சொன்னால், தவழ்ந்தேவிடுவதுதான் இந்தியப் பத்திரிகைகளின் வழக்கமாக இருக்கிறது” என்று மூத்த அரசியல் தலைவர் அத்வானி ஒரு காலத்தில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. நெருக்கடி நிலை காலத்தில் ராம்நாத் கோயங்கா வின் இந்தியன் எக்ஸ்பிரஸ், இரானியின் ஸ்டேட்ஸ் மேன், ராஜ்மோகன் காந்தியின் ஹிம்மத் ஆகிய சில பத்திரிகைகள் மட்டுமே அரசை தீரமுடன் எதிர்த்தன. இந்திரா காந்திக்கு தேசியப் பத்திரிகை கள் மீது ஒருவித எரிச்சல் இருந்தது. ‘வங்கதேசப் போரில் கிடைத்த வெற்றி அவரது கண்ணை மறைத்தது; பணவீக்க விகிதம் 25% என்ற அளவைத் தாண்டியதால், 1974-ல் பொக்ரானில் அவர் நடத்திய அணுகுண்டு பரிசோதனை மக்களுடைய கோபத்தை ஆற்றவில்லை. நெருக்கடி நிலை காலத்திய கதாநாயகப் பத்திரிகையாளரான பி.ஜி. வர்கீஸ், சிக்கிமை இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டது தொடர்பாக எழுதிய தலையங்கத்தில், அதை இணைப்பு என்று சொல்லாமல், பலவந்த மான சேர்ப்பு என்றே துணிச்சலாக எழுதினார். இதற்காக அவரைத் தேச விரோதி என்றார்கள். அப்போதைய பத்திரிகையாளர்கள் ஒருவர் கூட அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை.

இப்போது என்.டி.டி.வி. விவகாரத்திலும் அதே நிலையைப் பார்க்கலாம். பத்திரிகை ஆசிரியர் சங்கம் எதிர்க்கும், பத்திரிகைகள் எதிர்க்கும், ஆனால் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனங் கள் எதிர்க்காது. அதி தீவிர தேசபக்த தொலைக் காட்சிகள் - போபாலில் நடந்த போலி என்கவுன்டர் பற்றிய செய்திகளையே தவிர்க்குமாறு கூறின.

தேசிய நலன் மீது நமக்கிருக்கும் ‘அக்கறை’ காரணமாகத்தான், உரி ராணுவ முகாம் மீது ஊடுருவல்காரர்களால் எப்படித் தாக்க முடிந்தது என்ற கேள்விகளை எழுப்ப முடியாமல் போனது! கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகில் இப்போது அன்றாடம் சிலர் இறப்பதைக் கூட நாம் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. பாகிஸ்தானுடனான பிரச்சினையை எதிர்கொள்ள மோடி அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம். இதற்கு முன்பு ஆட்சி செய்த 5 அரசுகள், பாகிஸ்தானின் சீண்டலுக்கு ராணுவரீதி யாகப் பதில் அளிக்காமல் பொறுமையாக இருப்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தன.

மோடி தோவல் கொள்கை அதற்கு மாறாக இருக்கிறது. நெருக்கடி நிலையை அமல்படுத்து வதற்கு முன்னால் இந்திரா காந்தியும் அதிதீவிர தேச பக்திக் கனலை மூட்ட முயற்சி செய்தார், பிறகு அத்தகைய செயல்களை நியாயப்படுத்தி னார். வங்கதேசத்தில் முஜிபுர் ரெஹ்மான் கொல்லப் பட்டது, சிலியில் சால்வடார் அலண்டே கொலை செய்யப்பட்டது இரண்டிலுமே வெளிநாட்டின் பங்கு இருந்ததைச் சுட்டிக்காட்டி, ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான ‘முழுப் புரட்சி’ இயக் கத்தின் பின்னணியிலும் வெளிநாடுகளுக்குப் பங்கு இருப்பதாகக் கூறி நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார். உள்நாட்டிலும் வெளிநாடுகளி லும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் மிகமிகக் குறைவாக இருந்தபோது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை இலக்குகளை அடைய பலவந்தமாக மக்கள் பிடிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத் தப்பட்டது போன்ற கொடுமைகள் நடந்தாலும் மேல்தட்டு வர்க்கமும் பெரும்பாலான நடுத்தர வர்க்கமும் அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. 1977 மக்களவைப் பொதுத் தேர்தலில் வட இந்தியா முழுவதிலும் தோல்வி அடைந்த இந்திரா காந்தி, விந்திய மலைக்குத் தெற்கே தென் மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதற்கு என்ன காரணத்தைக் கூற முடியும்?

பத்திரிகைகளின் குரல் முறிக்கப்பட்டபோது, ஏழைகள் அறுவைச் சிகிச்சைகள் மூலமும், ஆக்கிர மிப்புகள் அகற்றல் மூலமும் தாக்கப்பட்டபோது 1975-77-ல் நாம் மெத்தனமாகவே இருந்தோம். இப்போதும் என்.டி.டி.வி. தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒரு நாள் நிறுத்துமாறு அரசு உத்தர விட்ட போதும், போபாலில் ‘போலி மோதல்களை’ போலீஸார் நிகழ்த்தியபோதும், கலாச்சார தேசிய வாதம் குறித்து அரசு சிலவற்றைக் கட்டாயப் படுத்தும்போதும் நாம் மவுனமாகவே இருக்கிறோம். இப்போது நம் நாட்டில் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய, தெளிவான தலைமை உள்ள, தேசிய அளவிலான, ஒரே சமூக அரசியல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். 1975-77-ல் அது நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்துக்குத் தலைமை தாங்கியது. இப்போது அது ஆளும் அரசுக்குத் தலைமை தாங்குகிறது.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x