Published : 13 Oct 2016 05:50 PM
Last Updated : 13 Oct 2016 05:50 PM

கல்வியும் விளையாட்டும்

காலியாக உள்ள மைதானங்கள் பற்றிய கட்டுரை காலத்தால் தேவையானது. பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வணிக மையப் பள்ளிகள் மைதானம் இல்லாமலேயே செயல்படுகின்றன. பாடத்திட்டத்தின்படி வாரத்தில் பள்ளி நேரத்தில் இரண்டு பிரிவுவேளையும், பள்ளி நேரத்துக்கு அப்பால் இரண்டு பிரிவுவேளையும் விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். இது கைவிடப்பட்டது மாணவர் உரிமைப் பறிப்பே ஆகும். ஆசிரியர் வராதபோது ‘போய் விளையாடுங்கள்’என்று சொன்னால், மாணவர் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு மைதானம் விரைவர். ஒவ்வொரு ஒலிம்பிக்குக்குப் பின் ஒப்பாரி வைப்பதை விட்டு, பள்ளிப் பருவத்திலேயே மாணவரது விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து வளர்க்க வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



வரவேற்கத்தக்க கோரிக்கை

கடந்த காலங்களில் நடந்தவை எப்படியிருந்தாலும், இனி வரும் காலங்களில் அடித்தட்டு மக்கள் முதல் முதல்வர் வரை அனைத்துத் தரப்பினரும் மருத்துவம் பெறும் வகையில் உலகத் தரம் மிக்க மருத்துவமனைகளை சென்னையிலும், மதுரையிலும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மருத்துவர் ராமதாஸின் கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் அரசு, ‘மருத்துவக் காப்புறுதித் திட்டம்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு மடை திருப்பி அவர்களைக் கொழுக்க வைக்க உதவியாக இருக்கிறதே! அப்புறம் அரசு மருத்துவமனைகள் சவலைப்பிள்ளையாகாமல் என்னவாகும்?

- வேழவேந்தன் கருப்பையா, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



தலைவர் வேறு.. அரசியல்வாதி வேறு

சீன் போதும்... பேரம் பேசுங்கள் - கட்டுரை தமிழக அரசியலாளர்களுக்கு ஒன்றும் தெரியாததல்ல, புரியாததல்ல. ஆனால், தூங்குபவர்களைத்தான் எழுப்ப இயலும். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப இயலும்? திராவிடக் கட்சிகளா னாலும் சரி, அல்லது தேசியக் கட்சிகளானாலும் சரி.. தலைமையின் சுய லாபத்தைப் பொறுத்துதான் இவர்களின் அரசியல் பேரம் அமையும். ஏனெனில், துரதிர்ஷ்ட வசமாகத் நமது தற்போதைய தலைவர்கள் வெற்று அரசியல் வாதிகளே தவிர, மக்களின் நலம் கருதும் தலைவர்கள் அல்லவே!

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.



மருத்துவ மலர்

குங்குமப்பூவைப் பற்றி வெளியான கட்டுரையில் அதன் பிறப்பிடம், மருத்துவப் பயன்கள், போலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது, சமையலில் எப்படி உபயோகிப்பது போன்ற செய்திகள் பயனுள்ளதாக இருந்தன. சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை விடுத்து, மருத்துவப் பயன்பாட்டுக்கான மூலிகை என்பதையும் அறிந்துகொண்டேன்.

- உ.சபாநாயகம், சிதம்பரம்.



தேசியக் கொடிக்கு அவமதிப்பு!

தாத்ரி கொலை வழக்கில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர் ரவி சிரோடியா. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர் ஒருவரைக் கொன்ற அவர், சிறையில் இறந்திருக்கிறார். அவரைத் தியாகியாகக் கருதி, அவரின் உடலுக்கு தேசியக் கொடியைப் போர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.

- வாஹித் மாலிமார், பாண்டிச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x