Last Updated : 23 Aug, 2022 05:29 AM

 

Published : 23 Aug 2022 05:29 AM
Last Updated : 23 Aug 2022 05:29 AM

சுதந்திரச் சுடர்கள் | மருத்துவம்: மனநல நரம்பியல் நிறுவனம்

மனநலம், நரம்பியல் தொடர்பான சிகிச்சையிலும், கல்வியிலும் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் தேசிய மனநல நரம்பியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்).

சார்லஸ் இர்விங் ஸ்மித் எனும் மருத்துவரால் 1847இல் தோற்றுவிக்கப்பட்ட பெங்களூர் மனநலக் காப்பகத்திலிருந்து இதன் வரலாறு தொடங்குகிறது. அந்தக் காப்பகம் 1925இல் மைசூர் மனநல மருத்துவமனையானது. இந்த மருத்துவமனையே 1974இல் அகில இந்திய மனநல நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய மனநல, நரம்பியல் நிறுவனம் ஆக்கப்பட்டது.

மனநலச் சிகிச்சையில் மட்டுமல்லாமல், மனநலக் கல்வியிலும், மனநலம் தொடர்பான ஆய்வுகளிலும் இதுவே இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக விளங்குகிறது.

கல்வி, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக 1975 இல் அங்கே திறக்கப்பட்ட மனித மூளை மாதிரிகளைச் சேகரிக்கும் நரம்பியல் அருங்காட்சியகம், உலக அளவில் பிரசித்திபெற்றது. மனநலக் கல்வி மேம்பாட்டில் ஆற்றிவரும் அளப்பரிய சேவையைக் கருத்தில்கொண்டு 1994இல் இந்த நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.

மனநலம் குறித்த தவறான புரிதலை நீக்கி, அது குறித்து வெளிப்படையாக உரையாடும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் பணியில் நிம்ஹான்ஸ் தீவிரமாக இயங்கிவருகிறது. இன்று இந்தியாவில் அதிகரித்திருக்கும் மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கு, நிம்ஹான்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கும் சமூகக் களப்பணிகளுக்கும் முக்கியப் பங்குண்டு.

மனநலம் தொடர்பாக ஆண்டுதோறும் நிம்ஹான்ஸ் நடத்தும் தேசிய மனநலக் கணக்கெடுப்பு அதன் சமூகக் களப்பணிகளில் முக்கியமானது.

- ஹுசைன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x