Published : 04 Oct 2016 10:38 AM
Last Updated : 04 Oct 2016 10:38 AM

கீழடியும் தமிழர் வரலாறும்!

சு.வெங்கடேசன் எழுதிய ‘யாசகம் கேட்கும் தொல் நகரம்’ எனும் கட்டுரையையும், அதைத் தொடர்ந்து ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன், பெ.மணியரசன், கருணாநிதி, சீமான் போன்றோரின் அதுகுறித்த கோரிக்கையையும் தொடர்ச்சியாக வெளியிடும் ‘தி இந்து’ நாளிதழுக்குப் பாராட்டுகள். உலகில் வரலாற்றுத் தொன்மையற்ற பல இனங்கள், புனைவுகளாக (மாய யதார்த்தவாதம்) இலக்கியங்களை உருவாக்கி பெருமிதங்களைக் கட்டமைக்க முயல்கின்றன. ஆனால், இயல்பாகவே தொன்மையும், வரலாற்றுத் தொடர்ச்சியும், பெருமிதமும் உடைய தமிழினமோ அது குறித்த அக்கறை சிறிதுமற்று இருக்கிறது. கீழடியில் இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவுற்ற நிலையில், அவ்விடத்துக்குச் சென்று பார்வையிட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு. இத்தகைய நம் மக்களின் அலட்சியப் போக்குகளின் நீட்சியே தமிழக அரசு நிலம் ஒதுக்காததற்கும் பொருந்தும்.

- நா.இராசாரகுநாதன், நடுவண் குழு
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.



ஆட்சிக் கட்டிலையும், அளவற்ற பல தலைமுறைக்கும் அழியா செல்வத்தையும் தமிழால் பெற்றவர்கள், தானாகவே முன்வந்து தேவையான சிறு துண்டு நிலத்தை வழங்கலாம். தமிழர்களின் பாரம்பரியம், மூட்டையில் முடங்கும் அபாயம் தவிர்க்க தமிழார்வலர்கள் ஏதாவது செய்ய முன்வர வேண்டும் என்ற அகழ்வாராய்ச்சி குறித்த சு.வெங்கடேசன் கட்டுரையின் கடைசி வரிகள் மனதைத் தொட்டன.

- நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.



நிதானமும் நடவடிக்கையும்

பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், நிதானித்து, நன்கு பரிசீலித்து எடுக்க வேண்டியது அவசியம் என்று ‘நிதானம்தான் பலன் தரும்’ என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இது கவனத்தில் கொள்ள வேண்டிய யோசனைதான். ஆனால், எந்த எதிர்வினை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அது நமது பலவீனமாகிவிடாதா? 18 வீரர்கள் பலியானதற்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே? நமது சகிப்புத்தன்மை, நிதானம் எதிரிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கத் தூண்டுகிறதே, அதற்குப் பதில் என்ன?

- மு.செல்வராஜ், மதுரை.



முதுமை தண்டனை தரும்

துணையோடு அரசு மருத்துவமனைக்குச் செல்லும் முதியோர்களின் துயர் சொல்லி மாளாது. தனியே செல்லும் முதியோர்களின் கதி அதோ கதிதான். நடக்க இயலாத, கண் தெரியாத, காது கேளாத முதியோரை நடத்துவதில் அடிப்படைப் பணியாளர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரிடமும் ஒருமித்த அணுகுமுறைதான் ‘நீ இருந்து என்ன ஆகப்போகுது?’ என்ற ஏளனம் மிக்க கேள்விகள் இங்கு வரும் முதியோர்களிடம் கேட்கப்படுகின்றன. அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? இவர்களுக்கு அரசாலோ நீதிமன்றத்தாலோ தண்டனை தர இயலாது. மாறாக, அவர்களின் முதுமையே தரும்!

- ந.ச.நடராசன், மேல்புதுப்பேட்டை.



நூலும் அறிவியலும்

மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இயக்கமாக, ‘நூல்வெளி’ பகுதி மாற்றிவருகிறது. மக்கள் தங்கள் வீடுதோறும் நூலகம் அமைத்து, அறிவை விருத்தி செய்ய வேண்டும். ‘அறிவியல் அறிவோம்’ பகுதியில் வெளியான, த.வி.வெங்கடேஸ்வரனின் தொடர் சிறப்பாக இருக்கிறது. மூப்படைந்தவர்களுக்கும் வாலிபர்களுக்கும் உள்அவயங்களில் ஏற்படும் மாறுதல்களை மிக விளக்கமாக ‘வயதாவதைத் தள்ளிப்போட முடியுமா?’ கட்டுரை விவரித்திருந்தது.

- எம்.லோகநாதன். சிகரலப்பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x