Published : 18 Oct 2016 09:32 AM
Last Updated : 18 Oct 2016 09:32 AM

என்ன நினைக்கிறது உலகம்?- பட்டினியை ஒழிப்பதில் வேகம் தேவை!

உலகளாவிய பட்டினி குறியீட்டு எண் (ஜி.ஹெச்.ஐ.) பட்டியலில், 72-வது இடத்தை நேபாளம் பெற்றிருக்கிறது. மற்ற துறைகளில் சிறப்பாகப் பங்களிக்கவில்லையென்றாலும், பட்டினியைப் போக்குவதில் குறிப்பிடத் தக்க பணியை, படிப்படியாகச் செய்துவருகிறது நேபாளம். அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இவ்விஷயத்தில் தெற்காசியாவின் மற்ற அத்தனை நாடுகளையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது நேபாளம். தெற்காசிய நாடுகளுக்குள், 21.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நேபாளம் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

2030-ம் ஆண்டு வாக்கில் பட்டினியை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கம் கொண்ட உலகளாவிய பட்டினியை குறியீட்டு எண் திட்டம், தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் பல்வேறு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.

எனினும், இந்தச் சாதனைக்காக நாம் ஒன்றும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. ஏனெனில், நேபாளத்தில் குறைந்தபட்சம் 7.8% பேர், போதுமான உணவு இல்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் வாழ்கிறார்கள். தரத்திலும் சரி, அளவிலும் சரி உணவு விஷயத்தில் பற்றாக்குறை நிலவுகிறது.

2002-ல் இதே பட்டியலில் 36.8 புள்ளிகளை நேபாளம் பெற்றிருந்தது. 2008-ல் 29.2 புள்ளிகள் கிடைத்தன. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப் பட்டிருக்கும் பட்டியல், நேபாளத்தின் நிலை அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

ஒரு காலத்தில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த நாடான நேபாளம், இன்றைக்கும் ஒரு விவசாய நாடாகவே கருதப்படுகிறது. ஆனால், இன்றைக்கு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதுடன், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத் தூணாக இருப்பது இளைஞர்கள்தான். நேபாளத்தின் பல இளைஞர்கள், வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்வது இங்கு விவசாயத் துறையில் ஆள் பற்றாக்குறைக்கும் காரணமாகிறது.

உணவுப் பற்றாக்குறை ஏற்படாமலும், மக்கள் பசியால் வாடாமலும் இருக்க உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். இன்றைக்கு, பட்டினியை ஒழிப்பதில் குறிப்பிடத் தக்க இடத்தைப் பிடித்திருக்கும் நேபாளம், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான இடத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தேவை!

தி ஹிமாலன் - நேபாள நாளிதழில் வெளியான தலையங்கம்

- தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x