Published : 13 Apr 2016 08:37 AM
Last Updated : 13 Apr 2016 08:37 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- பாமகவின் சரிவு

மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, 2004 மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே சந்திக்கத் தயாரானது. அதற்காகவே காத்திருந்த பாமக, ‘9 மாத ஆட்சிக்காலம் எஞ்சியிருக்கும் நிலையில், மக்களவையைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. மேலும், அதிமுக அணிக்குப் பாஜக தயாராகிவிட்டது. ஆகவே, நாங்கள் விலகுகிறோம்’ என்று அறிவித்தது. அதே வேகத்தில், திமுக கூட்டணியில் இணைந்த பாமக 5 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டது. கூடவே, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரவேண்டும் என திமுகவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 5 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது. பின்னர் அமைந்த மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சரானார் அன்புமணி. ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பு பாமகவின் வேலுவுக்குத் தரப்பட்டது. திமுகவுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தின்படி, அன்புமணி மாநிலங்களவைக்குத் தேர்வானார். அதன் பிறகு, திமுகவுடனான உறவைச் சீராக வைத்திருந்தது பாமக.

அதுநாள்வரை சட்டமன்றத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடாத திமுகவும் பாமகவும் முதன்முறையாக 2006 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உண்மையில், திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற வேண்டும் என்பது பாமகவின் விருப்பம். ஆனால், அந்தக் கட்சி கேட்ட 6 முதல் 8 தொகுதிகள் என்பதில் திமுகவுக்கு உவப்பில்லை.

தேர்தலின் முடிவில் ஆட்சியமைக்கும் அளவுக்கான பெரும்பான்மை திமுகவுக்குக் கிடைக்கவில்லை. அப்போது 18 எம்எல்ஏக்களை வைத்திருந்த பாமகவின் ஆதரவோடு திமுக ஆட்சியமைத்தது. அதேசமயம், தீவிரமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது பாமக. துணை நகரத் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் பல திட்டங்களுக்கு எதிர்க்குரல் எழுப்பியது. உச்சகட்டமாக, திமுக அரசுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களைக் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியது.

என்றாலும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியிலேயே போட்டியிட்டது பாமக. தேர்தலுக்குப் பின், “திமுக பச்சைத்துரோகம் செய்துவிட்டது” என்று விமர்சித்தார் ராமதாஸ். அதன் பிறகு திமுக, பாமக இடையே வார்த்தை யுத்தங்கள் நடந்தன. பாமகவின் காடுவெட்டி குரு, திமுகவின் தலைவர் தொடங்கி பலரையும் ஏகவசனத்தில் விமர்சித்துப் பேசினார். அந்தப் பேச்சின் வீடியோ பதிவு திமுக பாமக உறவை மோசமாக்கியது.

பரபரப்பான மூன்றாண்டுகள் கழிந்து 2009 மக்களவைத் தேர்தல் வந்தது. ஏற்கெனவே திமுகவுடனான உறவு முற்றிலுமாக முறிந்துபோயிருந்த நிலையில், அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது பாமக. ஆம், கடந்த காலங்களில் அதிமுகவை நோக்கி வீசிய விமர்சனக் கணைகள் அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக அணிக்குச் சென்ற பாமகவுக்கு 6 மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் தரப்பட்டன.

அந்தத் தேர்தலில் பாமக அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதுதான் கூட்டணி அரசியலுக்கு வந்த பிறகு, பாமக சந்தித்த முதல் பெருந்தோல்வி. தவிரவும், அந்தத் தேர்தலில்தான் பாமகவின் வாக்குவங்கி அதன் பாரம்பரியத் தொகுதிகளில் சரிந்திருந்தது. அதன் பின்னணியில் இருந்தது, விஜயகாந்தின் தேமுதிக!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x