Published : 09 Mar 2016 10:02 AM
Last Updated : 09 Mar 2016 10:02 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- இந்தித் திணிப்பும் எதிர்ப்பும்!

ஆட்சியில் இருந்தபோதும் கட்சி பலமாக இல்லை என்பதை உணர்ந்தார் காமராஜர். பதவியிலிருந்து விலகி, கட்சியைப் பலப்படுத்தத் தயாரானார். அந்தத் திட்டத்துக்கு நேரு வைத்த பெயர், கே.பிளான் (K Plan). அதன்படி பக்தவத்சலம் தமிழக முதல்வரானார். காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்.

அந்தக் காலகட்டத்தில் ‘ஜனவரி 26, 1965 முதல் இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும்’ என்று குடியரசுத் தலைவரிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது. அதற்கு எதிராகத் தமிழகத்தில் மொழி ஆர்வலர்களும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிராக கீழப்பழுவூர் சின்னச்சாமி என்கிற இளைஞர் தீக்குளித்தார். அதனைத் தொடர்ந்து களபலிகள் அதிகரித்தன.

போராட்டத்தை ஒடுக்க முதல்வர் பக்தவத்சலம் எடுத்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கோபாவே சத்தை உண்டாக்கின. பிறகு, பிரதமர் சாஸ்திரி கொடுத்த வாக்குறுதியைத் தொடர்ந்து மொழிப் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் காங்கிரஸ் மீதான கோபம் மட்டும் அடங்கவில்லை. போதாக்குறைக்கு, அரிசி விலை வேறு மக்களை அலைக்கழித்தது.

காங்கிரஸுக்கு எதிராக சுதந்திரா, கம்யூனிஸ்ட்டு களைக் கொண்ட வானவில் கூட்டணியை உருவாக்கியிருந்தார் அண்ணா. தேர்தல் நெருக்கத்தில் நடிகர் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட, அதுவும் தேர்தல் பிரச்சினையானது. விளைவு, 51 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் தோற்றது. 138 இடங்களைக் கைப்பற்றிய திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார்.

சில ஆண்டுகளிலேயே ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று இரண்டாகப் பிளவுபட்டது காங்கிரஸ். அதுநாள்வரை தனித்தே களம்கண்ட காங்கிரஸ் கட்சி(கள்) 1971 தேர்தலை எதிர்கொள்ள ஆளுக்கொரு அணியை உருவாக்கின.

கருணாநிதி தலைமையிலான திமுகவுடன் இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அந்த அணியில் இந்திரா காங்கிரஸுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் தரப்பட்டன. ஒரு சட்டமன்றத் தொகுதிகூடத் தரப்படவில்லை. இன்னொரு பக்கம், அரசியல் எதிரிகளான காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்தன. 201 தொகுதிகளில் ஸ்தாபன காங்கிரஸ் நின்றது. 19 தொகுதிகளில் சுதந்திரா கட்சி போட்டியிட்டது.

ஊழல் மலிந்த ஆட்சி என்று திமுக அரசை விமர்சித்தார் காமராஜர். நாட்டை நாசமாக்கும் அபாய சக்திகளான இந்திரா, கருணாநிதி கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் ராஜாஜி. இருவரும் பங்கேற்ற கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர்.

தேர்தலின் முடிவில் 184 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது திமுக. அந்த அணியில் இந்திரா காங்கிரஸ் 10 எம்.பி.க்களைப் பெற்றது. மாறாக, ஸ்தாபன காங்கிரஸுக்கு 15 எம்.எல்.ஏ.க் களும் ஒரு எம்.பி.யும் கிடைத்திருந்தனர். சுதந்திராவுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருந்தனர். அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு காங்கிரஸின் ஒரே அடையாளம், கூட்டணிக் கட்சி என்பதுதான்!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

(கோஷம் போடுவோம்)



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x