Published : 22 Mar 2016 09:25 AM
Last Updated : 22 Mar 2016 09:25 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- திராவிட நாட்டை மறுத்த கம்யூனிஸ்ட்!

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல்1952-ல் நடந்தது. அதில் தனித்துப் போட்டியிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. அப்போது புதிய கட்சியான திமுகவின் நிறுவனர் அண்ணாவிடம் சென்று ஆதரவு கோரினார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என்கிற ப. ஜீவானந்தம். திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் ஆதரவளிப் பதாகச் சொன்னார் அண்ணா. அதை ஏற்க கம்யூனிஸ்ட்டுகள் மறுத்துவிட்டனர். காங்கிரஸை ஒழிப்பதற்காக கம்யூனிஸ்ட் டுகளை ஆதரிப்பதாக அறிவித்தார் பெரியார்.

மொத்தமுள்ள 375 இடங்களில் 131-ல் கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிட்டனர். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் செய்த பிரச்சாரம் கணிசமான பலனைக் கொடுத்தது. தேர்தலின் முடிவில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு 62 இடங்கள் கிடைத்திருந்தன. மைனாரிட்டி அரசை அமைக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று தெரிந்ததும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைச்சரவை அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் கம்யூனிஸ்ட்டுகள்.

167 உறுப்பினர்களின் ஆதரவோடு ஐக்கிய ஜனநாயக முன்னணி உருவானது. ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதன் தலைவர் டி.பிரகாசம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு உருவான கூட்டணியைப் பொருட்படுத்த மறுத்துவிட்டார் ஆளுநர் பிரகாசா. அதன்மூலம் மெட்ராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்போடு அமையவிருந்த முதல் கூட்டணி ஆட்சி முயற்சி முறியடிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மொழிவாரி மாகாணப் பிரிவினை, திமுகவின் அரசியல் நுழைவு போன்ற சவால்களோடு 1957 தேர்தலை எதிர்கொண்டது. கம்யூனிஸ்ட்டுகள் மொத்தமுள்ள 205 இடங்களில் வெறும் 55 இடங்களில் மட்டுமே போட்டியிட்டனர். கடந்தமுறை கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்த பெரியார், இந்த முறை காமராஜருக்கு ஆதரவளித்தார். ஆகவே, காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி, ஃபார்வர்டு ப்ளாக் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்துகொண்டனர் கம்யூனிஸ் ட்டுகள். ஆனாலும், தேர்தலின் முடிவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வெறும் நான்கு இடங்களே கிடைத்தன.

அந்தத் தோல்விக்குப் பிறகு, திமுகவுடன் நெருங்கத் தொடங்கினர் கம்யூனிஸ்ட்டுகள். குறிப்பாக, மக்கள் பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து கூட்டியக்கம் நடத்துவது என்றும் எதிர்வரும் தேர்தலில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது என்றும் தீர்மானித்தது. அதன்படி சென்னை மேயர் தேர்தலில் திமுகவுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவளித்தது. மாநிலங்களவைத் தேர்தலில் பி.ராமமூர்த்திக்கு திமுக ஆதரவளித்தது.

ஆனால் 1962 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மட்டுமே திமுக, கம்யூனிஸ்ட் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. மொத்தமுள்ள 206 இடங்களில் 68-ல் போட்டியிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட்டபோதும் அந்தக் கட்சிக்குத் தமிழகத்தில் மக்களவை, சட்டமன்றத்துக்குத் தலா இரு இடங்கள் கிடைத்தன. அப்போதுதான் சித்தாந்தச் சிக்கல் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, சிபிஐ, சிபிஎம் என்ற இரண்டு கட்சிகள் உருவாகின. 1967 தேர்தல் களத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மோதிக்கொண்டன!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

டி.பிரகாசம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x