Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

பூவுலகைச் சூழும் பெருநஞ்சு

புராணங்களில் மரணத்தை வென்றவன் மார்க்கண்டேயன் என்று படித்திருப்போம். மனிதர்கள் உருவாக்கிய செயற்கைப் பொருட்களுள் அழிவற்ற ஒன்று ஞெகிழி. இப்படி அது அழியாத்தன்மை பெற்றுள்ளதே, தற்போது பூவுலகமும் மனிதர்களும் எதிர்கொண்டுள்ள பெரும் பிரச்சினைகள் பலவற்றுக்கும் காரணம்.

கிட்டத்தட்ட மக்கவே மக்காத ஞெகிழிக் கழிவு, நமது சாக்கடைகள்-வடிகால்கள், ஆறு-வாய்க்கால்கள், தெரு-சாலைகள் எனப் பரவி எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. தண்ணீர்ப் புட்டிகள், உறிஞ்சிகள், குவளை, தட்டுகள், உணவுப்பொருள்-சிப்பங்கள்-பொதிகளைக் கட்டிவரும் ஞெகிழி என நம் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் ஞெகிழி தன் தடத்தைப் பதித்திருக்கிறது. ஞெகிழியை அழிக்கவோ வேறொன்றாக உருமாற்றவோ முடியாது. தொடர்ந்து சூரிய வெப்பத்திலும் தண்ணீரிலும் அடித்துச் செல்லப்படும் ஞெகிழி சிறுசிறு துகள்களாக உடையுமே ஒழிய, அதன் வேதி வடிவம் முழுமையாக மாறுவது இல்லை. இப்படி உடையும் நுண்ஞெகிழித் துகள்கள் உலகெங்கும் பரவி மனித குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் வாழாத துருவப் பகுதியான அண்டார்க்டிகாவின் அடியாழத்தில், நாம் குடிக்கும் தண்ணீரில், சுவாசிக்கும் காற்றில் என எங்கெங்கும் நுண்ஞெகிழித் துகள்கள் கலந்திருக்கின்றன என அறிவியலர்கள் எச்சரித்துவருகிறார்கள். ஞெகிழி ஏற்கெனவே உயிரின உணவுச் சங்கிலி, மனித உணவுச் சங்கிலிக்குள் புகுந்து பல்லாண்டுகளாகிவிட்டன. கடலில் கொட்டப்படும் ஞெகிழியிலிருந்து உருவாகும் நுண்துகள்களை மீன்கள் உண்கின்றன. பிறகு அந்த மீன்களை நாம் உண்கிறோம்.

தமிழ்நாட்டில் 2 மடங்குக் கழிவு

ஞெகிழி உற்பத்தியும் ஞெகிழிக் கழிவும் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் எடையைப் போல் 16 மடங்கு ஞெகிழிக் கழிவு பூவுலகைச் சூழ்ந்திருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.

ஓராண்டில் 34 லட்சம் மெட்ரிக் டன் ஞெகிழிக் கழிவை இந்தியா உருவாக்குகிறது. இந்தக் கழிவில் 66%-க்கு ஏழு மாநிலங்கள் மட்டும் காரணம். தலா 12%-த்துடன் தமிழ்நாடும் மஹாராஷ்டிரமும் முதலிடத்தில் உள்ளன. நாட்டின் மொத்த ஞெகிழிக் கழிவில் கால் பங்கு இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் உருவாகிறது. குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எஞ்சிய 22 மாநிலங்கள் வெறும் 33% ஞெகிழிக் கழிவையே உருவாக்குகின்றன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2019-2020-ம் ஆண்டு அறிக்கை தரும் தகவல் இது.

தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களுக்கு எதிரான தடை அறிவிக்கை 2018 ஜூன் 25 அன்று நிறைவேற்றப்பட்டு, 2019 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களை வைத்திருப்பதைத் தடுப்பது, கைப்பற்றுவது, தடைசெய்வது என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதர்சனம் அப்படி இல்லை. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 15 கிராம் ஞெகிழிக் கழிவை உருவாக்குகிறார். அதே நேரம், தேசிய சராசரியோ 8 கிராம் மட்டுமே.

வெற்று அறிவிப்புகள்

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்கள் 2022 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் முற்றிலும் தடை செய்யப்படும் என இந்தியா காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது. இந்த அறிவிப்பைப் பிரதமர் மோடி மூன்று ஆண்டுகளுக்கு முன் கோலாகலமாக வெளியிட்டார். அந்தக் காலக்கெடு முடிய ஓராண்டு உள்ள நிலையில், ‘ஞெகிழிக் கழிவு மேலாண்மை திருத்த விதி’களைக் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்குப் பயணிக்க வேண்டிய தொலைவு, நடைமுறைப் பிரச்சினைகள்-தடைகளோ ஏராளம்.

ஞெகிழிக் கழிவில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துபவை ‘கேரி பேக்’ எனப்படும் மென்ஞெகிழிப் பைகள். ஒருசில நிமிடங்கள், அதிகபட்சம் சில மணி நேரம் மட்டுமே பயன்பாட்டைக் கொண்டவை இவை. இந்தப் பைகளில் 50 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள ஞெகிழிப் பைகளை பெரும்பாலான மாநிலங்கள் சட்டபூர்வமாகத் தடைசெய்துள்ளன. 2021 அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 75 மைக்ரானுக்குக் கீழ் உள்ள ஞெகிழிப் பைகளுக்குத் தடை விதித்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், நடைமுறை அனுபவமோ வேறு. ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள் சொல்வதுபோல் ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்கள் 22 மாநிலங்களில் தடைசெய்யப்பட்டிருந்தால், ஞெகிழிக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், ஞெகிழிப் பொருட்கள் எங்கெங்கும் சர்வசாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருக்கின்றன. தெருவோரக் கடைகள், பழக் கடைகள், பூக்கடைகள், சிறு பெட்டிக்கடைகள் என எல்லா இடங்களிலும் ஆபத்தான மென்ஞெகிழிப் பைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஞெகிழிப் பைகளின் பயன்பாடு குறைந்ததாகவோ, 75 மைக்ரானுக்குக் கீழ் பயன்பாட்டில் உள்ள ஞெகிழிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவோ எந்தச் செய்தியும் இதுவரை பதிவாகவில்லை.

எங்கே இருக்கிறது தீர்வு?

உலகில் உற்பத்தி செய்யப்படும் ஞெகிழியில் 79% குப்பைமேடுகளிலோ சுற்றுப் பகுதிகளிலோ கழிவாகக் கொட்டப்படுகிறது – பெருமளவு கடலிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் மிதக்கிறது. உலகின் மிகப் பெரிய பெருங்கடலான பசிபிக்கில் ‘கிரேட் பசிபிக் கார்பேஜ் டம்ப்’ என்கிற செயற்கை ஞெகிழித் தீவு உருவாகியிருப்பது மனித குலத்துக்கு அவமானம். 10%-க்கும் குறைவான ஞெகிழியே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 12% ஞெகிழி எரிக்கப்படுகிறது. ஞெகிழியை எரிப்பதால் வெளியேறும் டையாக்சின் எனும் நச்சு வாயு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. அத்துடன் உலகப் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் 6% ஞெகிழித் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதால், பருவநிலை மாற்றத்துக்கும் ஞெகிழி பங்களிக்கிறது.

இந்தப் பின்னணியில் ஞெகிழிப் பயன்பாட்டைத் தடைசெய்வதில் தீவிரம் காட்டாமல், முறைப்படுத்தாமல் ஞெகிழிக் கழிவுக்கும் தீர்வு காண்பது என்பது காற்றில் கோட்டை கட்டும் முயற்சியே. சட்டரீதியில் தடைசெய்யப்பட்ட ஞெகிழியை நடைமுறைப் பயன்பாட்டில் கட்டுப்படுத்துவது, மாற்றுப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் ஞெகிழிக் கழிவு உருவாவதைத் தடுக்கும் வழி.

ஞெகிழிப் புட்டிகளையும் ஞெகிழிப் பைகளையும் சட்டபூர்வமாகத் தடைசெய்வதற்கான கட்டுப்பாடுகளும் அரசியல் உறுதியும் மத்திய, அனைத்து மாநில அரசுகளிடமும் தேவை. அப்படிப்பட்ட தீவிரம் காட்டப்படாதவரை, ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழி 2022-ல் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யப்படும் என்கிற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே தேங்கிவிடும் சாத்தியமே அதிகம்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x