Published : 25 Mar 2016 08:38 AM
Last Updated : 25 Mar 2016 08:38 AM

காந்தியப் பொருளாதாரச் சிந்தனை!

விவசாயத்தைக் கிராமத் தற்சார்பு உற்பத்தி சங்கங்களாக மாற்ற வேண்டும்

அது 80-களின் அந்திமக் காலம். பள்ளிக்குச் செல்லும் வழியில் நெசவாளிகள் எல்லாத் தெருக்களிலும் கதர் வேட்டிக்குப் பாவு தோய்ந்து கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர், இரண்டு தெருக் கள் தள்ளியிருப்பவர் என்று ஒருவருக்கொருவர் உதவிசெய்து கூட்டாக, பாவு தோய்ந்து கொண்டிருப்பார்கள். அது ஒரு அற்புத மான கூட்டுறவு. ஊரில் பாவடித் தெரு, பாவடித் திடல் என்ற பெயரில் இடங்களே இருக்கும். இப்போது அங்கே ‘பழைய பாவடி’ என்று குரல் கேட்கிறது. தெருக்களில் ஊன்றப்பட்டி ருக்கும் பாவடிக் கற்களைப் பெயர்த்து எடுத்துவிட்டார்கள். கூட்டுறவோடு பாவு தோய்ந்து உழைத்தவர்கள் இன்று பிழைப்புக்காக இடம்பெயர்ந்து விட்டார்கள்.

கதர் வேட்டியும் கைக்குட்டையும் நெய்வதுதான் எங்கள் ஊரின் முக்கியமான தொழில். ‘சர்வோதயா’ கூட்டுறவு சங்கம் மூலம் அதைச் செய்வோம். வேட்டிக்கு 9 ரூபாய் கூலி. வாரம் 8 முதல் 10 வேட்டி நெய்யலாம். ஆனால், அதற்காக இரவு பகல் வித்தியாசமில்லாமல் தறியில் நாடா பாய்ந்துகொண்டிருக்கும். எனது குடும்பத்தில் அப்பா தறியிலும், அம்மா அடுப்பிலும் ராட்டையிலும் மாறி மாறி நின்றுகொண்டிருப்பார்கள். குண்டுபல்பு வெளிச்சத்தில் தறிநாடாச் சத்தத்தில் படித்த பள்ளிப் பாடங்கள் இன்னும் ஒலி, ஒளியுடன் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

பசுமையான பாடங்கள்

வாரம் முழுதும் நெய்த வேட்டிகளைத் தலையில் சுமந்து சனிக்கிழமை தோறும் அப்பாவும் அம்மாவும் சர்வோதயாவில் சேர்ப்பார்கள். 100 முதல் 120 ரூபாய் வரை கூலி கிடைக்கும். அதில் 10-ஐ தொழிலாளர் வைப்பு நிதி என்று பிடித்தம் செய்துகொள்வார்கள். பின்னாளில் தறியை விட்டபோது, அதைச் சில ஆயிரங்களாக ரொக்கமாகத் திருப்பிக் கொடுத்தார்கள் என்று நினைவு.

மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான ‘சுயராஜ்ய’ சிந்தனையின் வடிவம்தான் ‘சர்வோதயா’. மக்கள் அனைவருக்கும் பொருளாதாரப் பலம் ஏற்படுத் தும் சோஷலிசச் சிந்தனை அது. அந்நியப் பொருட் களைத் தவிர்க்க வேண்டும். கிராமங்கள்தோறும் உற்பத் தியைப் பரவலாக வேண்டும். கிராமத்தின் உற்பத்திப் பொருட்களை மக்களிடம் சேர்ப்பதே சுயராஜ்யம். சுதேசி அல்லது தற்சார்புப் பொருளாதாரம் என்று இதைச் சொல்லலாம். இவற்றின் மறுபெயர்தான் சர்வோதயா.

கதராடை கவுரவம்

தமிழகத்தில் 1958-ல் சர்வோதய சங்கம் திருப்பூரில் உருவாக்கப்பட்டது. வினோபா காந்தியின் முன்முயற்சி அது. அதன் கிளைகள் தமிழகமெங்கும் பரவின. கதர் ஆடைகள், தோல் பொருட்கள், அலங்காரக் கைவினைப் பொருட்கள், மர மேசைகள், நாற்காலிகள், படுக்கை விரிப்புகள், தலையணை, மெத்தை, சங்கு மாலைகள், சந்தன மாலைகள், சிகைக்காய்ப் பொடி, வேம்பு சோப்புகள், தேங்காய் எண்ணெய், தேங்காய் நார்க் கயிறுகள் என்று பல உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் இந்தக் கிளைகளில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.

பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகள் வராத காலத்தில் கதராடைகளே மக்களின் பிரதான ஆடைகள். காங்கிரஸ்காரர்களுக்கோ கதராடை ஒரு கவுரவம். தமிழகத்தின் கதராடைகள் இந்தியா முழுவதும் விற்றன. இயந்திரங்கள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு கிராமத்தையும் பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி முன்னேற்றியது சர்வோதயப் பொருளாதாரம்தான். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சாதனைகளாக நம் அரசியல்வாதிகள் பேசிக்கொள்கிறார்கள். அவை எல்லாம் காந்தியின் சர்வோதயப் பொருளாதாரச் சிந்தனையின் வடிவங்கள்தானே!

உலகமய ஆக்கிரமிப்பு

இந்தியச் சந்தை 90-களில் உலகத்தை நோக்கித் திறக்கப்பட்டது. பருத்தி நூற்பாலை நுட்பங்கள், இயந்திரங் கள், பாலியெஸ்டர், ரேயான் செயற்கை இழைகள் உள்ளே வந்தன. சர்வோதயப் பொருளாதாரத்தைத் தோற்று வித்த திருப்பூர் வட்டாரம், பருத்தி நூற்பாலைகளின் மையமானது. ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது. பருத்தி நூற்பாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், இயந்திர உதிரிப் பாகங்கள் கோவையிலேயே தயாராகின. கோவை இயந்திரமயத்தை உள்வாங்கியது. கதராடைகளுக்குப் பதிலாக பாலியெஸ்டர் ஆடைகள் சந்தையை ஆக்கிரமித்தன.

இந்த ஆக்கிரமிப்புதான் நெசவையே தொழிலாகக் கொண்டிருந்த எனது பக்கத்து வீட்டுக்காரரை, அவரது பெண்களின் வாழ்க்கைக்காகத் தறிகளுடன் வீட்டை விற்க வைத்தது. திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் கூலி வேலைக்கு அவரைத் துரத்தியது.

இன்று கோவை ஆட்டோமொபைல் மற்றும் பருத்தி நூற்பாலை இயந்திரங்களின் உற்பத்தி மையம். நமது மரபைச் சாராத அறிவியல் சிந்தனையும் கடுமையான உழைப்பாளிகளும்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம். சாதாரணமான தொழிலாளிகள் தங்களை முதலாளிகளாக வளர்த்துக்கொள்கிற ஒரு வியப்பான வளர்ச்சி விதியைக் கொண்டது கோவை.

சுயராஜ்யமே தேவை

உலகமயமாக்கல் ஒரு புறம் புதிய பொருட்களையும், மிகு நுகர்ச்சியையும் கொண்டுவந்தாலும் இன்னொரு புறம் அது உற்பத்தியைத் தனியார் முதலாளிகள் வசத்துக்கு ஆட்படுத்தியது. பெரும்பாலான மக்கள் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பங்களைக் கைவிட்டு இயந்திரத்தைக் கையாளும் பொதுத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். தனிமனிதர் ஒருவரின் தேவையை உலகச் சந்தையே தீர்மானிக்கும் நிலை வந்தது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பின்மை பெரிதானால் சென்னையிலும், கோவையிலும் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவானது. ஆஸ்திரேலியா சுரங்கம் தோண்டுவதை நிறுத்தினால் கோவையில் உருக்காலைகள் மற்றும் இயந்திரப் பாகம் உற்பத்தி நிறுவனத் தொழிலாளர் வேலையிழக்கும் நிலை வந்துவிட்டது. சீனா போன்ற அதிதீவிர வளர்ச்சி மோகம் கொண்ட நாடுகளுடன் போட்டி போட்டு நம் வளங்களை அழித்து, நாளையே கடன்காரர்களாகவும், பைத்தியக்காரர்களாகவும் நாம் நிற்க வேண்டியதில்லை.

அன்று நெசவை மட்டுமே தொழிலாகக் கொண்டு ஐந்து பெண் பிள்ளைகளை வளர்த்து, திருமணம் முடித்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த என் தாத்தா, இறுதிக் காலத்தில் கடனேதும் இல்லாமல் ஊரில் மதிப்புடன் உலகை விட்டுச் சென்றார். இன்று 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியரின் வாழ்க்கை ஒன்றிரண்டு பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்குள் வீட்டுக்கடன், கல்விக்கடன், தொழில் கடன், கல்யாணக் கடன் என்று கடன்களைச் சேர்த்துவிட்டு மரணிக்கும்போது உலகம் விரும்பாத சரிதமாகிவிடுகிறது.

ஒரு புறம் உள்நாட்டு உற்பத்தியை விற்க உலகச் சந்தையைப் பயன்படுத்திக் கொள்வதும் இன்னொரு புறம் உள்ளூர் சந்தையைப் பலப்படுத்திக்கொண்டு உணவு மற்றும் இதர அடிப்படைத் தேவைகளில் சுயராஜ்யத்தை அடைய முயற்சிப்பதே இன்றைய தேவை.

இடப்பெயர்வைத் தவிர்க்கலாம்

காந்தியச் சிந்தனையுடன் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தி, உற்பத்தி, சந்தை மற்றும் நுகர்வை இணைக்க வேண்டும். விவசாயத்தைத் தனியார் தொழிற்சாலைகளுக்கு இணையாகக் கருதாமல், கிராமத் தற்சார்பு உற்பத்தி சங்கங்களாக மாற்ற வேண்டும். உணவுத் தேவை துல்லியமாகக் கணிக்கப்பட்டு மண் வகைகளுக்கேற்ப உணவு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும். உற்பத்தியை முறைப்படுத்தி விட்டால் விவசாயிக்குத் தன் உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலையும், நுகர்வோருக்குச் சீரான விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் முடியும். அதற்குப் பல்நோக்குத் திட்டம் ஒன்றின் மூலம் நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள், அரசியல் தலையீடற்ற, ஊழல் இல்லா விவசாய, விற்பனை சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். பண்ணைகள் சமுதாயமயமாக்கப்பட வேண்டும். இதன்மூலம் ஊரக வேலைவாய்ப்பைப் பெருக்க முடியும். இது ஒரு வகையில் கிராமங்களிலிருந்து நகரத்துக்குக் குடி பெயர்தலையும், நகரங்கள் வீங்கிப் பெருத்து வெடிப்பதையும் தவிர்க்க முடியும். தொழில்கள் மாநில முழுமைக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.

வளர்ச்சி, மாற்றம் என்ற பெயரில் மக்களின் வளங்களைச் சுரண்டித் தனியாருக்கு விற்று, அதை லாபக் கணக்கில் காட்டும் வித்தகர்கள் இந்த நாட்டுக்குத் தேவையில்லை. வளங்களும், அது சார்ந்த நலன்களும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் சிந்திக்கும் தலைவர்கள்தான் இன்று நமக்குத் தேவை.

தொடர்புக்கு: thiruchenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x