Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

இப்படிக்கு இவர்கள்: மாற்றுக் கொள்கைகள் உண்டு

ஆகஸ்ட் 31 தலையங்கம் வாசித்து அதிர்ச்சியடைந்தேன். தீங்கு என்று சரியாக அடையாளப்படுத்திவிட்டு, தவிர்க்க முடியாத என்ற அடைமொழி எதற்கு? இன்றைய ஆட்சியாளர்கள் கொள்கை குறித்த விமர்சனமற்று, எதிர்ப்புக் குரல்களில் காங்கிரஸ் தரப்பை மட்டும் தொட்டுக்காட்டி, மாற்றுக் கொள்கைகள் ஏதும் இல்லை என்பதுபோல் கொண்டுபோய், ஆகவே, யாரும் தவறு கண்டுபிடிக்கக் கூடாது என முடிப்பது என்ன நியாயம்? கரோனா கொடுந்தொற்று தொடங்கும் முன்பே மிக மோசமான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதும் இல்லை, பாதிப்பு அடைந்துவரும் பல கோடி அப்பாவி மக்களின் வாழ்வாதாரம் பற்றிப் பேசுவதும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டற்ற சலுகைகளும், வங்கிக்கடன் திரும்பச் செலுத்த மறுக்கும் பெருந்தொழில் அதிபர்கள் மீது கருணை பொழிவதை நிறுத்தி, கொள்ளை லாபம் அடிப்போருக்கு உச்சபட்ச வரி விதிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுப் பொருளாதாரச் சுழற்சி உறுதிசெய்யப்பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் தெளிவான மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்திவருகின்றனர். 30 கோடி பல்துறைத் தொழிலாளர்கள், ஊழியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று வலுவான வேலை நிறுத்தம் செய்து, தங்களது எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்தனர். எட்டு மாதங்களாக வேளாண் பெருங்குடி மக்கள் தலைநகரில் கடுமையான போராட்டத்தில் உள்ளனர். தேசத்தின் சொத்து விற்பனையை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், பெருந்தீங்கு விளையும். மறு காலனியாதிக்கத்துக்கு அடிகோலும்.

- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x