Last Updated : 29 Aug, 2021 03:12 AM

 

Published : 29 Aug 2021 03:12 AM
Last Updated : 29 Aug 2021 03:12 AM

பிரீமியர் ஓமந்தூரார்: முன்னுதாரண முதல்வர்

நானும் ஒரு விவசாயி என்று உரிமை கொண்டாடும் முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அரசியல் வாழ்விலிருந்து மீண்டும் விவசாயத்தை நோக்கி அவர்கள் திரும்புவார்களா என்றால் சந்தேகம்தான். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்புவகித்தவர் ஓ.பி.ஆர். என்று அழைக்கப்படும் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி (1895-1970). தேடிவந்த முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள மூன்று மாத கால அவகாசம் எடுத்துக்கொண்டது அரசியல் அதிசயம். முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்ததும் சொந்த ஊருக்குச் சென்று முழுநேர விவசாயியானார்.

ஓமந்தூராரைப் பற்றி ‘பிரீமியர் ஓ.பி.ஆர்.’ என்ற குறும்படத்தை இயக்கியிருப்பதோடு ஓ.பி.ஆராகவும் நடித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராஜகுமாரன். முதல்வரின் தனி மருத்துவரை நியமிப்பதற்கு முன்னால் அவரிடம் ‘எந்தவொரு பரிந்துரைக்கும் வரக் கூடாது, எந்தவிதமான சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது’ என்று ஓ.பி.ஆர். ஒப்புதல் பெற்றுக்கொண்ட காட்சியுடன் இந்தப் படம் தொடங்குகிறது. குற்றாலத்தில் தங்கியிருந்த அரசினர் விடுதியிலிருந்து ஓட்டுநர் கொண்டுவந்த பலாப் பழத்தை மறுப்பதோடு அதைத் திருப்பிக்கொடுத்து ஒப்புகைச் சீட்டு பெற்றுவரும்படி அவரைக் குற்றாலத்துக்கு அனுப்பி வைப்பது இரண்டாவது காட்சி. உதவியாளர், சக அமைச்சர்களுடனான உரையாடல்கள்; நீதிபதியே ஆனாலும் தனிப்பட்ட காரணங்களுக்கான சந்திப்புகளைத் தவிர்த்தது, குடமுழக்கு விழாவுக்கு அழைக்க வந்த சொந்த ஊர்க்காரர்களிடம் ஒடுக்கப்பட்டோரின் ஆலயப் பிரவேசத்தை வலியுறுத்திப் பேசுவது, தான் தலைவராக ஏற்றுக்கொண்ட காந்தியே தொலைபேசியில் அழைத்தாலும் மௌனவிரத நாளில் அழைப்பைத் தவிர்ப்பது என ஓமந்தூராரின் நீண்ட நெடிய அரசியல் வாழ்விலிருந்து அவரது ஆளுமையை உணரச் செய்யும் தேர்ந்தெடுத்த எட்டு நிகழ்வுகள் மட்டுமே இக்குறும்படத்தின் காட்சிகளாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடிய திராவிட இயக்கத்தினரும் ஓமந்தூராரைப் பாராட்டவும் ஆதரிக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. காந்தியர்களின் எளிமைக்கு காமராஜரையும் கக்கனையும் உதாரணம் காட்டுபவர்கள்கூட ஓ.பி.ஆரை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ஆதிதிராவிடர் நலத் துறையைத் தனித் துறையாக இயங்கச் செய்தவர் அவர். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலராக நியமித்தவர். முதல்வரின் அலுவலகச் சுவரில் காந்தி, நேருவின் படங்கள்; வீட்டுச் சுவரில் வள்ளலாரின் படம் என்று அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் நடுவில் ஓமந்தூராரின் பொதுவாழ்க்கை அமைந்ததைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் எஸ்.ராஜகுமாரன். ஏற்கெனவே ஓ.பி.ஆரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் இவர் இயக்கியுள்ளார். தற்போது வெளிவந்துள்ள குறும்படம் விரைவில் ஆங்கிலத்தில் வெளிவரவிருக்கும் முழுநீள திரைப்படம் ஒன்றுக்கான வெள்ளோட்டமாகத் தெரிகிறது. திரையில் மட்டுமின்றி அரசியல்வெளியிலும் ஓ.பி.ஆர். உயிர்த்தெழட்டும்.

இந்தக் குறும்படத்தின் யூடியூப் லிங்க்: https://youtu.be/hQugBh-cIIk

ஆகஸ்ட் 25 : ஓமந்தூரார் நினைவு தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x