Last Updated : 20 Aug, 2021 06:39 AM

 

Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்குக் குழிபறித்த குப்தா சகோதரர்கள்

இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு அங்கு ஏற்பட்ட நிறவெறிக் கசப்பனுபவம்தான் பின்னாளில் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது. அவரது அகிம்சை வழியைப் பின்பற்றி, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு முடிவுகட்டினார் நெல்சன் மண்டேலா. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான உறவு அவ்வளவு ஆழமானது. அதே தென்னாப்பிரிக்கா கடந்த சில வாரங்களாகக் கலவரத்தால் பற்றி எரிவதன் பின்னணியில், ‘குப்தா பிரதர்ஸ்’ எனும் இந்திய சகோதரர்கள் இருப்பது வேதனை தரும் விஷயம்.

தோல்வியில் தொடங்கிய ஜூமா

நீண்ட நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலையாகி 1994-ல் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார் நெல்சன் மண்டேலா. அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியானது தேசம் நெடுக அமோக வெற்றி பெற்றபோதும், குவாஜுலு நடால் என்ற மாகாணத்திலிருந்து போட்டியிட்ட ஜேக்கப் ஜூமா தோல்வி அடைந்திருந்தார். ஆனபோதும் அவரது கட்சிப் பணியைப் பாராட்டிக் கௌரவப் பதவிகள் அளிக்கப்பட்டன.

தான் சார்ந்த ஜுலு இனத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஜூமா, கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவர், நாட்டின் துணை அதிபர்களில் ஒருவர் என்று அசுர வளர்ச்சி பெற்றார். ஆப்பிரிக்க தேசங்களில் முதலாவதாகப் பீடு நடைபோட்ட தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சி, ஜூமா துணை அதிபராக இருந்த ஏழு ஆண்டுகளில் அடுத்தடுத்த ஊழல்களால் பின்னடைவைச் சந்தித்தது.

அதிரவைத்த வழக்கு விசாரணை

பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் பதவி இழக்கும்வரை ஜூமா தனது ஊழல் திருவிளையாடல்களைத் தொடர்ந்தார். எனினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணுக்கு எதிராகவே வழக்கின் போக்கு திரும்பும்படி செய்தார். அந்தப் பெண்ணின் சம்மதத்துடனே உறவு நிகழ்ந்தது. அந்தப் பெண் நடத்தை கெட்டவர், மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றெல்லாம் விசித்திர வாதங்கள் வைக்கப்பட்டு வழக்கின் முடிவு இறுதியில் ஜூமாவுக்கு சாதகமாகவே முடிந்தது.

ஜூமாவை ஊழல் வழக்குகள் வளைத்தபோதும் பிரத்யேக பாணியில் அவற்றை எதிர்கொண்டார். தனது நிதிசார் முடிவுகளுக்கு வலதுகரமாக இருந்த ஷபிர் ஷேக் மீதே எல்லா வழக்குகளையும் எழுத வழிவகுத்ததில் ஷபிர் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனைக்கு ஆளானார். (இந்த ஷேக் பின்னாளில் ஜூமா அதிபரானதும் மருத்துவக் காவல் என்ற பெயரில் விடுதலையானார்.)

முதலடி வைத்த குப்தா

அதன் பின்னர் ஜூமா தனது அரசியல் சதிராட்டத்தின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார். 2007-ல் கட்சித் தலைவராகவும், அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் அதிபராகவும் வளர்ந்தார். அங்கு தொடங்கி 2018 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் தேசத்தின் எல்லாத் துறைகளிலும் ஊழலே கொழித்தது. ஊழல் பாதையில் தனக்கு உதவியவர்களையெல்லாம் உயர்த்தி அழகு பார்த்தார். அப்படி உயர்ந்தவர்களில் இந்தியாவின் ‘குப்தா சகோதரர்கள்’ முக்கியமானவர்கள்.

மேற்கு உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் ஒரு வர்த்தகக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அதுல், அஜய், ராஜேஷ் குப்தாக்கள். சுதந்திரக் காற்றைக் சுவாசிக்கத் தயாரான தென்னாப்பிரிக்கா அதுல் குப்தாவை ஈர்த்தது. தென்னாப்பிரிக்க நகரங்களில் ஓட்டைக் காரில் காலணிகளை அடுக்கி வீதி வீதியாக விற்றபடி அடுத்த கட்டம் குறித்து அதுல் சிந்திக்கத் தொடங்கினார். 1990-களில் கொடிகட்டிப் பறந்த கணினி சார்ந்த வாய்ப்புகளுக்கு தென்னாப்பிரிக்காவில் போட்டி இல்லை என்றதும் தம்பிகளை வரவழைத்து ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். அரசியலர்களை வரவழைத்துப் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி அரசின் ஆர்டர்களை அள்ளினார்.

சூறையாடிய ‘ஜூப்தா’ சகாப்தம்

அந்த ஆர்டர்களுக்காக ஜூமாவிடம் அவர்கள் சரணடைந்தனர். எதையும் செய்யத் தயங்காத குப்தாக்களின் அணுகுமுறை ஜூமாவுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. இங்கிருந்தே ’ஜூ(மா)-(கு)ப்தா’ ஒருங்கிணைந்த ‘ஜூப்தா’ சகாப்தம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது.

அமைச்சர்கள், அதிகாரிகளை வளைப்பதில் குப்தாக்களின் பாணி அலாதியானது. தங்களுக்குச் சரிப்படாதவர்களை ஜூமாவின் ஆசியுடன் களையெடுப்பார்கள். முன்பேர ஒப்பந்தத்துக்கு உடன்படும் நபர்களே நாற்காலிகளை அலங்கரிப்பார்கள். ஜூமா துணை அதிபரானபோது அவரே வியக்கும்படி குப்தா சகோதரர்கள் புகுந்து விளையாடினார்கள். பாலியல் நாட்டம், சுகபோக வாழ்க்கை என ஜூமாவின் பலவீனங்கள் குப்தாக்களுக்கு வசதியாகின.

முதல் விஷ வித்து

ஜூமா அதிபரானபோது அரசின் கருவூலத்தை நேரடியாகக் கையாளும் அளவுக்கு குப்தாக்கள் வளர்ந்ததை ஆளுங்கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் விரும்பவில்லை. குப்தாக்களின் வர்த்தக உறுதுணைக்காக ஏராளமான இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடியேறிருந்தார்கள். அதிகார போதையில் அவர்களில் சிலர் வெள்ளையினத்தவருக்கு நிகரான நிறவெறியுடன் நடந்துகொண்டார்கள். இந்த விஷ வித்து தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்கள் மனதில் ஆழமாக விழுந்தது. குப்தாக்களின் அசுர வளர்ச்சி மீதான தென்னாப்பிரிக்கர்களின் பார்வை அதன் பின்னர் வேறானது.

ஜூமா கைதும் கலவரத் தீயும்

உட்கட்சித் தலைவர்களின் அதிருப்தி, எதிர்க் கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் காரணமாகத் திரண்ட நெருக்கடி நெட்டித்தள்ளியதில் 9 ஆண்டு கால அதிபர் பதவியை ஜூமா ராஜிநாமா செய்ய வேண்டியதாயிற்று. அதே கட்சியைச் சேர்ந்த சிரில் ராமபோசா 2018-ல் அதிபரானார். ஆனால், கட்சி பாசத்தில் ஜூமாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு மென்போக்கு கொண்டிருப்பதாக மக்கள் கசப்படைந்தனர். மக்களின் மனப்போக்கை நாடிபிடித்த தலைமை சுதாரித்துக்கொண்டது.

தன்னிடம் இருந்த ஆவணங்கள் சிலவற்றை முறையாகச் சமர்ப்பிக்காத நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதச் சிறைத் தண்டனைக்கு ஆளானார் ஜூமா. உடனே அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். இன்னொரு வகையில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சீரழிவு, ஊழல் முறைகேடுகள், முத்தாய்ப்பாகப் பெருந்தொற்று நெருக்கடியை அரசு அலட்சியமாகக் கையாண்டது... எனக் குமுறிக்கொண்டிருந்த பொதுமக்களும் கலவரத்தில் குதித்தனர்.

குறிவைக்கப்பட்ட இந்தியர்கள்

பசியில் சுருண்டிருந்த மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகள், உணவுப் பொருள் சேமிப்பிடங்களைச் சூறையாடினார்கள். இந்த நெரிசலில் சிக்கிப் பலர் இறந்ததும், கலவரக்காரர்களின் கோபம் குப்தா சகோதரர்களின் அட்டூழியங்கள் மீது மையம் கொண்டது. பின்னர், அங்கு வசிக்கும் இந்தியர்கள் மீது அந்தக் கோபம் திரும்பியது. தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் இந்தியர்கள் பங்கெடுத்த வரலாறு கலவரக்காரர்களால் பொருட்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, ஜூமா ராஜிநாமா என்றதுமே குப்தா குழுமம் அடியோடு சுருட்டிக்கொண்டு அரபு நாடுகளுக்குப் பறந்துவிட்டது. அவர்கள் மீதான கோபத்தில் அப்பாவி இந்தியர்களைக் கலவரக்காரர்கள் காவு வாங்கினார்கள்.

டர்பன், ஜோகன்னஸ்பர்க் என இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் தாக்குதல் அதிகரித்தன. கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் இந்தியர்களே அதிகம். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரபூர்வமாக அழுத்தம் கொடுத்த பிறகே தென்னாப்பிரிக்க ராணுவம் வீதிகளில் இறங்கிக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. கலவரத்தீ தற்போதைக்கு மட்டுப்பட்டபோதும் உள்ளுக்குள் இன்னமும் கனன்றுகொண்டிருப்பதால், உயிரச்சத்தில் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் தத்தளித்துவருகிறார்கள்.

மகாத்மா காந்தியின் வழி நின்று நிறவெறியிலிருந்து விடுபட்டு முன்மாதிரி ஆப்பிரிக்க தேசமாக வளர்ந்துவந்த தென்னாப்பிரிக்காவின் சரிவுக்கும் இந்தியர்கள் சிலரே காரணமாகியிருப்பது வரலாற்றின் கழுவ முடியாத கறையாக மாறியிருக்கிறது!

- இது போன்ற கட்டுரைகளை ‘காமதேனு’ மின்னிதழில் (https://www.hindutamil.in/kamadenu) படிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x