Last Updated : 06 Aug, 2021 03:19 AM

 

Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

ஒலிம்பிக் திருவிழா- ‘குட்டி ஜமைக்கா’ திருச்சி

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றிருப்பவர்களில் கிட்டத்தட்ட 10% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியா பங்கேற்கும் 18 விளையாட்டுப் பிரிவுகளில் பாய்மரப் படகு, வாள்வீச்சு, டேபிள் டென்னிஸ், தடகளம் ஆகிய நான்கு பிரிவுகளில் தமிழ்நாட்டு வீரர்/ வீராங்கனைகள் பங்கேற்றார்கள். தேசியத் தடகள அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர். இந்த ஐவரில் மூவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பெருநகரங்களில் செலவு அதிகம் பிடிக்கும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தப்படுகிறது. அவற்றுக்கான பயிற்சி, பயணச் செலவு போன்றவற்றில் ஒரு பகுதியையாவது சமாளிக்கக்கூடிய நிலையில் இருப்பவர்களே மாநில, தேசிய அளவில் பரிமளிக்க முடிகிறது. பெருமளவு செலவுசெய்ய இயலாத நிலையில் உள்ள எளிய மக்கள், தடகளப் போட்டிகளில்தான் பங்கேற்க முடிகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவருமே வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஒலிம்பிக்கில் முதன்முறையாக 2 ஆண்கள், 2 பெண்கள் பங்கேற்கும் 4 x 400 கலப்புத் தொடரோட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா. இவருடைய தந்தை வெங்கடேசன் கட்டிடத் தொழிலாளி.

குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், வீட்டு வேலை செய்யும் தாயின் வளர்ப்பில் உருவானவர். 2021 பெடரேஷன் கோப்பையின் இரண்டு போட்டிகளில் டுட்டி சந்த், ஹிமா தாஸை வீழ்த்தியவர். 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா புரிந்த சாதனையை முறியடித்தவர்.

லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், இரண்டாவது முறையாக ஒலிம்பிக் 4x400 ஆண்கள் தொடரோட்டப் போட்டியில் பங்கேற்கிறார். 2018 ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்புத் தொடரோட்டத்தில் தங்கம், ஆண்கள் தொடரோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் இவர். இவரது தந்தை பள்ளி வாகன ஓட்டுநர்.

ஓட்டத்தில் உலக சாதனை படைத்த ஹுசைன் போல்ட், ஜமைக்கா போன்ற சிறிய நாட்டிலிருந்து உருவானதுபோல், தமிழகத்தின் குட்டி ஜமைக்காவாக திருச்சி உருவாகிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x