Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

அனைவருக்கும் தடுப்பூசி: அதுவே சிறந்த முதலீடு

நிக்கோலஸ் கிறிஸ்டோஃப்

மிகப் பெரிய லாபத்தைத் தருவது எது? ஏழை நாடுகளின் மக்களுக்கு, கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைப் போடும் உலகளாவிய இயக்கம்தான். இதுவரை அமெரிக்காவும் ஜி-7 குழுவின் நாடுகளும் உலக அளவில் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் உண்மையில் தலைமைப் பண்பை வெளிப்படுத்தவில்லை. அமெரிக்கத் தடுப்பூசித் தேசியம் என்பது தடுப்பூசிகளையும் அவற்றைத் தயாரிப்பதற்கான கச்சாப் பொருட்களையும் அமெரிக்கா பதுக்கி வைத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும். இதனால், பிற நாடுகளில் தேவையற்ற இறப்புகள் நேர்வதுடன் கரோனாவின் பிடியிலிருந்து அமெரிக்கா விடுபடும் வேகத்தையும் அது குறைத்துவிடும்.

“இது ஜி-7 நாடுகளின் மாபெரும் தார்மீகத் தோல்வி. வேறு எதையும் பார்க்க முடியாதவாறு நாம் நமது சொந்தப் பிரச்சினையிலேயே மூழ்கிக்கிடக்கிறோம்” என்றார் நோபல் பரிசு பெற்ற பொருளியலர் எஸ்தர் டுஃப்லோ. ஏழை நாடுகளில் உருவாகும் வேற்றினங்கள் காரணமாக, “இது பெரிய தோல்வி மட்டுமல்ல; இது மறுபடியும் வந்துவிடாமல் நம்மை வாட்டப்போகிறது என்று நினைக்கிறேன்” என்கிறார் டுஃப்லோவின் கணவரும் அவருடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளியருமான அபிஜித் பானர்ஜீ.

மனித குலத்தின் செல்திசை

இது முதன்மையாக, பணத்தைப் பற்றிய பிரச்சினை இல்லைதான். இது உயிர்கள் தொடர்பானது. மனித குலத்தின் செல்திசை பற்றியது. ஆனால், லாபக் கணக்குக்கு ஏற்ப தங்களின் அறவுணர்வை வெளிப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (International Monetary) புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில எண்களைத் தருகிறது. ஏழை நாடுகளின் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் இப்போது 5,000 கோடி டாலர்கள் முதலீடு செய்து பெருந்தொற்றை முன்னதாகக் கட்டுப்படுத்தினால் 2025-க்குள் அசத்தலான 9 லட்சம் கோடி டாலர் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் கணக்கிட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டுக்கும் 267% என்று நான்கு ஆண்டுகளுக்கும் இதனால் லாபம் கிடைக்கும் என்று சில வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதுவே தனியார் பங்குகள் என்றால் ஆண்டுக்கு 11% லாபம்தான் கிடைக்கும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று கூறுகிறது. உலக அளவில் தடுப்பூசிகளில் செய்யும் இந்த முதலீடானது “நவீன வரலாற்றில் பொதுத் துறையில் செய்யப்பட்ட முதலீடுகளிலேயே மிகவும் அதிகமானது” என்று பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகிறார். இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 40%, பேருக்கும் 2022-ன் முதல் பாதிக்குள் குறைந்தபட்சம் 60% பேருக்கும் தடுப்பூசி போடுவதுதான் இலக்கு.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தின் மூலம் செல்வந்த நாடுகளுக்குப் பொருளாதாரரீதியில் அதிக பலன் கிடைக்கும் என்றும், கூடுதலாக ஒரு லட்சம் கோடி டாலர்கள் வரி வருவாயாகக் கிடைக்கும் என்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் கணக்கிட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், கூடுதல் வரி வருவாயில் மட்டும் இந்தத் தடுப்பூசி இயக்கத்தால் பல மடங்கு பலன் கிடைக்கும்.

எதிர்கொள்ளும் சவால்கள்

நம் இனத்தின் நல்வாழ்வு தற்போது ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. பல தசாப்தங்களாக, மனிதர்கள் கடுமையான வறுமை, கல்வியறிவின்மை, நோய்கள், பார்வையின்மை, பசி பட்டினி போன்றவற்றுக்கு எதிராகக் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக நாம் மறுபடியும் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். குறைந்த வருமானப் பிரிவில் உள்ள நாட்டை வைரஸானது சூறையாடும்போது, இளம் பெண்களின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. வைட்டமின் ஏ ஊட்டம் தவிர்க்கப்பட்டு அதனால் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு மேலும் அதிகமாகப் பார்வையிழப்பும் இறப்பும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதில்லை என்பதால், அவர்கள் உண்ணும் உணவு அவர்களுடைய உடல்களுக்கோ மூளைகளுக்கோ ஊட்டம் அளிக்காமல் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகளுக்கு ஊட்டம் அளிக்கிறது. இதனால், அவர்கள் சோகையாகவும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாகவும் ஆகிறார்கள். பெண்களுக்குக் கருத்தடை சாதனங்களோ மகப்பேறு சிகிச்சையோ கிடைப்பதில்லை; சிலர் பிரசவத்தின்போது இறந்துபோகிறார்கள் அல்லது பிரசவத்தோடு தொடர்புடைய யோனிவாய்ப் புரைப்புண்கள் (fistula) ஏற்படுகின்றன.

இது எல்லாமே உலகளாவிய ஏற்றத்தாழ்வை அதிகரித்துவிடுவதாக அச்சுறுத்துகின்றன. “உலகின் பெரும்பான்மைத் தடுப்பூசிகளை உருவாக்கவும் வாங்கவும் செய்யும் சில நாடுகள் ஏனைய நாடுகளின் விதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டேட்ரோஸ் அதானம் கேப்ரியேஸஸ். “தடுப்பூசியில் காணப்படும் தற்போதைய ஏற்றத்தாழ்வானது மிக மோசமான அநீதியாகும், இது பெருந்தொற்றை மேலும் நீடிக்கச் செய்கிறது. உலகில் உள்ள 75%-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளையெல்லாம் வெறும் 10 நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன” என்கிறார் அவர். ஜாம்பியா, சூடான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் 1%-க்கும் குறைவானவர்களே குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கான நல்வாய்ப்பு

பல நாடுகளின் அதிபர்களும் பிரதமர்களும் தங்கள் குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவது புரிந்துகொள்ளப்படக் கூடியதே. ஆனால், கையிருப்பு அதிகமாகும்போது கரோனாவை எதிர்த்து அமெரிக்கா உலக அளவில் போரிட வேண்டும் – இதுதான் சரி என்பதால் மட்டுமல்ல; அமெரிக்காவின் நலனுக்கும் இதுதான் நல்லது. ஜாம்பியாவில் காணப்படும் வைரஸைப் புறக்கணித்தால் அது பல்கிப் பெருகி அமெரிக்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ட்ரம்ப் அதிபராக இருந்தபோது, சிதைந்துபோன நல்லெண்ணத்தையும் மெல்லதிகாரத்தையும் மறுஉருவாக்கம் செய்யும் விதத்தில் தடுப்பூசி முன்னெடுப்பை அமெரிக்கா மேற்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்; இதன் மூலம் நவம்பரில் நடக்கக்கூடிய பருவநிலை மாற்றத்துக்கான ஐநாவின் மாநாட்டில் அமெரிக்காவுக்கு அனுகூலங்கள் ஏற்படலாம்.

வெளிப்படையாகவே, பன்னாட்டுச் செலாவணி நிதியம் தரும் எண்கள் மீது எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், அவை மிகவும் கடினமான ஊக மதிப்பிடல்களை அடிப்படையாகக் கொண்டவை. சர்வதேசத் தடுப்பூசி முன்னெடுப்பான கோவேக்ஸ் எங்கெல்லாம் இந்தத் திசையில் முன்னேற்றம் ஏற்படுவது கடினமாக இருக்கிறதோ அங்கெல்லாம் மிகுந்த தீரத்துடன் பணியாற்றுகிறது. தெற்கு சூடான் நாட்டில் 59 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுவதற்கு முன்பே அவை காலாவதியாகிவிட்டன.

பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் மதிப்பீடுகளுக்கும் நிஜமான பலன்களுக்கும் பெருத்த இடைவெளி இருந்தாலும், 9 லட்சம் கோடி டாலர்களாக இல்லாமல் 90 ஆயிரம் கோடி டாலர்களாக இருக்கும் என்றாலும் – 5 ஆயிரம் கோடி டாலர்களைவிட இது 18 மடங்கு அதிகமாகும். மேலை நாடுகள் இதை இழக்கலாகாது. ஜி-7 நாடுகளில் அமெரிக்காவின் தலைமையை நிலைநாட்டவும் அதன் மூலம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நன்மை ஏற்படவும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பைடனுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x