Last Updated : 31 May, 2021 03:12 AM

 

Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

உலகிலேயே அதிக மக்கள் தொகை: என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா?

சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு. இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா விஞ்சிவிடும் என்றார்கள். இது 2030-ல் நடக்கும் என்று மக்கள்தொகைக் கணக்காளர்கள் மதிப்பிட்டார்கள். பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். இப்போது 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்!

இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்துவருவதுதான். கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை வெறும் 7.2 கோடி மட்டுமே அதிகரித்திருக்கிறது. 1970-ல்ஆயிரம் பேருக்கு 34 குழந்தைப் பிறப்புகள் என்றிருந்த விகிதம், 1995-ல் ஆயிரம் பேருக்கு 17 குழந்தைகள் என்று சரிபாதியாகக் குறைந்தது. இப்போது 11.3 என்று மேலும் சரிந்து, உலகின் குறைந்த பிறப்பு விகிதமுள்ள நாடுகளின் பட்டியலில் சீனா சேர்ந்துவிட்டது. இந்தியாவின் விகிதம் 1970-ல் ஆயிரம் பேருக்கு 41 குழந்தைப் பிறப்புகள் என்பதாக இருந்து, 1995-ல் 28 என்றாகி, தற்போது 18.2 ஆகக் குறைந்திருக்கிறது.

ஒற்றைக் குழந்தைத் திட்டம்

பொதுவாக, நம்மில் பலரிடமும் ஒரு கருத்து உண்டு: இந்தியாவின் எல்லா முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிட்டால் இந்தியா முன்னேறிவிடும். சீனத் தலைவர்களும் அப்படி நினைத்தார்கள். அதன்படி, சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எழுபதுகளில் தொடங்கியது. 1979-ல்தான் உலகெங்கிலும் முன்னுதாரணமில்லாத ‘ஒற்றைக் குழந்தைத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. அரசு நிர்ணயித்திருக்கிற இலக்கை அடைவதற்காகக் களப்பணியாளர்கள், அரசின் ஆசிர்வாதத்தோடு கடுமையாகச் செயல்பட்டனர். பல ஊராட்சி அலுவலகங்களில் மகளிரின் மாதவிடாய் கண்காணிக்கப்பட்டது. கிராமப்புறங்களிலும் சிறுபான்மை இனத்தவரிடமும் இரண்டாம் குழந்தை அனுமதிக்கப்பட்டபோதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த ஒற்றைக் குழந்தைத் திட்டத்தால் சீனாவில் முதியோரின் விகிதம் அதிகரித்திருக்கிறது. சீனாவின் மக்கள்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2010-ல் 13.3%-ஆக இருந்தார்கள். இப்போது அவர்களின் விகிதம் 18.7%. இதே காலகட்டத்தில் உழைக்கும் வயதினரின் (16 முதல் 59 வரை) விகிதம் 70.2%-லிருந்து 63.4%-ஆகக் குறைந்திருக்கிறது. இப்போதும் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை 89.4 கோடியாக இருக்கிறது. இது கணிசமான எண்ணிக்கைதான் எனினும் உழைக்கும் கரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. இது, உலகின் தொழிற்சாலை என்கிற பெயரோடு விளங்கும் சீனாவுக்கு நல்லதல்ல.

சீனாவில் நாமிருவர் நமக்கிருவர்

ஒருபுறம், மருத்துவ வசதிகளின் பெருக்கத்தால் மக்களின் ஆயுள் அதிகரிக்கிறது. மறுபுறம், குடும்பக் கட்டுப்பாட்டால் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை குறைகிறது. இதைச் சீன அரசு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துகொண்டது. ஆனாலும், ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை 2016-ல்தான் தளர்த்தியது. எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. ஆனால், எதிர்பார்த்த பலனைச் சட்டம் நல்கவில்லை.

செலவினங்கள் கூடிவிட்டன. தேவைகள் பெருகிவிட்டன. நகர்ப்புறப் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் மீது எதிர்பார்ப்புகள் மிகுந்துவிட்டன; அவர்களுக்குத் தமது வேலை, தொழிலைக் குறித்த அபிலாஷைகள் அதிகமாகிவிட்டன. மேலும், பல ஆண்டுகளாக அவர்கள் மனங்களில் ஒற்றைக் குழந்தை எனும் சித்தாந்தம் எழுதப்பட்டுவிட்டது. ஆகவே, பலரும் இரண்டாவது குழந்தையை நாடவில்லை. 2016-ல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1.8 கோடியாக இருந்தது. 2020-ல் இது கூடவில்லை; மாறாக 1.2 கோடியாகக் குறைந்தது. புதிய சட்டத்தால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை. இப்போது சில வல்லுநர்கள் எல்லாக் குடும்பக் கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்த வேண்டும் என்று பேசிவருகிறார்கள்.

இந்தியாவின் நிலை

சீனாவின் நிலையை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்குப் பயன் தரும். சீனாவை ஒட்டியே இந்தியாவிலும் உழைக்கும் வயதினரின் விகிதம் 65%-ஆக இருக்கிறது. ஆனால், சீனாவைப் போல் அது குறைந்துகொண்டல்ல; மாறாகக் கூடிவருகிறது. ஆனால், இந்த மனிதவளத்தை சீனாவைப் போல் நம்மால் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதுதான் துயரம்.

முதலாவதாக, இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அப்படி வேலையில் இருப்பவர்களிலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்கள். ஒப்பந்தக் கூலிகளாகவும் உதிரித் தொழிலாளிகளாகவும் தங்களது உழைப்பை விழலுக்கு இறைப்பவர்கள். எந்தப் பணிப் பாதுகாப்பும் இல்லாதவர்கள். கரோனாவின் இரண்டாவது அலை அதை நமக்கு இரண்டாவது முறையாக உணர்த்துகிறது. இரண்டாவதாக, கல்வி. இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 77% பேர். சீனாவில் இது 96.4%. கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 73% அதிகரித்திருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு 8,930 பட்டதாரிகள் என்பது 15,467-ஆகக் கூடியிருக்கிறது.1997-ல் சீனப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 35 லட்சம்; இப்போது 21.8 கோடி. அடுத்ததாக, இந்த கரோனாக் காலம் நமது பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனத்தைப் பறைசாற்றுகிறது. மேலும், இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 69. ஒரு சராசரி சீனர், ஒரு சராசரி இந்தியரைக் காட்டிலும் 8 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார்.

சீனாவின் மக்கள்தொகை 2025-க்குப் பிறகு குறையத் தொடங்கும். அப்போது சீனா உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடு என்கிற தனது கிரீடத்தை இந்தியாவுக்குச் சூட்டிவிடும். அப்போது இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த மனிதவளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப நம்முடைய திட்டங்களைக் கூர்மைப்படுத்த வேண்டும். கல்வியையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது நல்ல தொழில் சமூகம் உருவாகும். அப்போது நம் மனிதவளத்தின் மதிப்பும் உயரும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x