Published : 12 May 2021 04:36 AM
Last Updated : 12 May 2021 04:36 AM

திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம்

திராவிடக் கட்சிகளின் ஆளுமை மிக்க தலைவர்களான ஜெயலலிதாவும் மு. கருணாநிதியும் மறைந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சிகள் தங்களின் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. பதிவான வாக்குகளில் திமுகவும் அதிமுகவும் மட்டும் 67.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அமமுக, மதிமுக ஆகிய சிறிய திராவிடக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்தம் 70.4% வாக்குகள். இதுதான் திராவிடக் கட்சிகள் இதுவரை பெற்றிருக்கும் இரண்டாவது அதிகபட்ச வாக்குவீதம்; திராவிடக் கட்சிகள் 2016-ல் பெற்ற இதுவரையிலான அதிகபட்ச வாக்குவீதமான 73.9%-ஐவிட இது 3.5% மட்டுமே குறைவாகும். திமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட திராவிடக் கட்சிகள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பது நம் கவனத்தை அதிகமாகக் கவர்கிறது.

எதிர்பார்ப்புகள், விளைவுகள்

அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிட குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில் அந்தக் கட்சி தொடர்ந்து வந்த இரண்டு தலைவர்களின் (எம்ஜிஆர், ஜெயலலிதா) ஆளுமைக் கவர்ச்சியையே சார்ந்திருந்தது, கருணாநிதி தனக்குப் பிறகு ஒரு தொடர்ச்சியை விட்டுச்சென்றதுபோல் ஜெயலலிதா தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கவில்லை. மேலும் கட்சியின் கட்டமைப்பும் பலவீனமாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைவர்கள் பெரிதும் ஒன்றிய அரசையே சார்ந்திருந்தார்கள், மாநிலத்தின் மிதமான மக்கள்நல பாணியை அவர்களால் போதிய அளவுக்குத் தக்கவைக்க முடியவில்லை, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தனத்தை, இந்துப் பெரும்பான்மைவாதத்தை, முழுமையான நவதாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தார்கள் அல்லது கிட்டத்தட்ட எதிர்க்கவே இல்லை. குடியுரிமை (திருத்தச்) சட்டம், ஜம்மு & காஷ்மீரை ஒன்றியப் பிரதேசங்களாக ஆக்கியது, பள்ளிக்கல்வியின் வெவ்வேறு தேர்வுகளை மையப்படுத்தியது, விவசாய மானியங்களைக் குறைத்தது, வேளாண்மையைப் பெருநிறுவனமயத்தை நோக்கி முடுக்கிவிட்டது போன்றவைதான் இந்தக் கொள்கைகள்.

அதிமுகவை திமுக வெற்றிகொண்டது என்றாலும் அதை மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. 3.1% வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வென்றிருக்கிறது. திமுகவுக்கு 35.1% வாக்குகளும் அதிமுகவுக்கு 32% வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு தேர்தலைவிட திமுக தற்போது 3.2% வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறது, அதிமுக 9.1% வாக்குகளை இழந்திருக்கிறது. பிரதானக் கட்சிகளுக்கிடையிலான 12.3% வாக்குகள் நகர்வு என்பது முக்கியமானது. இரண்டு பெரிய கூட்டணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 5.7% ஆகும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 45.4% வாக்குகளைப் பெற்றது; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39.7% வாக்குகளைப் பெற்றது. இரண்டையும் கூட்டினால் கிடைக்கும் 85.1% வாக்கு வீதமானது தேர்தல்களில் திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம் தொடர்வதைக் காட்டுகிறது. வட தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் திமுக ஆதிக்கம் நிலவிய அதே சமயத்தில் மேற்குப் பகுதியில் அதிமுக வலுவாகக் காணப்பட்டது; ஆனால், தெற்கில் அதன் ஆதிக்கம் குறைந்துவிட்டது.

இதற்கு மாறாக, உறுதியற்ற தலைமை மாற்றத்தால் பலனடையலாம் என்று நம்பிய அரசியல் கட்சிகள் பெரிதும் வளரவில்லை. பழைய தேசிய கட்சிகள் தேங்கிப்போயின. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வீதம் 6.5%-லிருந்து 4.3%-ஆகக் குறைந்தது, முன்பைவிட குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டது இதற்குக் காரணம் (2016 தேர்தலில் 41 இடங்கள், 2021-ல் 25) 1989-ல் 20.2% வாக்குகள் பெற்றதிலிருந்து சீராகக் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பாஜக 2.9%-லிருந்து 2.6%-ஆகக் குறைந்திருக்கிறது, ஏனெனில் 2016-ல் எல்லாத் தொகுதிகளிலும் நின்ற அக்கட்சி இந்தத் தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. இதுவே 2001 தேர்தலில் அதிகபட்சமாக 3.2% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. மக்கள்தொகையில் எல்லாப் பெரிய பிரிவினர்களையும் உள்ளடக்கும் கட்சிகள் தற்போது 13.0% வாக்குகள் பெற்றிருக்கின்றன. 2016-ல் 4.4% வாக்குகள் மட்டுமே பெற்றன; 2006-ல் 14.4% வாக்குகள் பெற்றதுதான் அதிகம். குறிப்பிட்ட சாதிகள், மதக் குழுக்கள் அல்லது பிராந்தியங்கள் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகள் 2011-ல் 8.1% வாக்குகளும் தற்போது 6.7% வாக்குகளும் பெற்றிருக்கின்றன.

எல்லாத் தரப்புகளுக்குமான புதிய கட்சிகளில் பெரியது நாம் தமிழர் கட்சிதான் அதற்கு 6.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதற்கு அடுத்ததாக அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தலா 2.3% வாக்குகள் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்சிகள் 0.4% வாக்குகள் பெற்ற தேமுதிகவை பின்னுக்குத் தள்ளியுள்ளன. தேமுதிக 2016-ல் பெற்ற 2.4% வாக்குகளோடும் 2006-ல் பெற்ற 8.4% வாக்குகளுடனும் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பாமகவை உள்ளடக்கிய சாதிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாகத் தற்போதைய தேர்தலில் 6.0% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. இவற்றில் பாமகவே பெரிய கட்சி. இந்தக் கட்சிகள் 2016-ல் 7.7% வாக்குகளும் அதிகபட்சமாக 2011-ல் 8.4% வாக்குகளும் பெற்றிருக்கின்றன. பாமக தற்போது 3.8% வாக்குகளே பெற்றிருக்கிறது. அந்தக் கட்சி அதிகபட்சமாக 1991-ல் 5.9% பெற்றது. மதரீதியிலான கட்சிகள் ஒட்டுமொத்தமாக 3.6% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன, இவற்றுள் பாஜக 2.6% வாக்குகளுடன் பெரிய கட்சியாக உள்ளது. இவ்வாறாக, 1990-களிலிருந்து திராவிடக் கட்சிகளின் சமூகப் பங்கேற்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டேவந்தாலும் அந்தக் கட்சிகள்தான் தேர்தல்ரீதியாக ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தத் தேர்தல் போக்குகளைத் தீர்மானித்தது எது? இது எதற்குக் கட்டியம் கூறுகிறது? இந்தியாவின் வேறு இடங்களுடன் அதை எப்படி ஒப்பிட முடியும்? இந்திய அரசியல் களத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தப் போக்குகள் எதை உணர்த்துகின்றன?

நீடித்த வெற்றிக்கான அடித்தளம்

இடைநிலை சாதிகளையும் தாழ்த்தப்பட்ட சாதிகளையும் பிற கட்சிகளும் அரசாங்கங்களும் குறைவாகவே கணக்கிலெடுத்துக்கொண்டன. 1950-களில் வளர ஆரம்பித்த திராவிடக் கட்சிகள் அந்தப் பிரிவினர்களை அணிதிரட்டுவதன் மூலம் வளர்ந்தன. சாதி, மொழி, வட்டார வழக்கு, தொழில் போன்றவற்றின் அடிப்படையின் வெகுமக்களையும் மேல்தட்டினரையும் பிரித்துக் காட்டும் வெகுஜன சொல்லாடல்களைக் கொண்டு திராவிடக் கட்சியினர் இதைச் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களின் ஆதிக்கம் நீடித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. கட்சியின் கட்டமைப்புகளை வலுவாக ஆக்கியது, ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் வகையில் உட்குழுக்களை உருவக்கியதும்தான்; இவையெல்லாம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக் கொள்கைகளின் மூலம் தக்கவைக்கப்பட்டன, 1990-களில் ஒன்றிய அரசின் நவதாராளமயப் போக்கை சுவீகரித்துக்கொண்ட பிறகும் அந்த கொள்கைகளை திராவிடக் கட்சிகள் தக்கவைத்துக்கொண்டன. இவற்றுள் மிக முக்கியமானவை உயர்கல்வியிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு (69%), ஏழைகளிடையே ஊட்டச்சத்து, உடல்நலம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்திய மதிய உணவுத் திட்டம், கல்வியிலும் ஆரம்ப சுகாதாரத்திலும் செய்யப்பட்ட அதிக அளவிலான முதலீடுகள், 2016 வரை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்றான கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை ஆகும்.

திராவிடக் கட்சிகள் 1970-களிலிருந்து மேல்நோக்கி நகரும் சமூகக் குழுக்களுக்கும் முன்னேறிய குழுக்களுக்கும் நெருக்கமாக ஆயின. அவர்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் தலித்துகள் ஆதிவாசிகளை விட இடைநிலை சாதிகளுக்கே அதிக பலன்கள் அளித்தன. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அவர்கள் இரு மடங்காக்கி 50%-ஆக ஆக்கினார்கள், அதேவேளையில் மேலும் 27% மக்கள்தொகையினர் அந்தச் சலுகையை அடையும்படி செய்தனர், இதில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் உள்ளிட்ட செல்வச் செழிப்பான சாதியினரும் அடங்குவார்கள், இவர்கள் இந்தச் சலுகைகளை அதிக அளவில் பெற்றார்கள். இதற்கு மாறாக, பட்டியல் இனத்தோர்-பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாக மட்டுமே, அதாவது 16%-லிருந்து 19%-ஆக மட்டுமே உயர்த்தியுள்ளனர். இந்தப் பிரிவினரின் மக்கள்தொகை 21% என்று உண்மைக்கும் குறைவாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது, அதற்கும் குறைவாகவே இந்த இடஒதுக்கீடு இருக்கிறது. 1989-ல் பழங்குடியினருக்கு 1% உள்ஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினருக்கு 20% உள்ஒதுக்கீடும், 2009-ல் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடும் வழங்கப்பட்டது – பாமகவை சமாதானப்படுத்தவும் தேர்தல் காரணங்களை முன்னிட்டும் கடந்த பிப்ரவரியில் அதிமுக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 10.5% வழங்கியது. இது சீர்மரபினரின் இடஒதுக்கீட்டை 7%-ஆகக் குறைத்தது, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 2.5%-ஆகக் குறைத்தது.

திராவிடக் கட்சிகளின் பிற கொள்கைகளும் திட்டங்களும் சமுக அடுக்கில் மேல்நோக்கிய நகர்வுக்குத் தேவையானவற்றை வழங்கின. நிலவுடைமையும் குத்தகை சீர்திருத்தங்களும் பெரிதும் இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்களுக்கே உதவின, மிகவும் சிறிய அளவிலேயே தலித்களுக்கு அவை உதவின. இந்தப் பிரிவினர், பாசனமும் மண்வளமும் குறைந்துபோனதால் நிலவுடைமையாளர்கள் விற்ற நிலங்களை வாங்கினார்கள். மானிய விலையில் வழங்கப்பட்ட இடுபொருட்கள், கடன்கள், கடன் தள்ளுபடி போன்றவற்றால் பலனடைந்தார்கள். இதுபோன்ற கொள்கைகள் சமூக அடுக்கின் கீழ் நடுத்தரப் பிரிவினரும் இடைப்பட்ட நிலையினரும் மேலே வருவதற்கு உதவின. இவையெல்லாம் சேர்ந்து திராவிடக் கட்சிகள் தங்கள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவின. கூடவே சாதிக்கும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக எழுந்த சவால்களைக் கட்டுப்படுத்தின.

மாற்றுகளும் அவற்றின் சாத்தியங்களும்

இந்த அனுபவங்களெல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு இதுவரை மேலாதிக்கத்தை வழங்கிவந்தன; ஆனால் 1990-களில் இந்தக் கட்சிகள் அணிதிரட்டலை நிறுத்திக்கொண்டுவிட்டதால் இந்த மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. அதற்குப் பிறகு, பிற கண்ணோட்டங்கள் சிவில் சமூகத்தை ஈர்த்தன, குறிப்பாக சாதி சார்ந்த அணுக்கங்கள், பெருநிறுவனமயமாதலை எதிர்ப்பவர்கள், மதவிய தேசியர்கள் போன்ற கண்ணோட்டங்கள். கட்சி அமைப்புகளில் அவற்றின் தாக்கங்கள் இதுவரை குறைவாகத்தான் இருந்துவந்திருக்கின்றன – பாமக மற்றும் 1989-லிருந்து பிற இடைநிலை சாதிக் கட்சிகள், 2000-களிலிருந்து பாஜக, தேமுதிக, தலித் கட்சிகள், 2016-லிருந்து நாம் தமிழர் கட்சி போன்றவற்றின் சிறிய அளவிலான வளர்ச்சிக்கு அந்தக் கண்ணோட்டங்கள் உதவிவந்திருக்கின்றன. இந்த சக்திகளெல்லாம் பாமக, தலித் கட்சிகள் செய்ததுபோல் குறிப்பிட்ட சாதியினருக்கான உரிமைகளைக் கோரியிருக்கின்றன, அல்லது சாதாரண மக்களின் இன-மொழி அரசியலுக்குப் புத்துயிர் கொடுத்து, திராவிட மாதிரியிலான இன-வெகுஜனவிய அம்சங்களைச் சார்ந்து தங்கள் அரசியல் போக்குகளைக் கட்டமைத்துக்கொண்டன.

பிரதான சமூகங்களைச் சார்ந்தோ மொழி சார்ந்தோ இயங்காத பிரபலங்களான கமல்ஹாஸன், ரஜிஜிகாந்த் போன்றோர் கட்சி அரசியல் போட்டிகளில் குறைந்த அளவே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் செய்ததைவிட மேலும் சமத்துவமான வகைகளில் அதிகாரத்தையும் வளங்களையும் மறுபகிர்மானம் செய்ய முயலும் கட்சிகளுக்கு, அவை ஏற்கெனவே இருக்கும் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் அரசியலைக் கட்டமைத்தால், பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதையே இது உணர்த்துகிறது.

பாஜகவின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் ஜனநாயகமும் சிறுபான்மை மதத்தினர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளும் நசுக்கப்படுவதைத் தடுக்க நினைப்பவர்கள் தற்போதைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து நம்பிக்கை பெறலாம். வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், கேரளத்தில் இடதுசாரிக் கூட்டணி, தமிழ்நாட்டில் திமுக ஆகியவை தமக்கேயுரிய வகைகளில் ஒன்றிய அரசின் இந்துப் பெரும்பான்மைவாதம், அதிகாரக் குவிப்பு, ஜனநாயக மீறல்கள் போன்றவற்றை எதிர்த்துவந்திருக்கின்றன. அவர்களின் வெற்றிகளெல்லாம் முறையான கூட்டணி அமைத்தால் சில பிராந்தியங்களில் இந்துத்துவத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டுக்கின்றன. ஆனால், வங்கத்தின் நிலை வேறு. அங்கே 2016-ஐவிட தற்போது பாஜகவின் வாக்கு வீதம் 28% வளர்ந்திருக்கிறது; சிபிஐ(எம்), காங்கிரஸ் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி அங்கே பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

பாஜகவின் வளர்ச்சியையும் ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்குகளையும் தடுக்கக் கூடியவை என்று நாம் எண்ணிக்கொள்வதன் வலுவைக் குறைப்பவையாக இரண்டு விஷயங்களைக் கருதலாம். முதலாவது, நாடு முழுவதும் பாஜக வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடும் கேரளமும் விதிவிலக்காக இருக்கின்றன. இரண்டாவது, இந்தியாவின் சீர்மையற்ற கூட்டாட்சித்துவமானது வளங்களின் பகிர்மானத்தைத் தீர்மானிப்பதற்கு போதுமான சுதந்திரத்தையும் பொதுப் பட்டியலின் மீதான அதிகாரத்தையும் வழங்குகிறது. 1989-க்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் அதிகாரத்தை மையத்தில் குவித்தன; 1989-லிருந்து 2014 வரையிலான கூட்டணி ஆட்சிகள் அதிகாரப்பரவலாக்கம் செய்தன. ஆனால், பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக அரசுகள் 2014-லிருந்து அதிகாரத்தை மையத்தில் குவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் ஒன்றிய அரசு முன்னெடுக்கும் எதேச்சாதிகாரம், இந்து மேலாதிக்கம், பெருநிறுவனங்களை மையம் கொண்ட வளர்ச்சி போன்றவற்றை எதிர்க்க முடியாத வகையில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசினால் கட்டுப்படுத்திட முடியும்.

- நரேந்திர சுப்பிரமணியன், அரசறிவியல் பேராசிரியர், மேக்கில் பல்கலைக்கழகம்.
© ‘தி இந்து’, தமிழில்: ஆசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x