Last Updated : 05 Nov, 2015 09:41 AM

 

Published : 05 Nov 2015 09:41 AM
Last Updated : 05 Nov 2015 09:41 AM

எங்கே இன்னொரு பூமி?

பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது

மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார்.

மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால், அப்படியான வேற்றுலகவாசிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் உண்டு. நாம் கற்பனைப் பயணமாக அண்டவெளிக்குச் சென்றால், இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஆபத்தான அண்டவெளி

நீங்களும் நானும் ஒரு விண்கலத்தில் ஏறி, பூமியிலிருந்து ஏதோ ஒரு திசையில் கிளம்புகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். பூமி நமது பார்வையிலிருந்து மறைகிறது. ஏறத்தாழ 8,000 கோடி கி.மீ. தொலைவுக்குச் சென்ற பிறகு, திரும்பிப் பார்க்கிறோம். சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. எவ்வளவு மாதங்கள் ஆனாலும் அதே கும்மிருட்டுதான். விண்கலத்துக்கு வெளியே கடும் குளிர். அத்துடன் ஆபத்தான கதிர்கள். அதுதான் அண்டவெளி.

அங்கிருந்து பார்த்தால் சூரியன் தெரியவில்லை. மிகத் தொலைவு வந்துவிட்ட காரணத்தால் சூரியன் ஒரு சிறிய நட்சத்திரமாகத்தான் தெரியும் போலும். குறிப்பிட்ட திசையில் பார்க்கிறோம். நம்மிடம் உள்ள கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால் அந்த நட்சத்திரம் சூரியனாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூரியனைச் சுற்றுகிற பூமி உட்பட ஒன்பது கிரகங்களில் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.

நாம் பூமியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றே மறந்துவிட்டு சுற்றிலும் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை நோட்டமிடுகிறோம். நட்சத்திரமாகக் காட்சி அளிக்கிற சூரியன் இருக்கிற திசையில் கையை நீட்டி அதோ அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற ஒரு கிரகத்தில், அதாவது பூமியில் உயிரினங்கள் உள்ளன என்று அங்கிருந்தபடி உறுதியாகச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.

இதிலிருந்து சில விஷயங்கள் புலனாகின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதை உணர்கிறோம். மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டால், பூமி இருக்கிற இடத்தையே கண்டுபிடிக்க முடியாது என்பதுபோலவே பூமியில் இருந்து பார்த்தால் எங்கோ இருக்கிற வேறு பூமிகளை எளிதில் கண்டறிய இயலாது என்பதையும் புரிந்து கொள்கிறோம். சூரியனுக்கு ஒரு பூமி இருப்பதைப் போலவே வேறு பல நட்சத்திரங்களுக்கும் பூமி மாதிரி கிரகங்கள் இருக்கலாம் என்பது புரிகிறது. அவ்விதம் எங்கோ இருக்கிற பூமிகளிலும் உயிரினங்கள் இருக்கலாம்.

இயற்கைக்குப் பாரபட்சம் இல்லை

இயற்கையானது அண்டவெளியில் ஒரு மூலையில் இருக்கிற பூமியை மட்டும் விசேஷமாகத் தேர்ந்தெடுத்து, மனிதன் உட்பட உயிரினங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத முடியாது. இயற்கைக்கு அவ்விதமான பாரபட்சம் இருக்க முடியாது.

பூமியை எடுத்துக்கொண்டால், உயிரினங்கள் நிலப் பகுதியில் இருக்கின்றன, தரைக்கு அடியில் இருக்கின்றன, தரைக்கு மேலும் இருக்கின்றன. கடல்களிலும் இருக்கின்றன, சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும் உள்ளன. பனிக்கட்டியால் மூடப்பட்டு கடும் குளிர் வீசுகின்ற அண்டார்ட்டிகாவின் பாதாள ஏரிகளிலும் இருக்கின்றன. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களில் தொடங்கி ராட்சத திமிங்கிலங்கள் வரையிலான இந்தப் பல்வகையான உயிரினங்களை யாரும் ஒரே நாளில் உண்டாக்கிவிடவில்லை. கடந்த பல நூறு கோடி ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி மூலம் இவை உண்டாகின.

பூமியில் உள்ள சூழ்நிலைகள் வேறு எங்கேனும் உள்ள ஒரு கிரகத்தில் இருக்குமானால், அங்கும் இதே போன்று பலவகையான உயிரினங்கள் இருக்க முடியும். ஆனால், அவற்றை நம்மால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்பதால், பூமி தவிர வேறு எங்கும் உயிரின வகைகள் கிடையாது என்று அடித்துக் கூறுவது அறிவுடைமை ஆகாது.

நாம் இதுவரை வெளியே போய் எங்கும் பார்க்கவில்லை. அதனால் நமக்குத் தெரியவில்லை. நாம் பூமியின் கைதிகளாக வாழ்ந்துவந்துள்ளோம். விண்வெளி யுகம் பிறந்ததற்குப் பிறகுதான் நமக்குக் கால் முளைத்தது. மனிதன் சந்திரனுக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். ஆனாலும், நாம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே சென்றதாகக் கூற முடியாது. ஏனெனில், சந்திரனும் பூமியின் பிடிக்குள் தான் இருக்கிறது. ஆகவேதான் அது பூமியைச் சுற்றி வருகிறது. வருகிற நாட்களில் செவ்வாய்க்குச் செல்கிறவர்கள்தான் பூமியிலிருந்து விடுபட்டுச் செல்கிற முதல் நபர்களாக இருப்பர்.

நாஸாவிலிருந்து புளூட்டோவுக்கு…

பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு மனிதன் சென்றது கிடையாது என்றாலும் மனிதன் அனுப்பிய பல ஆளில்லா விண்கலங்கள் சென்று ஆராய்ந்துள்ளன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்பது ஆண்டுப் பயணத்துக்குப் பிறகு, இப்போது புளுட்டோவை ஆராய்ந்து தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ உள்ள தூரம் சுமார் 500 கோடி கி.மீ. கிட்டத்தட்ட சூரிய மண்டலத்தின் எல்லை.

சூரிய மண்டலத்துக்கும் அப்பால் மிக விஸ்தாரமான அண்டவெளி உள்ளது. அந்த அண்டவெளியில் சூரியன் மாதிரி கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கும் கிரகங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் நாம் காணும் நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமல்லாமல், பல வகையான கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரேடியோ அலைகளும் அவற்றில் அடங்கும். இயற்கையாகத் தோன்றும் அந்த ரேடியோ அலைகள் காலம் காலமாகப் பூமிக்கு வந்துகொண்டிருக் கின்றன. அவற்றை நம் கண்களால் காண முடியாது.

இயற்கையாகத் தோன்றும் ரேடியோ அலைகளைப் போலவே செயற்கையாக ரேடியோ அலைகளை உண்டாக்க மனிதன் கற்றுக்கொண்டுள்ளான். ஒலியை அவ்வித ரேடியோ அலைகளாக மாற்றவும் மறுபடி அந்த அலைகளை ஒலியாக மாற்றவும் மனிதன் கற்றுக்கொண்டபோது வானொலிப்பெட்டி தோன்றியது.

நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ரேடியோ அலை களைப் பெற்று ஆராய்வதற்காக பெரிய பெரிய ஆன்டெனாக்களைக் கொண்ட ரேடியோ டெலஸ் கோப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே இருக்கின்ற கிரகத்தில் வாழக்கூடிய புத்திசாலி மனிதர்கள் ரேடியோ அலைகள் வடிவில் செய்திகளை அனுப்பினால் அவற்றையும் அந்த டெலஸ்கோப்புகள் மூலம் பெற முடியும்.

நட்சத்திரங்களிலிருந்து வருகிற ரேடியோ அலைக ளுக்கும் வேற்றுக்கிரகப் புத்திசாலி மனிதர்கள் அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஆகவேதான், அண்டவெளியிலிருந்து வித்தியா சமான சிக்னல்கள் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

வியாழன்தோறும் தொடர்வோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x