Published : 12 Nov 2015 11:12 AM
Last Updated : 12 Nov 2015 11:12 AM

பாஜக உணர வேண்டும்

‘வாழ்த்துகள் நிதிஷ்!’ தலையங்கம் அருமை. நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி வெற்றிபெற முக்கியக் காரணம், நிதிஷ் மற்றும் அவருடைய கூட்டணி என்பதைவிட, பாஜக என்றே சொல்ல வேண்டும். எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்த்த நிலை மாறி, மதவாத கோஷங்கள் சிறுபான்மையினருக்குப் பாதகம் விளைவித்தது. இதைத் தாண்டி மத்திய அமைச்சர்களின் அநாகரிகப் பேச்சு. தலையங்கம் இவற்றை எல்லாம் படம்பிடித்துக் காட்டுகிறது. இதை அடுத்த ஆண்டு எதிர் கொள்ளவிருக்கின்ற உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்கான எச்சரிக்கையாகவே பாஜக அரசு கொள்ள வேண்டும்.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

பிஹாரின் வெற்றி ஒரு மாநிலத்தின் வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியலின் பிரதிபலிப்புதான். இந்த வெற்றிக்கு நிதிஷ் குமாரோ, லாலு பிரசாத் யாதவோ சொந்தம் கொண்டாட இயலாது. இது பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள்தான் என்பது கண்கூடு. பாஜக வெற்றிபெற்றிருந்தால் பிரதமர் மோடியின் சொந்த வெற்றி எனக் கணக்கிட வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அதுபோல இந்தத் தோல்விக்கு மோடியே பொறுப்பேற்க வேண்டும். அதே நேரத்தில், பாஜகவும் சரி, மோடியும் சரி தங்களைச் சுய பரிசீலனை செய்ய பிஹார் தோல்வி ஒரு நல்ல வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி, தங்களை மேம்படுத்திக்கொண்டால், மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாய்ப்புக்கு அர்த்தம் உள்ளதாக அமையும். மேலும், உலகம் முழுவதும் இந்த மாநிலத் தேர்தலை உன்னிப்பாகக் கவனித்தது என்பதை அரசியல் நோக்கர்கள் அறிவர். இதை பாஜகவும் உணர வேண்டும்.

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

உரக்கச் சொன்ன பிஹார்

“இந்தியா எனும் நாடு எல்லைக் கோடுகளால் ஒன்றிணைக்கப்பட்டு கேவலம் 67 ஆண்டுகள்தான் ஆகின்றன. எனில், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த எல்லைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த நாட்டையும் மண்ணையும் இணைத்திருந்தது எது? அதுதான் இந்த தேசத்தின் ஆன்மா. பன்மைத்துவம். அதில் யார் கை வைக்க முயன்றாலும் மவுனத்தீ மூளும். எரித்தழிக்கும்” என்ற `இந்தியாவின் வெற்றி’ கட்டுரையில் உள்ள வார்த்தைகள் இனம்புரியா ஒரு வீர உணர்ச்சியை, அளவிட முடியாத பெருமையை, கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை என் உள்ளத்தில் பொங்கியெழச் செய்திருக்கின்றன.

மதம், இனம், சாதி என்ற அர்த்தமற்ற எல்லைகளைத் தகர்த்தெறிந்து, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பன்மைத்துவப் பண்பாட்டுடன் நாம் இந்தியாவில் வாழ்கிறோம் என்றும், அப்படியே வாழ்வோம் என்று உறுதி கொண்டிருக்கிறோம் என்றும் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக் கிறது பிஹார் தேர்தல் முடிவுகள்.

- தா. சாமுவேல் லாரன்ஸ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x