Published : 20 Nov 2015 10:47 AM
Last Updated : 20 Nov 2015 10:47 AM

வ.உ.சி-க்குக் கைகொடுத்தவர்கள்

வ.உ.சி-யின் இலக்கியப் பணிகளைக் குறிப்பிட்ட கட்டுரையில், அந்தப் பணிகளுக்குப் பொருளாதார உதவிசெய்த சில முக்கியமானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த த.வேதியப்பிள்ளை, வ.உ.சி. சிறைப்பட்ட காலங்களில் (1908) அவருடைய குடும்பத்தினருக்கு மாதம்தோறும் ரூ. 500, ரூ. 2,000 என உதவியிருக்கிறார். வேதியப்பிள்ளையின் நினைவாகத் தன் மகளுக்கு வேதவல்லி என்று பெயரிட்டதாக வ.உ.சி. குறிப்பிடுகிறார்.

அதே போல, தமிழ்நாடு முழுமையும் ஒரேயொரு ஏட்டுச்சுவடி மட்டும் கிடைத்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையை வ.உ.சி. பெருமுயற்சியுடன் ஒழுங்குசெய்தார். ஆனால், அந்நூலை வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் யாரும் முன்வரவில்லை. அந்நூலை வெளியிட்டவர் வாவிள்ள வெங்கிடேஸ்வர சாஸ்திரி. இந்நூலை வ.உ.சி. மறைவுக்குப் பிறகும் இரண்டாவது பதிப்பாகவும் இவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, வ.உ.சி-யின் 60-ம் ஆண்டு நிறைவு விழாவில் 1,000 ரூபாய்க்கும் மேல் கொடுத்த சேலம் பி.வரதராஜுலு நாயுடுவையும் அவருடைய முயற்சியால் மற்றும் பலர் உதவியதையும் வ.உ.சி. நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அ.செ.சு.கந்தசுவாமி ரெட்டியார், அ.செ.சு.முத்தையா ரெட்டியார் என்ற இருவரும் 1932-ல் வ.உ.சி-யின் இறுதிக்காலம் வரை அவருடைய குடும்பத்துக்கும் அவருக்கும் தொடர்ந்து பொருளுதவி புரிந்துவந்தவர்கள் என்பதைக் கூறுகிற வ.உ.சி, மகாத்மா காந்திக்கு ஜமன்லால் பஜாஜ் கிடைத்ததுபோல தனக்கு ரெட்டியார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுவார். இந்தச் செய்திகள் அனைத்தும் ‘வ.உ.சி. நூல்திரட்டு’ நூலில் பதிவாகியுள்ளன.

- பொ.வேல்சாமி, நாமக்கல்.

அருந்திறல் அண்ணல்

வ.உ.சி-யை விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமே அறிந்தவர் களுக்கு அவருடைய பன்முகத் தன்மையை அற்புதமாக எடுத்துக் காட்டியது ‘வ.உ.சி-யும் தமிழ்ப் பணிகளும்’ கட்டுரை. வ.உ.சி-யின் அரசியல் வாழ்க்கையை, ஒரு உரையாசிரியராக அவருடைய அரிய பணிகளை, ஒரு நூலாசிரியராக அவருடைய செயல்பாட்டை, ஒரு வழக்கறிஞராக அவருடைய கூர்மையான விவாதத் திறமையை, ஒரு மொழிபெயர்ப்பாளராக அவருடையச் சீரிய எழுத்துத் திறனை, மற்றும் ஒரு பதிப்பாசிரியராக என அத்தனை அம்சங்களையும் விளக்கும் நூல் தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் ‘அருந்திறல் அண்ணல் வ.உ.சி.’ என்னும் நூலாகும். இதில் இன்னொரு வரலாற்றுச் சிறப்பும் உள்ளது. 1928-ல் நடைபெற்ற தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கியதே வ.உ.சி.தான்!

- இரா. தீத்தாரப்பன், மேலகரம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x