Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

பழமையான அணைக்கட்டுகளின் பிரச்சினை

ஜே.ஹர்ஷா

அணைக்கட்டுகளும் நீர்த்தேக்கங்களும் எதிர்காலத்தின் நீர்த் தேவையைப் பாதுகாப்பதற்கானவை என்று நம்பப்படுகின்றன. எனினும், தரவுகளும் ஆய்வுகளும் அவை நமது நீர்ப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும் என்று காட்டுகின்றன. எப்படி என்று பார்ப்போம். இந்தியாவின் அணைக்கட்டுகள் பலவும் தற்போது மிகவும் பழமையாகிவிட்டன என்பதிலும் அதே நேரத்தில் நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவுகள் குவிந்துகிடக்கின்றன என்பதிலும் ரகசியம் ஒன்றுமில்லை.

பயனற்றுப்போகும் நிலை

மிகப் பெரிய அணைக்கட்டுகளைக் கொண்ட நாடுகளில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இதுவரையில் 5,200 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஏறக்குறைய 1,100 அணைக்கட்டுகள் ஏற்கெனவே 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவற்றில் சில 120 ஆண்டுகளைக் காட்டிலும் பழமையானவை. 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அணைக்கட்டுகளின் எண்ணிக்கை 2050-ல் 4,400 ஆக அதிகரிக்கும். அதாவது, நாட்டின் பெரிய அணைக்கட்டுகள் பயனற்றுப்போகும் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை கட்டப்பட்டு 50 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரையில் ஆகியிருக்கும்.

பல்லாயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறு அணைக்கட்டுகளின் நிலையும் நிச்சயமற்றதுதான். அவற்றின் பயன்பாட்டுக் காலம் என்பது பெரிய அணைக்கட்டுகளைக் காட்டிலும் குறைவானது. கிருஷ்ணசாகர் அணைக்கட்டு 1931-ல் கட்டப்பட்டது. இப்போது அந்த அணைக்கட்டின் வயது 90. அதைப் போல, மேட்டூர் அணைக்கட்டு 1934-ல் கட்டப்பட்டது. அதன் வயது 87. இந்த இரண்டு நீர்த்தேக்கங்களுமே தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளன.

அணைக்கட்டுகளுக்கு வயதாகிக்கொண்டிருப்பதைப் போலவே, நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவுகளும் குவிந்துகொண்டே இருக்கின்றன. இதனால் 1900-களிலும் 1950-களிலும் சொல்லப்பட்ட நீர்க் கொள்ளளவு இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

நம்முடைய பெரும்பாலான அணைக்கட்டுகளின் வடிவமைப்பு குறைபாடுகள் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் ஆய்வுகள், நிலைமை இன்னும் மோசமாகிவிடக்கூடும் என்கின்றன. ‘எகானமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் 2003-ல் ரோஹன் டி சௌஸா எழுதிய ‘விநியோகப் பார்வையில் நீர் வள இயல்: ஒரு கடைசி அச்சம்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவின் சின்னங்களில் ஒன்றான பக்ரா அணைக்கட்டில் அனுமானிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 139.86% அதிகமான வண்டல்மண் படிவு உள்ளதாகக் கூறுகிறார். இந்த அளவைக் கொண்டு பார்த்தால், ‘ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப் பிறகு பக்ரா அணைக்கட்டின் நீர்க் கொள்ளளவு 88 ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் பாதியாகக் குறைந்திருக்கும்’ என்று அவர் கூறுகிறார். அதேபோல, ஹிராகுட், மைதான், கோத் அணைக்கட்டுகளின் வண்டல் படிவுகளும் அனுமானிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் முறையே 141.67%, 808.64%, 426.59% அதிகமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் அதேபோன்ற முடிவுகள்தான் கிடைத்துள்ளன.

நீர்த்தேக்கங்களின் வண்டல்மண் படிவுகள் குறித்த ஒவ்வொரு ஆய்வுமே வண்டல்மண் படிவுகள் தொடர்பான அறிவியலில் போதிய புரிதல் இல்லாமலேயே இந்திய அணைக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. வண்டல்மண் படிவுகளின் விகிதத்தைக் குறைவாகவும் நீர்க்கொள்ளளவை அதிகமாகவும் அவை தவறாகக் கணக்கிட்டுள்ளன. எனவே, இந்திய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவுப் பரப்பானது எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வேகமாகக் குறைந்துவருகிறது. அடுத்த சில பத்தாண்டுகளுக்கு உள்ளாகவே, நீர்த்தேக்கங்கள் இதுவரையில் சொல்லப்படாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான சாத்தியங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

விளைவுகள் என்னவாகும்?

அணைக்கட்டுகளில் நீர் தேங்கிநிற்கும் இடத்தில் வண்டல்மண் படிவுகள் அதிகரித்தால், நீர் விநியோகம் ஸ்தம்பித்துவிடும். பயிரிடப்படும் பரப்பளவு பெறுகின்ற நீரின் அளவு படிப்படியாகக் குறைந்துவிடும். அணைக்கட்டு நீரால் பாசனம் பெறுகின்ற பரப்பு சுருங்கிவிடவோ மழையை நம்பியிருக்கவோ அல்லது நிலத்தடி நீரை அளவுகடந்து பயன்படுத்தவோ நேரிடும். பயிர்களின் விளைச்சல் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்படும். பாசன நீரைப் போலவே விவசாயிகளின் வருமானமும் குறைவது விளைச்சலுக்கு மட்டுமின்றிக் கடன், பயிர்க் காப்பீடு, முதலீடு ஆகியவற்றுக்கும் முக்கியமான ஒரு காரணமாகிவிடும். பருவநிலை மாறுபாட்டைப் போலவே வண்டல்மண் குவிந்துள்ள அணைக்கட்டுகளைக் குறித்தும் நம்மிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

வண்டல்மண் படிவுகள் குறித்த, குறைபாடு கொண்ட மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டும் பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே நிலவிவரும் ஒரு வாதத்துக்கு வலுசேர்க்கின்றன. அதாவது, ஆற்று வடிநிலங்களில் அமைந்துள்ள பல நீர்த்தேக்கங்களின் வெள்ளத்தடுப்பு அமைப்புகள் ஏற்கெனவே படிப்படியாக வலுவிழக்க ஆரம்பித்துவிட்டன. அடிக்கடி நீர் வெளியேற்றப்படுவதே அதற்கான காரணம். 2020-ல் பரூச்சிலும், 2018-ல் கேரளத்திலும், சென்னையில் 2015-லும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளுக்கு நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரே காரணம்.

முடிவாக, 2050-ல் அதிகரிக்கவிருக்கும் மக்கள்தொகைக்கு உணவளிக்கும் வகையில் மிதமிஞ்சிய பயிர்களை வளர்க்கவும் நிலையான நகரங்களை உருவாக்கவும் வளர்ச்சியை உறுதிப்படுத்தவுமான 21-ம் நூற்றாண்டின் நீர்த் தேவையை நமது நாடு சமாளிக்க முடியாமலாகும். எனவே, அணைக்கட்டு நீரால் பயனடையும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண முயல்வது அவசியம்.

- ஜே.ஹர்ஷா, தேசிய நீர் ஆணையத்தின் இயக்குநர்,

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: புவி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x