Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

நெருக்கடி கால நிதிநிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டும்?

டி.சி.ஏ.ராமானுஜம், டி.சி.ஏ.சங்கீதா

உலகப் பொருளாதாரப் பெருமந்தம் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உருக்குலைத்தது. பத்திரிகையாளர் ஜேனாதன் ஆல்டர் வார்த்தைகளில் சொல்வதென்றால், 1933-ல் அமெரிக்க அதிபராக ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் பொறுப்பேற்றுக்கொண்டபோது அவரை நோக்கி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது: ‘அதிபர் அவர்களே, உங்களது திட்டம் வெற்றிபெற்றால், நீங்கள்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சிறந்த அதிபராக இருப்பீர்கள். ஒருவேளை தோற்றுப்போனால், நீங்கள் மோசமான ஒருவராக ஆகிவிடுவீர்கள்’. ரூஸ்வெல்ட் அதற்குச் சொன்ன பதில்: ‘ஒருவேளை தோற்றுப்போனால், கடைசி அதிபராகத்தான் நான் இருப்பேன்’.

பெருமந்தத்துக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா இன்று மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ரூஸ்வெல்ட்டைப் போலவே அதிபர் ஜோ பைடனும், பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கொடுப்பதற்காக அமெரிக்க மீட்புத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது 1.9 ட்ரில்லியன் டாலர்கள் திட்டமானது ஒவ்வொருவருக்கும் 1,400 டாலர்களை அளிக்கவும், வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகைகளை அதிகரிக்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவவும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதைத் துரிதப்படுத்தவும், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடங்களுக்குத் திரும்புவதற்கான முதலீடுகளைச் செய்யவும் முன்வந்துள்ளதோடு ஒரு மணி நேர உழைப்புக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலரை நிர்ணயித்தும் உள்ளது.

இந்தியாவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற பிப்ரவரி 1-ல் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை அளிக்க உள்ளார். கரோனா பெருந்தொற்றானது பொருளாதார வளர்ச்சியை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக ரூ.20 லட்சம் கோடியில் திட்டங்களை அறிவித்தது. நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மைச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிதிப் பற்றாக்குறைக்கான உச்ச வரம்புகளும் தளர்த்தப்பட்டன. மேலும் செலவிடுவது என்பது எளிதான ஒன்றல்ல. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் கூற்றின்படி, ஊரக, நகர்ப்புறங்கள் இரண்டிலுமே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சுகாதாரம், உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அரசால் எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவுதான் செலவிட முடியும்? கீன்ஸியப் பொருளாதாரத்திலிருந்து வழிகாட்டுதல்களைப் பெற முடியுமா?

பால் க்ரூக்மன் கோட்பாடுகள்

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் விஷயத்தில், மிகப் பெரிய அளவில் கூறப்பட்டுவரும் எச்சரிக்கைகளுக்கு மாறாக நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் பால் க்ரூக்மன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதற்குச் சில விதிகளையும் அவர் அளித்துள்ளார். முதலாவது விதி, உதவி செய்வதில் அரசுக்குள்ள அதிகாரத்தின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அரசின் செலவுகள் மிகப் பெரிய அளவில் பயனளிக்கும். உதாரணத்துக்கு, நோயாளிப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படியாகும் மருத்துவப் பராமரிப்புச் சட்டமானது மருத்துவக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை அளித்துள்ளது. இரண்டாவது விதியானது கடன்களின் மீது ஆர்வம் காட்டவில்லை. மரபுவழிச் சிந்தனைகள் சொல்வதைக் காட்டிலும் கடனானது மிகவும் சாதாரணமான பிரச்சினைதான் என்பதில் பொருளியர்கள் உடன்பட்டு நிற்கிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன. கடன்களைச் செலுத்துவதற்கான பணமும் குறைவாகவே உள்ளது. மூன்றாவது விதி, பணவீக்கம் குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை. குறைவான வேலைவாய்ப்பின்மையுடனும் நிதிநிலை அறிக்கையில் மிகப் பெரிய அளவிலான பற்றாக்குறையுடனும் இப்போதும் நாம் பணவீக்கத்துக்கு வாய்ப்புள்ள நிலையில்தான் இருக்கிறோம். அளிப்பு நிலையாக இருக்கும் நிலையிலும் வாங்குபவர்கள் விலையை உயர்த்தி பணவீக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. நான்காவது விதியானது, இரண்டு கட்சிகளும் ஆதரிக்கின்றனவா என்பதைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தியச் சூழல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.200 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. சுகாதாரத்துக்கும் உள்கட்டமைப்புக்கும் செலவிடவே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் சராசரியாக பத்தாயிரம் பேரில் வெறும் ஐந்து பேருக்கு மட்டுமே மருத்துவமனைப் படுக்கை வசதி இருக்கிறது. மனித மேம்பாட்டு அறிக்கை, 2020-ல் மருத்துவமனைப் படுக்கை வாய்ப்பு என்ற பிரிவில் இந்தியா 155-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அரசு சுகாதாரத்துக்கான செலவை 1.5%-லிருந்து 2.5 % ஆக உயர்த்த வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

தேசிய அளவிலான உள்கட்டமைப்புக் குழாய்களைப் பதிக்கும் பெருந்திட்டமானது 2025-க்குள் 6,800 திட்டங்களின் வாயிலாக ரூ.111 லட்சம் கோடியை முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மேம்பாட்டு நிதி நிறுவனத்தை உருவாக்குவதற்கான திட்டங்களும் இன்னமும் ஆலோசனை நிலையில்தான் இருக்கிறது. சமூகப் பொதுவீடுகளைக் கட்டும் பணிகளில் சீன அரசு முனைந்திருக்கிறது. இந்தியாவில் இன்று பொருளியர்கள் சுட்டிக்காட்டுவதுபோல, உள்கட்டமைப்புகளுக்காகச் செய்யும் செலவுகள், பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கை ஆற்ற முடியும்.

‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தின் வழியில் நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைகள் சொல்லப்பட்டுவருகின்றன. நேரடியாகப் பணப் பரிமாற்றங்களைச் செய்வதைக் காட்டிலும் இது மிகவும் சிறந்ததாக அமையும். அரசின் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் நிலவும் தடுமாற்றங்கள் வள நெருக்கடிக்குக் காரணமாகிவிடக்கூடும். வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எரிபொருட்களின் விலையை அரசு உயர்த்திக்கொண்டே செல்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி, அரசின் மிகப் பெரிய வருமான வாய்ப்பாக உள்ளது. ஜிஎஸ்டி வரிவிகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவருகிறது. மிகப் பெரும் பணக்காரர்கள் மீது சிறப்புத் தீர்வை அல்லது துணை வரிகளை விதிக்கலாம்.

நிர்மலா சீதாராமன் அளிக்கவுள்ள நிதிநிலை அறிக்கையில், குறிப்பிடத் தக்க அளவில் முத்திரைகளை அவர் பதித்திருக்கலாம். நிறுவனங்களுக்கான வரிவிகிதக் குறைப்பு, குறிப்பிட்ட அளவிலான தொகைக்குள் நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கான வரிவிகிதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அறிமுகப்படுத்துவது, வருமானங்களைக் கைவிடாமல் ‘விவாத் சே விஷ்வாஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவது, தொழிலாளர் கிடைக்காததால் கூலி அதிகரித்து அதன் விளைவாக பணவீக்கம் ஏற்படாமல், பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவது என்று இவையனைத்தும் நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெருந்தொற்றால் உருவான இந்த நெருக்கடி இதற்கு முந்தைய எந்தவொரு நிதிநிலை அறிக்கைக்கும் ஏற்பட்டிருக்க முடியாது. மிகப் பெரும் பணக்காரர்கள் வரிச்சலுகை வேண்டும் என்று வலியுறுத்தாமல் ஒத்துழைக்க வேண்டும்.

- டி.சி.ஏ.ராமானுஜம், வருமான வரித் துறையின் முன்னாள் தலைமை ஆணையர்; டி.சி.ஏ.சங்கீதா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

� ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x