Published : 02 Oct 2015 10:05 AM
Last Updated : 02 Oct 2015 10:05 AM

தொட்டில் குழந்தை திட்டம் வரமா சாபமா?

ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி சொசைட்டி (SIRD). உசிலம்பட்டி சிசுக் கொலைகளை வெளி உல குக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதில் இந்த அமைப்புக்கு முக்கியப் பங்கு உண்டு. கருக்கொலைகளை தடுக்கும் முயற்சியில் இந்த அமைப்பின், ‘பெண் கருக் கொலைக்கு எதிரான பிரச்சாரம் - காசா’ (Campaign Against Sex Selective Abortion - CASSA) அமைப்பு செயல்பட்டு வருகிறது.

‘காசா’வின் ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், “கள்ளிப்பால், எருக் கம்பால் என்பது சிசுக் கொலைகளின் தொடக்கம்தான். விஷயம் வெளியில் தெரிந்து சிக்கலாகிறது என்றதும் கொலை நுட்பத்தை மாற்றிக் கொண் டார்கள்” என்று சொன்னார். பெண் சிசுக்களைக் பொசுக்குவதற்காக அவர் அடுக்கிய புதிய உத்திகள் கேட்கவே பயங்கரமாக இருந்ததால் அவற்றை இங்கே சொல்லாமல் தவிர்க்கிறோம்.

கருக்கலைப்புச் சட்டம்

கருவுற்ற 12 வாரங்களுக்குள் தனது கருவை கலைத்துக்கொள்ள எம்.டி.பி. சட்டப்படி (Medical Termination Of Pregnancy Act 1971) பெண்ணுக்கு உரிமை உண்டு. 12 முதல் 20 வாரங்கள் வரை வளர்ந்த கருவை கலைக்க 2 மருத்துவர்களின் பரிந்துரை தேவை. கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடு உள்ளது. இதை கலைப்பதன் மூலம் தாயின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தால் மட்டுமே இந்தக் கட்டத்தில் கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கும். கண்டிப்பாக தாயின் உயிருக்கு ஆபத்து என்று தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைக்க முடியும்.

தொட்டில் குழந்தைகள் திட்டம்

தொட்டில் குழந்தைகள் திட்டம் என்பது பெண் குழந்தைகளை சமூ கத்தை விட்டு ஒதுக்கி வைக்கும் திட்டம் என்று சாடுகிறார் ‘காசா’வின் இணை ஒருங்கிணைப்பாளர் பவளம். “தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இளம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. அவர் களை பாதுகாக்க முடியாமல் இளம் வயதில் திருமணங்களை நடத்து கிறார்கள். இதனால், அந்தப் பெண்க ளுக்கு குழந்தை பிறப்பு உள்ளிட்ட விஷயங்களில் சரியான புரிதல் இல் லாமல் போகிறது. வீட்டில் இருப்பவர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பெண் சிசுக்களை கொலை செய்ய வைக்கிறார்கள்.

எல்லா குழந்தைகளுக்கும் பெற் றோருடன் வாழவும் அவர்களை அறிந்து கொள்ளவும் உரிமை உண்டு. இந்த உரிமை அளிக்கப்படுவதாகச் சொல்லித்தான் ஐ.நா.வின் குழந்தைகள் உரிமைக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால், யதார்த்தம் அப்படி இல் லையே.. பெண் குழந்தை என்பதற்காக அவர்களுக்கு தாய்ப்பால் அருந்தும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் எல்லாமே நல்ல நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கான ஏற்பாடு களும் இல்லை.

சில இடங்களில் 3 வயதில் தத்து எடுத்துவிட்டு 14 வயதில் நடத்தை சரியில்லை என்று சொல்லி திருப்பி ஒப்படைக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? குடிகாரர்கள் அதிக மாகிவிட்டார்கள் என்பதற்காக டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்துகொண்டே போவது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துமோ அது போலத்தான் பெண் குழந்தைகளை கொல்கிறார்கள் என்பதற்காக தொட் டில் குழந்தைகள் திட்டத்தை ஊக்கு விப்பதும்” என்கிறார் பவளம்.

2 லட்சம் பெண் குழந்தைகள்

“சமுதாயத்தில் நிறைய அழுத்தங்கள் இருப்பதால்தான் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன. அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றால் ஆண் குழந்தைக்காக அவளது கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள் வதை சமுதாயமே அங்கீகரிக்கிறது. இப்படி அனைத்துக்கும் பின்னணியில் ஆண்கள் இருக்கும்போது பெண் சிசுக் கொலைக்காக தாயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது ஏற்கெனவே இந்தச் சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டு நிற்கும் பெண்ணை மீண்டும் தண்டிப் பதற்கு சமம். பெண்ணை இந்த சமு தாயம் எப்போதுமே இரண்டாம் தர குடிமகளாகத்தான் பார்க்கிறது.

ஆண், பெண் பிறப்பு விகிதம் 1000:952 என்ற நிலையில் இருக்க வேண்டும். 2011-ல் தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டிய 2 லட்சம் பெண் குழந்தைகள் பிறக்கவே இல்லை என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. இந்தக் குழந்தைகள் எல்லாம் கருவிலேயே சிதைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் எஸ்.ஐ.ஆர்.டி-யின் இயக்குநர் எம்.ஜீவானந்தம்.

வைரமுத்து வேதனை

கவிப்பேரரசு வைரமுத்து தேனி மாவட்டத்தின் மைந்தன். தேனி, மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழலை பல சந்தர்ப்பங்களில் தனது எழுத்துக்களில் தடம் பதித்தவர். மதுரை, தேனி மாவட்டங்களில் இன்னமும் சிசுக் கொலைகள் தொடர்கின்றதே.. என்று அவரைக் கேட்டபோது, “அங்கே சிசுக் கொலைகள் இன்னும் தொடர்கின்றன என்று நீங்கள் சொல்வது எவ்வளவு உண்மையோ அதுபோல, சிசுக் கொலைகள் அங்கே முன்னைக் காட்டி லும் குறைந்திருக்கிறது என்பதும் நூற் றுக்கு நூறு உண்மை. இதற்கு காரணம் கல்வி வளர்ச்சி.

இந்தியாவில் 2 இடங்கள்தான் சிசுக் கொலைகள் அதிகமாக நடந்த இடங்கள். ஒன்று ராஜஸ்தான்; இன்னொன்று உசிலம்பட்டி. இவை இரண்டுக்கும் உள்ள பொதுக்கூறு இரண்டு பகுதியிலும் வாழ்ந்தவர்கள் படை வீரர்கள். அந்தக் காலத்தில் போர் தொடுத்து வருப வர்கள், கோயில்களையும் பெண்களின் கற்பையும்தான் முதலில் சூறையாடினார் கள். தங்கள் வீட்டுப் பெண்களின் கற்பு பறிபோனால் அது தங்களின் பரம்பரை மானத்துக்கு ஊறாக வந்துவிடுமோ என்று அஞ்சி னார்கள். அதனால், பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விடாமல் பார்த்துக் கொண்டார்கள். அன்றைக்கு அவனுக்கு அது குடும்ப மானம் சார்ந்த பிரச்சினை. இப்போது எழுதுவதாக இருந்தால் மானம் சார்ந்த பிற்போக்கு சிந்தனை.

பெண்கள் வம்ச விருத்திக்கான ஒரு பொருளாக மட்டுமே பாவிக்கப்பட்ட அந்தக் காலத்தில் பெண் சிசுக்கள் மறுதலிக்கப்பட்டன. தேசவிடுதலைக்குப் பிறகும் இந்த நிலை தொடர்ந்ததற்கு காரணம் கல்வி இன்மைதான். நான் ஒரு பாடலில், ‘முக்குலத்துப் பொம்பள முக்கால் வாசி ஆம்பள’ன்னு எழுதினேன். உசிலம்பட்டி பக்கம் நான் போயிருந்த போது ஒரு மூதாட்டி என்னிடம் வந்து, ‘முக்கால்வாசி ஆம்பள’ன்னு நல்லா சொல்லிருக்கியேப்பா’ன்னு சொன்னார். அப்போது இன்னொரு பெண், ‘முக்கால் வாசி என்ன.. நாங்க முழு ஆம்பள’ என்றார். அவ்வளவு வீரம் கொண்ட பெண், சுயமாக சிந்திக்கத் தெரிந்த பெண் ஏன் சிதைக்கப்படுகிறாள் என்பது தான் கேள்வி.

பெண்கள் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே போனால் பின்னாளில் சமு தாயம் தன் சம நிலையை இழந்து ஒழுக்கக் கேடுகள் அதிகரிக்கும். பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் குறியீடாக, மானத்தின் அடையாளமாக கருதப் படுவதால் வரும் பிரச்சினைதான் இது.

மதுரை, தேனி மாவட்டங்களில் மக்களின் பொருளாதாரம் ஓரளவுக்கு உயர்ந்திருப்பதை பார்க்கிறேன். ஆனாலும் சிசுவை கொல்கிறான் என்றால் அதற்கு காரணம் போதிய கல்வி அறிவின்மைதான். ஒரு பெண், பெற்றோர் தயவில் கல்வி பயின்றாலும், தனக்கான வேலையையும் மாலை யையும் அவளே தீர்மானிக்கும் தகு தியை பெற்றால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை எட்டமுடியும்.

‘படித்தவர்கள்தானே ஸ்கேன் பார்த்து கருவை கலைக்கிறார்கள்’ என்று கேட்கிறீர்கள். கல்வி அறிவு என்பது வெறும் விவர அறிவு அல்ல. இன்னொரு உயிரை நேசிக்கக் கற்றுக் கொள்வதுதான் உண்மையான கல்வி அறிவு. தன்னை மட்டுமே காத்துக் கொள்ள படிக்கும் கல்வி வியாபாரம்” என்று சொன்னார் கவிப்பேரரசு.

அதிகாரிகளின் அலட்சியம்

2 பெண் குழந்தைகளை பெற்றால் அந்தக் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.1,500 டெபாசிட் செய்யப்படும் என்று 1992-ல் அரசு அறிவித்தது. அந்தக் குழந்தைகளுக்கு 20 வயதாகும்போது இந்தத் தொகை ரூ.20 ஆயிரமாக முதிர்வு பெறும் என்று சொன்னார்கள். ஆனால், இந்த வைப்பு நிதிக்கான பத்திரத்தை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதிகாரிகள் அப்படி புதுப்பிக்க தவறியதால் நிறைய குழந்தைகளுக்கு பத்தாயிரம்கூட முதிர்வுத் தொகையாக கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 2001-ல் இந்த வைப்பு நிதியை ரூ.15,200 ஆகவும் 2011-ல் ரூ.25,000 ஆகவும் உயர்த்தினார்கள். ஆனால், கடந்த 2 வருடங்களாக இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட யாருக்கும் வைப்பு நிதிக்கான பத்திரம் போய் சேரவில்லை. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் அரசின் திட்டங்கள் அதிகாரிகளால் இப்படித்தான் அலட்சியப்படுத்தப்படுகிறது.

(கரு வளரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x