Published : 05 Oct 2015 10:41 AM
Last Updated : 05 Oct 2015 10:41 AM
ஒவ்வொரு நாளும் செறிவான கருத்துகளோடு நடுப் பக்கத்தை அலங்கரிக்கும் கட்டுரைகள் இன்று அதையும் கடந்து ஒரு பரவசத்தை நிகழ்த்தியுள்ளது.
‘மாயா’ திரைப்படத்தின் பிம்பங்களை நிகழ் வாழ்வில் கண்டடைந்த சொற்சித்திரத்தின் வலிமை அது. தனித்து வாழும் பெண்களின் துயர் மிகு வாழ்க்கையை அது காத்திரமான முறையில் விவரிக்கிறது.
வரிகளின் இறுதியில் வைக்கப்படும் புள்ளிகளுக்கும், கடைசிக் காட்சிக்குப் பின் ஒளி அமிழ்ந்து வரும் வெள்ளைத் திரையைத் தாண்டியும் மனவெளியில் படிக்க வேண்டிய, காட்சிப்படுத்த வேண்டிய ஓராயிரம் விஷயங்கள் இருக்கின்றன இவ்வாழ்வில். பெண்களின் ஆற்றாமையையும், கோபத்தையும் ஒருங்கே கொண்டதாகக் கட்டுரை அமைந்துள்ளது.
அதேபோன்று, அழுத்தமான கேள்விகளும், விரிவான சரித்திரபூர்வமான பதில்களும் கொண்ட அ.மார்க்ஸ் நேர்காணல் மிக அருமையான பதிவு. எதிரிகள் அல்ல, வேறு வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் என அக்காலத்தில் நிகழ்ந்த அல்லது உருவாகி வந்த நவீன இந்தியா குறித்த சர்ச்சைகளை எவ்வாறு கண்ணுறுவது என நேர்காணல் விரிகிறது. காலத்துக்கேற்ற பதிவு. ஆசையின் பிறிதொரு கட்டுரையும், அம்ஷன்குமார் தொகுப்பும் என ‘தி இந்து’வின் பயணவெளி பரந்து விரிந்து செல்கிறது. அதனூடே பறந்து செல்வதில் மகிழ்ச்சி.
- கே.ஜி.பாஸ்கரன்,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT