Published : 01 Oct 2020 08:28 AM
Last Updated : 01 Oct 2020 08:28 AM

இந்தியப் பொருளாதாரம் என்னவாகும்?

சி.ரங்கராஜன், டி.கே.ஸ்ரீவஸ்தவா

இந்தியாவின் வளர்ச்சி 2020-21-ல் (-) 23.9%-ஆக இருக்கிறது. இது உலக அளவில் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 2020-ல் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பலதரப்பட்ட நிறுவனங்களும் தரமதிப்பீட்டு முகமைகளும் உலகளாவிய வளர்ச்சி சாத்தியப்பாடுகளைக் கணித்திருக்கின்றன. 2020-21-ம் ஆண்டுக்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி (-)5.8%லிருந்து (இந்தக் கணிப்பு ரிசர்வ் வங்கியுடையது) (-) 14.8% வரை (கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு) இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பு’ செப்டம்பர் 2020-ல் முன்வைத்த தனது இடைக்காலப் பொருளாதாரக் கணிப்பானது நிதியாண்டு 2021-க்கு இந்தியாவில் பொருளாதாரச் சுருக்கம் (-)10.2%-ஆக இருக்கும் என்று கூறுகிறது.

வருடாந்திரக் கணிப்புகளும் 2020-21ல் பொருளாதாரச் சுருங்கலையே சுட்டுகின்றன. புள்ளியியல் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள் ஆகஸ்ட் 2020-ன் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 6.7%-ஆக இருந்தது என்று சுட்டிக்காட்டுகின்றன. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான சராசரி பணவீக்கம் 2020-21 ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 6.6%-ஆகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதியை அமைப்புக்குள் செலுத்துவதையும் பணவீக்கத்தின் போக்குகளையும் வைத்துப் பார்க்கும்போது, நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஒட்டுமொத்த ஆண்டுக்கும் 7%-ஐத் தொடலாம். ‘பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பு’ முன்வைத்த உண்மையான ஜிடிபி வளர்ச்சி கணிப்பான (-)10.2%-ஐயும் பணவாட்டம் அடிப்படையிலான பணவீக்கமான 5%-ஐயும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 2020-21 ஆண்டுக்கான ஜிடிபியின் சுருங்குதல் (-)5.0% ஆக இருக்கிறது.

நம்பிக்கை என்னவாகும்?

மருத்துவம், நிவாரணம், புத்துயிர் தருதல் போன்றவற்றுக்காக நிறைய செலவிடப்படுகிறது. ஆகவே, விவசாயமும் அது தொடர்பான துறைகளும், அரசுத் துறை, பாதுகாப்புத் துறை போன்ற துறைகளும் வழக்கமாகவோ வழக்கத்தைவிட சிறப்பாகவோ இயங்கக்கூடும் என்று நினைத்ததால், நம்மில் சிலர் பொருளாதாரமானது மோசமாகாமல் இருக்கலாம் என்று எண்ணியது உண்மையே. சிறிய அளவிலான, நேர்மறை வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் நாம் எதிர்பார்த்தோம். சமீபத்தில் வெளியிடப்பட்ட, 2020-21-ன் முதல் காலாண்டுக்கான தேசிய அளவிலான வருமானம் தொடர்பான தரவுகள் அது போன்ற எந்த நம்பிக்கையையும் தரவில்லை.

முதல் காலாண்டுக்கான தரவில் மிகவும் ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், ‘பொதுத் துறை, பாதுகாப்பு, பிற துறைகள்’ (-)10.3% அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கின்றன என்பதுதான். எந்த விதமான நிதி ஊக்குவிப்பும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. மாநிலங்களின் மூலதனச் செலவினம் 43.5% வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று தனிப்பட்ட அமைப்புகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. செலவு அதிகரிப்பதைவிட வருமானம் குறைந்ததால்தான் நிதிப் பற்றாக்குறை மேலும் மோசமாகியிருக்கிறது.

வருமான அரிப்பு

மீதியுள்ள நிதியாண்டில் உண்மையான, வழக்கமான வளர்ச்சியில் ஏற்படும் சுருங்குதலை எப்படிக் குறைக்கப்போகிறோம் என்பது சவால்தான். வழக்கமான ஜிடிபி வளர்ச்சி மிகவும் சுருங்கிப்போயிருப்பது மத்திய, மாநில வரி வருமானங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 2020-21 முதல் காலாண்டில் மத்திய அரசின் வரி வருமானங்கள் (-)32.6%-ஆக சுருங்கின. சிஏஜி தரும் தரவுகள் படி 19 மாநிலங்களின் வரி வருமானங்கள் (-)45% சுருங்கிப்போயிருக்கின்றன.

முதல் காலாண்டில் மத்திய, மாநில அரசுகளின் வரி வருமானங்களைச் சேர்த்துப் பார்த்தால், 1.65% அளவுக்கு எதிர்மறைப் பொருளாதாரச் செயல்பாடுகள் காணப்படுவதை இது உணர்த்துகிறது. பொது முடக்கம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளை வைத்துப் பார்க்கும்போது, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட வரியல்லாத வருமானங்கள்கூட கிடைப்பதற்கு வழியில்லை என்றே தெரிகிறது. நாட்டின் வழக்கமான வருமானம் 10% என்ற அளவில் வளர்ச்சியடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பட்ஜெட்டின் வருமான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கமான வளர்ச்சியில் சுருங்குதல் ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளதால் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதுடன் ஒப்பிடும்போது மத்திய அரசின் வரி வருமானத்தில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிகிறது. சில மதிப்பீடுகளின் படி ரூ. 5 லட்சம் கோடிக்கும் மேலே பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட செலவினங்களின் அளவைப் பராமரிக்கவும் கூடுதல் நிதி ஊக்குவிப்பு கொடுக்கவும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையானது ஜிடிபியில் 8.8% அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையைச் சேர்த்தால் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 13.8% ஆக இருக்கும். 2020-21-ல் வழக்கமான ஜிடிபி சுருங்கும் என்றால், ஜிடிபியின் விகிதமாக நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். 2021-ன் முதல் காலாண்டில் ஜிடிபியின் விகிதத்தோடு ஒப்பிடும்போது நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 17.4% ஆகும்.

எந்த அளவுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்? பன்னாட்டுச் செலாவணி நிதியம் வெளியிட்ட ஜூன் 2020-க்கான ‘உலகப் பொருளாதாரக் கணிப்’பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 12.1% ஆக இருக்கும் என்று கூறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர, எல்லா நாடுகளும் இதைவிடக் குறைவான பற்றாக்குறையைக் கொண்டிருக்கின்றன. டாலரைக் கையிருப்பாகக் கொண்டிருப்பது அதற்கேயுரிய அனுகூலங்களைக் கொண்டிருப்பதுடன் இது அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கிறது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை ஜிடிபியில் கிட்டத்தட்ட 14% வரையிலான பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு நம்மிடம் போதுமான வழிவகை இல்லை.

இதற்கெல்லாம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆதரவு நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவைப்படுகிறது. அரசின் கடனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விகிதத்தில் ரிசர்வ் வங்கியே நேரடியாகப் பொறுப்பேற்கலாம். இது 1990-களில் நிகழ்ந்திருக்கிறது. மறைமுகமான கடன் வாங்குதலை ரிசர்வ் வங்கி ஆதரித்தாலும் அதை மிகவும் வெளிப்படையாகச் செய்யக் கூடாது. வட்டி விகிதம் குறித்து சந்தையானது இன்னமும் சமிக்ஞைகள் அனுப்பிக்கொண்டிருப்பதால் ரிசர்வ் வங்கியின் மறைமுக உதவியே விரும்பத்தக்கது. இரண்டு வழிகளிலுமே ரிசர்வ் வங்கியானது நிதி செலுத்துநராக உள்ளது. மறைமுக வழிமுறை என்பது புதிதல்ல. எந்த அளவுக்குப் பணமூட்டுதல் நடைபெறும் என்பதுதான் கேள்வி. அதிகப் பணவீக்கத்துக்கு எதிராக நாடு தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

அரசின் கஜானா பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. செலவிடுதலை அரசு தீவிரப்படுத்த வேண்டிய அளவுக்குப் பொருளாதாரச் சூழ்நிலை எழுந்திருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும். இதை ஒப்புக்கொண்டாக வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செலவுசெய்யத் தயங்குவதுபோல் தோன்றுகிறது. இது சரியான அணுகுமுறையல்ல. அதே நேரத்தில், கடன் மதிப்புக்கு ஈடாக ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. நடப்பாண்டில் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 14%-ஆக கட்டுக்குள் வைத்துக்கொண்டே, செலவுக்கு நிதியையும் திரட்டுவதே சரியான வழிமுறையாக இருக்கும். இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட வேண்டும். இயல்பு நிலைக்குத் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும்.

- சி.ரங்கராஜன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்.

டி.கே.ஸ்ரீவஸ்தவா, முன்னாள் இயக்குநர், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x