Published : 14 Aug 2020 08:41 AM
Last Updated : 14 Aug 2020 08:41 AM

புதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்

டி.சுரேஷ் குமார்

இந்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை (என்.ஈ.பி.) எப்படியிருக்கிறது? இரு மூத்த கல்வியாளர்கள் விவாதிக்கிறார்கள்.

லீனா சந்திரன் வாடியா இந்தப் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கன் குழுவின் மூத்த ஆலோசகர்களிலேயே ஒருவராக இருந்தவர். அனிதா ராம்பால் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வியியல் துறைத் தலைவர்.

புதிய கல்விக் கொள்கையின் 10 ஆண்டு காலக் கெடுவின்படி 1-ம் வகுப்பில் நுழையும் எல்லாக் குழந்தைகளையும் ஆரம்பக் கட்ட கல்வியின் மூலம் தயார்படுத்திவிட முடியுமா?

லீனா: நாம் தயாராக வேண்டும். குழந்தைகளின் மூளை வேகமாக வளர்ச்சி பெறும் சமயத்தில், அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். ஆகவே, இந்தக் காலக்கெடுவுக்குள் நம் இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும்.

அனிதா: 2010-லிருந்தே 6 - 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் அருகிலுள்ள பள்ளியில் கட்டாயக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் கல்வியுரிமைச் சட்டம் நம்மிடம் இருக்கிறது. ஆகவே, மேலும் பத்தாண்டுகளைக் காலக்கெடுவாகப் பெறுவதைப் பற்றிய கேள்வியே இல்லை. இந்தக் கொள்கை என்ன செய்கிறதென்றால், சத்தமில்லாமல் பிரச்சினைக்குரிய வகையில் குழந்தைகளின் அடிப்படை உரிமையை நிறைவேற்றத் தவறுகிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு அறிக்கை 3 – 18 வயது வரையிலான குழந்தைகளைக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்குவது தொடர்பில் அமைதியாக இருந்த நிலையில், அனைவருக்குமான கல்வி சாத்தியமா?

லீனா: அனைவருக்கும் கல்வி என்ற நிலையைச் சாதிப்பதைப் பற்றி இந்த ஆவணம் பேசவே செய்கிறது. ஆக, அதை எப்படிச் செயல்படுத்தப்போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மூன்று வயதுக் குழந்தைகளை முறைசார்ந்த கல்வியின் கீழ் கொண்டுவருவதில் அங்கன்வாடிகள், பள்ளிக்கல்விக்கு முந்தைய கல்வி ஆகியவை சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. அதனால், கல்வியுரிமைச் சட்டத்துக்குள் இருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தமல்ல.

அனிதா: புதிய தேசிய கல்விக் கொள்கையானது கல்வியுரிமைச் சட்டத்தைக் கைவிட முயல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நன்றாகத் தகுதிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, பள்ளிக் கல்வி முறையை அமலாக்குவதாக இது கூறவில்லை. திறந்தவகை அமைப்பிலான பள்ளிக் கல்வியை அனுமதிக்கப்போவதாக அது கூறுகிறது. குழந்தைகள் தங்கள் வகுப்பிலுள்ள மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கப்போவதாகத் தேசிய கல்விக் கொள்கை கூறுவதை நம்ப முடிகிறதா? நிபுணத்துவம் பெற்ற நல்ல ஆசிரியர்களைக் குழந்தைகளின் கல்வியின் ஆரம்பக் காலத்தில் தருவதை இந்தக் கல்விக் கொள்கை புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது.

கல்வியை ஒரு அரசு சார் பொதுச் சேவை என்கிறது இந்தக் கல்விக் கொள்கை; ஆனால் தனியாரின் பங்களிப்பையும் இது வரவேற்கிறதே?

லீனா: குழந்தைகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டும். பத்துக்கும் குறைவாகக் குழந்தைகள் இருக்கும் இடங்களில் தனியார் துறையினர் பள்ளி தொடங்குவது அரிது. ஆகவே, அரசுக் கல்வியை வலுப்படுத்துவது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. நிச்சயமாக, தனியார் கல்வியை நாங்கள் எதிர்க்க மாட்டோம். கடந்த 25 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் 50% மாணவர்கள் சேர்ந்து படித்திருக்கிறார்கள். உயர் கல்வியைப் பொறுத்தவரை 70% மாணவர்கள் தனியார் கல்லூரிகளிலேயே படித்திருக்கிறார்கள். நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தத் துறையில் தரமற்ற சேவையை வழங்கும் பலர் இருக்கிறார்கள் என்பதுதான். உலகெங்கும், பெரும்பாலும் சேவை செய்யும் நோக்கத்தில், தனியார் துறையினர் கல்விப் பணியில் பங்கெடுக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை லாப நோக்கத்துடன் பணியாற்றவில்லை என்று சொல்லிக்கொண்டு செயல்படுபவர்கள் பலரும் உண்மையில் லாப நோக்கத்துடன்தான் பணியாற்றுகிறார்கள். அவர்களைக் களையெடுப்பதுதான் நம் முன்னுள்ள சவால்.

பள்ளி வளாகங்களை உருவாக்குவது குறித்த கவலைகள் தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அறுபதாண்டுகளுக்கு முன்பே கோத்தாரி கமிஷன் இதைப் பரிந்துரைத்திருக்கிறது அல்லவா!

அனிதா: நல்ல விதத்தில் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் அல்லது மேல்நிலைப் பள்ளிகளுடன் அருகிலுள்ள சிறிய பள்ளிகளையும் ஆரம்பப் பள்ளிகளையும் சேர்த்து, பெரிய பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புபவையாக அந்தச் சிறிய பள்ளிகள் மாற்றப்படும் என்றும், அதன் மூலம் கூட்டுறவுச் செயல்பாட்டை உருவாக்கலாம் என்றும் கோத்தாரிக் குழு கூறியது. இதை வேறு அர்த்தத்தில் தற்போது கூறுகிறார்கள். சிறிய பள்ளிகள் தரம் குறைந்தவை என்று கூறி, அவற்றை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் 14 ஆயிரம் பள்ளிகள் ஒரு மாநிலத்தில் மூடப்பட்டிருக்கின்றன. பெரிய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. கல்லூரி என்றால் 2,500 மாணவர்கள் இருக்க வேண்டும் என்கிறது. ஆகவே, இது கல்வி நிலையத்தின் பொருளாதார சாத்தியம் குறித்தே அக்கறை கொள்கிறது. இது குழந்தையின் உரிமையுடன் விளையாடுவது. இதைக் கல்வி கிடைக்கச் செய்யும் வழிமுறை என்று எப்படிக் கருத முடியும்?

5 3 3 4 என்று உத்தேசிக்கப்பட்டிருக்கும் பள்ளி அமைப்பானது மாணவர்களின் இடைநிற்றலுக்குக் காரணமாகிவிடும் என்று அஞ்சப்படுகிறதே? பாரபட்சமற்ற, எல்லோரையும் உள்ளடக்கக்கூடிய கல்விமுறையை இந்தப் புதிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது; ஆனால் பொதுப் பள்ளிக் கல்வித்திட்டம் குறித்து ஏதும் இதில் குறிப்பிடப்படவில்லையே? தாய்மொழி வழிக் கல்வி கற்பித்தல் என்பதும் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில்தான் இருக்கிறது. இவையெல்லாம் அநீதியை அதிகமாக்காதா?

லீனா: இது கற்பித்தல் சார்ந்த பகுப்பு, இதன் மூலம் மூன்றாம் வகுப்பு, 5 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களை மதிப்பிட விரும்புகிறோம். அவர்களுக்கென்று வடிவமைத்த கல்விச் சட்டகத்தின் கீழ் எதிர்பார்த்த தரத்தை அவர்கள் எட்டியுள்ளார்களா என்பதை இதன் மூலம் பரிசோதிக்கிறோம். 5-ம் வகுப்புக்குப் பிறகு, அதிகம் நிகழக்கூடிய இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தக்கூடிய வழிவகை இந்தக் கொள்கையில் இருக்கிறது. பிராந்திய மொழியிலேயே கற்பித்தல் மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசுகள் முடிவெடுத்திருக்கின்றன; புதிய கல்விக்கொள்கையின்படி உள்ளூர் பள்ளிகள், உள்ளூர் ஆசிரியர்களை வேலைக்கு எடுத்து அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியைக் கற்பிக்க மாநில அரசுகள் அனுமதிக்கலாம். கல்வி என்பது மாநிலப் பட்டியலிலும் இருப்பதால், இதில் எந்த அளவுக்கு வெற்றி பெறப்போகிறோம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொழிற்கல்வியை நோக்கி மாணவர்களைத் தள்ளுவது கல்விரீதியில் மாணவர்களைப் பலவீனமாக ஆக்கிவிடாதா? இதனால் குலக் கல்வி முறை பின்பற்றப்படும் அபாயமும் இருக்கிறதா? முன்கூட்டிய இடைநிற்றலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

அனிதா: தொழில்களில் ஈடுபடுவதற்கு முன்தயாரிப்பாக தொழிற்கல்வியை இளம் வயதிலேயே பள்ளிக்கல்வியில் திணிக்கக் கூடாது. மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றே ராதாகிருஷ்ணன் குழு கூறியிருக்கிறது. நமது தொழிற்கல்வியில் கல்வியே இல்லை. இது திறன் அடிப்படையிலும் படிநிலைகள் அடிப்படையிலும் ஆனது. நம் சமூகத்தில் ஏற்கெனவே பல்வேறு படிநிலைகளை நாம் கொண்டிருப்பதால், இதை நாம் கேள்வி கேட்டாக வேண்டும். அதேபோல, 9, 10, 11, 12-ம் வகுப்புகளை ஒன்றாக ஆக்குவது மிகவும் கவலை ஏற்படுத்துவதாகவும் பிரச்சினைக்குரியதாகவும் இருக்கிறது. ஏனெனில், அந்த மாணவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்கப்படும் என்று கல்விக் கொள்கை கூறுகிறது. மாணவர்களை வகை பிரிப்பதைவிட அவர்கள் ஒன்றாகப் படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிக அளவு ஏற்படுவதற்கே வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படிப் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் செய்ததோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்களின் திறனறிவதற்கான தேசியத் திறனறி முகமை அமைப்பது அவசியமா?

லீனா: இதைப் பற்றி நிறைய விவாதித்தாகிவிட்டது. இடைப்பட்ட காலம் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது; மிகக் கடுமையான போட்டி ஏற்படப்போகிறது. ஜே.ஈ.ஈ. போன்ற தேர்வுகளை எழுத ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அவற்றுக்காகப் படிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். மீதமுள்ளவர்கள் தங்களின் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி சுதந்திரமாக விடப்படுவார்கள். உயர் கல்வி நிறுவனங்களும் தாங்கள் யாரையெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்வதற்கான சுதந்திரத்தைப் பெறுவார்கள்; இதனால், பெற்றோர்கள் பதற்றமடைவார்கள். ஒவ்வொரு குழந்தையையும் 10-ம், 12-ம் வகுப்புத் தேர்வுகளை வைத்துப் பரிசோதிப்பதைவிட, நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது மேல்.

‘சமூகரீதியிலும்-பொருளாதாரரீதியிலும் பின்தங்கியுள்ள குழு’ (எஸ்.ஈ.டி.ஜி.) என்ற விரிவான வகைப்பாடு பாரபட்சமற்ற தன்மைக்கு முட்டுக்கட்டை போடுமா?

அனிதா: ஆமாம், அப்படித்தான் நிகழும்… பின்தங்கிய நிலை என்பது ஏதோ வானிலிருந்து குதிக்கவில்லை. அது வரலாற்றுப்பூர்வமானது, சமூகரீதியிலானது. விலக்கிவைப்பதன் மூலம் அப்படித்தான் அடையாளங்கள் உருவாக்கப்பட்டன. ‘தலித்’ என்று சொல்வதையோ ‘சிறுபான்மையினர்’ என்று சொல்வதையோ தவிர்த்துவிட்டு எல்லோரையும் ‘எஸ்.ஈ.டி.ஜி’ என்ற வரையறைக்குள் கொண்டுவருவது உண்மையான பிரச்சினை என்ன என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் செயலாகும். பல்வேறு சமூக யதார்த்தங்களையும், பின்தங்கிய நிலைகளையும் விலக்கிவைக்கும் போக்கையும் புரிந்துகொள்வதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

© தி இந்து, தமிழில் சுருக்கமாக: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x