Published : 10 Aug 2020 07:43 AM
Last Updated : 10 Aug 2020 07:43 AM

புதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது?- 3

பள்ளிக் குழந்தைகள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும், அவற்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ போன்ற திட்டங்களின் மூலம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட செவ்வியல் மொழிகளின் அடிப்படை இலக்கணங்கள் அறிமுகப்படுத்தப்படும். பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மும்மொழிக் கொள்கையின் வாயிலாக மாணவர்கள் சம்ஸ்கிருதம் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும் என்கிறது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்திய மொழிகள், ஆங்கிலம் தவிர, தான் விரும்பும் வெளிநாட்டு மொழியொன்றையும் படிக்கலாம். உள்ளூர்த் தொழில்திறன் தேவைகளுக்கேற்ப மாணவர்களுக்குக் கைவினைப் பயிற்சியும் தொழிற்கல்வியும் அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2020-21-ல் தேசிய அளவிலான புதிய பாடத்திட்டத்தை என்சிஇஆர்டி உருவாக்கும். தற்போது நடத்தப்பட்டுவரும் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளோடு மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளிலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரியில் அறிவியல், கலைப் பாடங்கள், மொழி, நுண்கலைகள், தொழிற்கல்வி ஆகிய பாடங்களைப் படிப்பதற்குத் தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் நுழைவுத் தேர்வில், தகுதிபெற வேண்டும். தற்போது மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே இத்தகைய தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஆசிரியர் நியமனம்

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்த முதல் பகுதியில் அடங்கியுள்ள ஐந்தாம் அத்தியாயமானது ஆசிரியர்களைப் பற்றிப் பேசுகிறது. நான்காண்டு கால பி.எட் படிப்பு அறிமுகப்படுத்தப்படும். 2030-ல் பள்ளி ஆசிரியராவதற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி நான்காண்டு கால பி.எட் படிப்பாக இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கலை, உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லையென்றால், ஒரே ஆசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பணிபுரியச் செய்யலாம்.

உள்ளூரில் உள்ள சிறந்த நிபுணர்கள் முதன்மைப் பயிற்சியாளராகப் பணிபுரிவதைப் பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தலல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். ஆசிரியரின் பணிக் காலம், பதவி உயர்வு, ஊதிய விகிதங்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும். தற்போது பணிமூப்பின் அடிப்படையிலேயே பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தீர்மானிக்கப்பட்டுவருகிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய பாடத்திட்டம் ஒன்றையும் 2021-ல் என்சிஇஆர்டி உருவாக்கும். தகுதி குறைவான ஆசிரியர் பயிற்சி நிலையங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி

பிறப்பு அல்லது குடும்பப் பின்னணி காரணமாக எந்தவொரு குழந்தையும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்கிறது ஆறாம் அத்தியாயம். 2016-17-ல் வெளியான ஆய்வறிக்கைகளின்படி ஆரம்பநிலைக் கல்வியில் 19.6%- ஆக உள்ள பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை உயர்நிலைக் கல்வியில் 17.3%-ஆகக் குறைந்துவிடுவது தெரியவந்துள்ளது. பழங்குடியின மாணவர்களில் இது 10.6%-லிருந்து 6.8% ஆகக் குறைகிறது. இந்த இடைவெளிகளைக் குறைப்பது முதன்மையான இலக்காகக் கொள்ளப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை.

சமூக-பொருளாதார அளவில் பின்தங்கிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த பெண் குழந்தைகள், தரமான கல்வியைப் பெறும் வகையில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்கிறது. மாற்றுத் திறனாளி மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் பள்ளி வளாகங்களில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கற்றல் திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஆசிரியர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்கு உதவுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும். பழங்குடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டலோடு என்சிசி பிரிவுகள் தொடங்குவதை மாநில அரசுகள் ஊக்குவிக்கும்.

பள்ளி வளாகம்

பள்ளி வளாகங்கள் பற்றியது ஏழாவது அத்தியாயம். ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை நிர்வகிப்பது சிக்கலாக இருப்பதால், அவற்றை ஐந்திலிருந்து பத்து கிமீ சுற்றளவுக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளியோடு இணைத்து, பள்ளி வளாகங்கள் அல்லது பள்ளித் தொகுப்புகள் உருவாக்கப்படும். இத்தகைய பள்ளி வளாகங்கள் பகுதியளவிலான தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்க அனுமதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான நட்புறவு வளர்த்தெடுக்கப்படும், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்ளவும் வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஊக்குவிக்கப்படும். பள்ளிக்கூடங்கள் சமூகங்களின் மையமாக இருக்கும், பள்ளிக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் திறன்கள் தன்னார்வலர் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பள்ளிக்கல்வியின் தர நிர்ணயத்தைப் பற்றி எட்டாவது அத்தியாயம் பேசுகிறது. தற்போது பள்ளிக்கல்வி அமைப்பின் நிர்வாகம், நெறிப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளையும் பள்ளிக்கல்வித் துறையே ஏற்றுக்கொண்டுள்ளது. நெறிமுறைப்படுத்தும் பணிகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் கல்வியின் தரத்தை உயர்த்த அதனால் இயலவில்லை. அதே நேரத்தில், தனியார் மற்றும் சேவை அடிப்படையில் இயங்கும் பள்ளிகளின் பங்களிப்பையும் ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது. எனவே, மாநிலங்களின் பள்ளிக்கல்வித் துறையானது அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

பள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளிலும் அரசு, தனியார் மற்றும் சேவை அடிப்படையிலான பள்ளிகள் அடிப்படையான தரநிலைகளைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்தப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிகள் குறைந்தபட்சத் தரநிலைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாநில பள்ளித் தரநிர்ணய அமைப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்க வேண்டும் என்கிறது. இதன் மூலமாக, அனைத்துப் பள்ளிகளையும் கண்காணித்துவரும் மாநில பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அது புதிய அமைப்பின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.கல்லூரியில் அறிவியல், கலை, மொழி, நுண்கலைகள், தொழிற்கல்விப் பாடங்களைப் படிப்பதற்குத் தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தகுதிபெற வேண்டும். தற்போது மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே இத்தகைய தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x