Published : 26 Jun 2020 07:43 AM
Last Updated : 26 Jun 2020 07:43 AM

கரோனா பாதிப்புகளை அதிகப்படுத்திவிடக் கூடாது நிதிப் பற்றாக்குறை

இந்தியாவில் கரோனா பரவலுக்குப் பிறகு, பொருளாதாரம் பெரும் நிலைகுலைவுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) பெரும் சீர்திருத்தம் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்து நடந்த ஜிஎஸ்டி ஆணையத்தின் இரு கூட்டங்களின் போக்குகளையும் கவனிக்கும்போது, மாநிலங்கள் சார்ந்த நிதிப் பிரச்சினையின் முக்கியத்துவத்தையே ஒன்றிய அரசு உள்வாங்கவில்லையோ என்றே தோன்றுகிறது. சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை எடுத்துக்கொண்டால், வரவேற்புக்குரிய இரு விஷயங்களை அது செய்தது. வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்குத் தாமதக் கட்டணத்தையும் வட்டியையும் தளர்த்த அது முடிவெடுத்தது. அதேபோல, மறைமுக வரியமைப்பின் கீழ், வரி செலுத்த வேண்டியிராத தொழில் துறையினருக்குத் தாமதக் கட்டணத்தையும் முழுமையாக விலக்கியது. எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகவே ஊரடங்குக் காலம் நீட்டிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய தளர்வை அறிவித்திருப்பது மிகவும் அத்தியாவசியமான நடவடிக்கை ஆகும். ஆனால், மாநிலங்கள் பெரிதும் எதிர்பார்த்த விஷயங்கள் நடந்தேறவில்லை. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றன; ஜிஎஸ்டி ஆணையக் கூட்டங்களும் அதன் ஒரு பகுதியாவது நல்லதல்ல.

இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் மாநில அரசுகள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவது ஒரு விஷயத்தைத்தான் – நிதி. நெருக்கடிக்கால நிதியுதவியை நீட்டிக்குமாறும், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜிஎஸ்டி என்ற புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரியிழப்புக்கு ஈடாக மத்திய அரசு அளிக்க ஒத்துக்கொண்டதன்படி இழப்பீட்டு நிலுவைகளை உடனுக்குடன் அளிக்குமாறும் மாநிலங்கள் கோருகின்றன. அதேபோல, மாநிலங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டுத் தங்களுடைய நிதிப் பற்றாக்குறையைச் சமாளித்துக்கொள்ளவும் மத்திய அரசு இதுவரையில் அனுமதிக்கவில்லை. ஆக, நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நெருக்கடியையும் சேர்த்து எதிர்கொள்கின்றன மாநில அரசுகள். பிரதமருடனான சமீபத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில்கூட தமிழகத்தின் நிதித் தேவையை வலியுறுத்திப் பேசியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. ‘தமிழகத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக ரூ.9,000 கோடி ஒதுக்க வேண்டும்’ என்றவர், ‘ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்’ என்று கோரியிருக்கிறார். எப்போதும் மாநிலங்கள் நிதிக்காகப் பேசும் நிலை நீடிப்பது துயரகரமானது. மாநில அரசுகளின் நிலை உணர்ந்து, இந்திய அரசு அவை கோரும் நிதியை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x