Published : 28 May 2020 07:04 AM
Last Updated : 28 May 2020 07:04 AM

தமிழ்நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல்

தமிழ்நாடு வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறதா? அப்படியான பதிவுகள் நம் வசம் இருக்கின்றனவா? முதுபெரும் எழுத்தாளரான கி.ராஜநாராயணன் எழுதிய தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றான ‘கோபல்ல கிராமம்’ அருமையான ஒரு பதிவைக் கொண்டிருக்கிறது.

ராஜநாராயணனிடம் இதுகுறித்துக் கேட்டோம். தன் வாழ்வில் அப்படியான நிகழ்வைக் கண்டதில்லை என்றவர், தன் பாட்டி வெட்டுக்கிளி தாக்குதலைக் கண்டிருக்கிறார் என்று சொன்னார். அவருடைய அப்பா வழி பாட்டியான அக்கம்மா அதை விலாவாரியாக அவருக்குச் சொல்லியிருக்கிறார். “அக்கம்மா பாட்டியின் அனுபவத்திலிருந்தே ‘கோபல்ல கிராமம்’ நாவலில் இதை எழுதினேன்” என்று சொல்லும் அவர், “மழையின்மையும் கொள்ளைநோய்களும் எப்படி அடுத்து பஞ்சத்தைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுமோ, அதுபோலவே வெட்டுக்கிளித் தாக்குதலும் பஞ்சத்தைக் கூட்டிக்கொண்டு வந்துவிடும்” என்று தன் முன்னோர் பகிர்ந்துகொண்ட அனுபவ நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். 1976-ல் வெளியான ‘கோபல்ல கிராமம்’ நாவலிலிருந்து வெட்டுக்கிளிகள் தாக்குதல் பகுதியை இங்கே தருகிறோம்.

ஸ்ரீனிநாயக்கரும் எங்க்கச்சியும் ஓடிவந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கறிவேப்பிலைச் செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக்கொண்டிருந்தன.

அவற்றை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்குத் தெரியாது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலைகூட இல்லை!

அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண் ஒருச்சாண் என்றிருந்தது! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி, இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது; கேள்விப்பட்டதும் கிடையாது.

எங்க்கச்சி பயந்துபோய் புருஷனைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.

என்ன இது! உலகம் அழிவுக்காலத்துக்கு வந்துவிட்டதா?

உலகம், பிரளயம் வந்து அழியப்போகும்போது மழை பெய்யுமாம்; நாள் கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம். அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம். ஆனால், யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லலையே?

அவர் மனைவியை உதறிவிட்டு, கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார். செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்றுகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அவருக்குத் தொண்டையை அடைத்தது. எந்தப் பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள்.

கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும், இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களைப் போலவும் காட்சி தந்தன.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மனித அபயக்குரல்கள் கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன.

ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்துகொண்டு அழும் கூக்குரல் கேட்டது. காடுகளில் விளைந்த கம்மங்கதிர்களுக்குக் காவலாக பரண் மேல் உட்கார்ந்துகொண்டிருந்தவர்கள் திகைத்து, இறங்கிவந்து விட்டில்களை விரட்டிப்பார்த்தார்கள்.

கம்புகளால் அடித்துப் பார்த்தார்கள். சோ சோ என்று கூப்பாடு போட்டுப்பார்த்தார்கள். கதிர்களை மறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த விட்டில், பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது!

ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள். அவை மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்றுபோல கேட்டது.

எதைக் கொல்லுவது; எப்படிக் கொல்வது? விட்டிலைப் பிடித்தால் ரம்பம் போன்ற அதன் பின்னத்தங் கால்களால் உதைத்துக் கையை ரணமாக்கிவிடுகிறது.

நல்ல மனசு திரவத்தி நாயக்கர் அவருடைய புஞ்சையில் காவல் இருந்தார். கதிர் நன்றாக விளைந்திருந்தது. அவருக்கு மட்டுமல்ல, அந்த வருசம் கிராமம் பூராவுமே அப்படி. நாளைக்குக் கதிரைப் பிரக்கணம் என்று நினைத்திருந்தபோது இப்படி ஆகிவிட்டது.

நல்ல மனசு நாயக்கர் விட்டில்களை விரட்டிப் பார்த்தார். தன்னை மூடியிருந்த துப்பட்டியை எடுத்து அடித்து அடித்து விரட்டினார். அசையவே இல்லை. அடியினால் பல விட்டில்கள் விழுந்து குற்றுயிராயின. சிலது செத்தன; ஆனால், போகவே இல்லை.

அவ்வளவு பசி!

தன் கண்ணெதிரே தான் சிரமப்பட்டு உண்டுபண்ணிய மகசூல் அழிய எந்த சம்சாரிதான் சம்மதிப்பான்.

பக்கத்துப் புஞ்சைக்காரனைத் துணைக்குக் கூப்பிடலாமென்றால், அங்கேயும் இதே சோகம். நாயக்கர் ஓடி ஓடி அலுத்துப்போனார். வருஷத்துக்கு ஒரு மகசூல்; அடுத்த தை மாசத்தை இனி எப்படிப் பார்க்கிறது? மனுசருக்கு உணவு இல்லை; கால்நடைகளுக்குக் கூளம் இல்லை. எல்லாம் முடிந்தது. முடிந்தது எல்லாம்.

“அய்யோ தேவுடா..” என்று மண்ணில் விழுந்து அழுதார். கைக்குக் கிடைத்த தின்பண்டத்தைக் காக்கை பறித்துக்கொண்டு ஓட கீழே விழுந்து புரண்டு அழும் குழந்தைபோல் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x