Published : 26 May 2014 03:24 PM
Last Updated : 26 May 2014 03:24 PM

நம்பிக்கை ஊட்ட வேண்டும் மோடி

முப்பதாண்டுகளாக இந்தியா இப்படி நம்பிக்கையோடு இருந்ததில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சாதிக்கத் தவறிய சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவர, மோடிக்கு இந்தியர்கள் அமோக ஆதரவு அளித்துத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தன்னுடைய திறமையான நிர்வாகத்தின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சியை மீட்பார், பணவீக்கத்தை இரட்டை இலக்கிலிருந்து குறைப்பார், குற்றச் செயல்களைத் தடுப்பார், ஊழலுக்கு முடிவு கட்டுவார், நாட்டுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்குவார் என்ற நம்பிக்கையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற வாக்குறுதி தந்ததால் அவருக்கு ஆதரவு பெருகியது. ஆனால் நிறைவேற்ற வேண்டிய கடமைகளின் எண்ணிக்கைக்கோ குறைவில்லை. அனைவருக்குமான அரசியல் உரிமைகள், வெளியுறவுக்கொள்கை, மதம், இனம் சார்ந்த குழுக்களின் நலன்கள் ஆகியவற்றில் அவர் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம்.

மோடி ஏற்படுத்தும் நம்பிக்கைக்காக அவரை ஆதரித்த வாக்காளர்கள், அவர் குறிப்பிடாத விஷயங்கள் குறித்தும் அவரிடம் கேட்டிருக்க வேண்டும். தொடர் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் நாட்டில் நிலையான ஆட்சி நடக்க வேண்டும், நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும், பக்கத்து நாடுகளின் நட்புறவும் அவசியம்.

நம்பிக்கைகள் பலிக்க வேண்டுமென்றால், மோடி திறந்த மனதுடன் செயல்பட வேண்டும், புதுமைகளை விரும்ப வேண்டும், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

- SOUTH CHINA MORNING POST

(சீனாவின் South China Morning Post-ல் வெளிவந்த தலையங்கத்தின் தமிழாக்கம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x