Published : 06 Apr 2020 07:46 AM
Last Updated : 06 Apr 2020 07:46 AM

முதலில் கரோனாவைச் சமாளிப்போம்... நிதிப் பற்றாக்குறையைப் பிறகு சரிசெய்துகொள்ளலாம்!

கரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, இங்கிலாந்து அரசு 12.5% ஒதுக்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு, முதற்கட்டமாக கரோனா தடுப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கிய ரூ.15,000 கோடியையும், நிவாரணத்துக்காக ஒதுக்கிய ரூ.1.75 லட்சம் கோடியையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில வட்டிக்குறைப்புகளையும் சேர்த்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 2-3%-க்குள்தான் வருகிறது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது.

2003-ன் நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (எஃப்ஆர்பிஎம்) சட்டமானது, நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%-ஐத் தாண்டக் கூடாது என்று உச்சவரம்பை நிர்ணயிக்கிறது. என்றாலும் போர், தேசியப் பேரிடர், விவசாய நெருக்கடி போன்றவை ஏற்படுகிறபோது இந்த உச்சவரம்பைத் தளர்த்திக்கொள்ளலாம் என்று விதிவிலக்கையும் இச்சட்டம் அனுமதிக்கிறது.

மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் கேரளம் முதன்முதலாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ‘இந்த நிதி ஒதுக்கீடு போதாது; இந்த ஏப்ரலுக்குள்ளேயே கேரள அரசு ரூ.12,500 கோடி நிதி திரட்டியாக வேண்டும்; ஆகையால், எஃப்ஆர்பிஎம் சட்டத்தின் விதிவிலக்கைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என மத்திய அரசிடம் அது கோரிக்கை வைத்துள்ளது.

தமிழக அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.3,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மத்திய அரசிடம் ரூ.9,000 கோடி நிதியுதவி கோரியுள்ளது. மேலும், மொத்த மாநில உற்பத்தியில் ஏறத்தாழ 33% நிதிப் பற்றாக்குறை என்ற அளவுக்கு, எஃப்ஆர்பிஎம் சட்டத்தின் விதிவிலக்குப் பலனைப் பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. இது போக, மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

ஏற்கெனவே 2008-2009 ஆண்டு நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 6.2%-ஆகத் தளர்த்திக்கொண்டது. மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையை மொத்த மாநில உற்பத்தியில் 3.5%-ஆகவும், அடுத்த நிதியாண்டில் 4%-ஆகவும் இருப்பதற்கு அனுமதியளித்தது. இந்த நிதியாண்டிலும்கூட மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதற்காக 3% உச்சவரம்பை ஏற்கெனவே தளர்த்திக்கொண்டிருக்கிறது. கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் அதைத் தளர்த்துவதுதான் இப்போதைக்கு நம் முன்னால் இருக்கும் ஒரே வழி. நிதியறிக்கை சமநிலையைக் காட்டிலும் மனிதவளத்தைப் பாதுகாப்பதே முக்கியமானது.

- ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

தொடர்புக்கு: grcpim@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x