Published : 10 Feb 2020 11:16 AM
Last Updated : 10 Feb 2020 11:16 AM

எழுவர் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கட்டும் அதிமுக அரசு!

து.அரிபரந்தாமன்

அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்படி, தமிழ்நாடு அரசின் அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலைசெய்வது எனத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கான பரிந்துரையை உடனே ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அமைச்சரவைத் தீர்மானத்தையொட்டி ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அமைச்சரவைத் தீர்மானத்துக்குப் பின் எழுவரையும் விடுதலை செய்யாதது சட்ட விரோதம் என்றும், எனவே உடனே விடுதலைசெய்து உத்தரவிடுமாறும் எழுவரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். அந்த வழக்கில், மத்திய அரசு பதிலுரை தாக்கல்செய்துள்ளது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை — நளினி, முருகன் , பேரறிவாளன் , சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் — விடுவிக்கும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது என்று கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட்டக் கூறு பிரிவு 161-க்கும், உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளுக்கும், இந்த எழுவரில் நால்வரின் கருணை மனு சம்பந்தப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 25, 1999 அன்று வழங்கிய தீர்ப்புக்கும் முற்றிலும் விரோதமானது.

ஜெயலலிதாவின் உத்தரவு

பிப்ரவரி 19, 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, இந்த எழுவரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டது. எழுவரும் 24 ஆண்டுகள் சிறையில் இருப்பதால், விடுதலைசெய்வது என்ற முடிவை தமிழ்நாடு அரசு எடுத்தது. அது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவு. மூன்று நாட்களில் எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், அந்தத் தகவலை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

மத்தியப் புலனாய்வுத் துறை புலனாய்வுசெய்த வழக்குகளில் தண்டனை பெற்ற எவரையேனும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விடுதலைசெய்ய எந்த மாநில அரசு முடிவெடுத்தாலும் அது பற்றி மத்திய அரசிடம் சம்பந்தப்பட்ட மாநில அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம். அதன்படி தகவல் அளிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

அப்போது மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசின் மேற்சொன்ன பிப்ரவரி 19, 2014 தேதியிட்ட உத்தரவை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, எழுவரின் விடுதலைக்குத் தடை பெற்றது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை வழங்கியது.

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் பற்றிய முக்கிய பிரச்சினை இந்த வழக்கில் எழுவதால், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்கப் பரிந்துரைசெய்து ஏப்ரல் 25 அன்று உத்தரவை வழங்கியது மூவர் அமர்வு. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, நீண்ட விவாதங்களுக்குப் பின் டிசம்பர் 2, 2015-ல் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் அமர்வில் வழக்கை நடத்தியது, தற்போது மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜக அரசு.

ஐவர் அமர்வின் தீர்ப்பு

‘‘மத்திய அரசின் புலனாய்வுத் துறை புலனாய்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற எவரையேனும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விடுவிக்க சம்மந்தப்பட்ட மாநில அரசு முடிவெடுக்கும் போது மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும்’’ என்று கூறியது அந்தத் தீர்ப்பு. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள ‘ஆலோசனை’ (கன்சல்டேஷன்) என்பதற்கு ‘ஒப்புதல்’ (கன்கரன்ஸ்) என்று வியாக்யானம் செய்தது உச்ச நீதிமன்றம்.

அதே டிசம்பர் 2, 2015 தீர்ப்பில், அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்படி, மாநில அரசு சிறையில் இருக்கும் எவரையேனும் விடுதலைசெய்ய முடிவெடுத்தால், அப்போது மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் ஐந்து நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, அத்தீர்ப்பின்படி அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த எழுவரை விடுவிக்கத் தீர்மானம் இயற்றவில்லை. எனவே, எழுவரின் விடுதலை நிகழவில்லை.

ஜெயலலிதா செய்யாததை, எடப்பாடி பழனிசாமி செய்தார். எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று எழுவரை விடுதலைசெய்வது என்ற முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின்படி விடுதலைசெய்ய ஆளுநருக்குப் பரிந்துரைசெய்தது. ஆனால், அத்தீர்மானம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையின்படி எழுவரை விடுவித்து, ஆளுநர் உத்தரவேதும் போடவில்லை.

தங்கள் தீர்மானத்தை உதாசீனம் செய்யும் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தர மாநில அரசும் முன்வரவில்லை. உள்ளபடியே அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்படத் தவறியதைப் பற்றி தமிழக அரசு மக்களிடம் பேச வேண்டும். நீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடுக்கலாம்.

வழக்குத் தொடுக்க என்ன தயக்கம்?

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, கேரள அரசு உச்ச நீதிமன்றமத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. தேசியப் புலனாய்வுச் சட்டத்தின் கீழ் மாநில அரசின் சம்மதமின்றி, குற்ற வழக்கின் புலனாய்வை தேசியப் புலனாய்வு முகாமைக்கு மாற்றுவதை எதிர்த்து சத்தீஸ்கர் மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதுபோல தமிழ்நாடு அரசும், உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிவித்தாலே போதும்... ஆளுநர் வழிக்கு வருவார்.

இதே போல, ‘நீட்’ தேர்வு விலக்குச் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றினாலும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்பதை இங்கே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கேதும் தொடுக்கவில்லை. இது மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மையாகவே முழு மனதுடன்தான் தமிழக அரசு இத்தகு முயற்சிகளை மேற்கொள்கிறதா அல்லது மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசு நடத்தும் நாடகமோ என்று யோசிக்க வைக்கிறது.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எவரையும், கூறு 72-ன் கீழ் குடியரசுத் தலைவரும், கூறு 161-ன் கீழ் மாநில ஆளுநரும் விடுவிக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. மத்திய அரசின் பரிந்துரை இன்றி, குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டம் பிரிவு 72-ன் கீழ் எவரையும் விடுதலைசெய்து உத்தரவிட முடியாது. அதேபோல, மாநில அரசின் பரிந்துரை இன்றி ஆளுநர் எவரையும் விடுதலைசெய்து உத்தரவிட முடியாது. இதுவே சட்ட நிலை. மத்திய/மாநில அரசின் பரிந்துரையின்படியே குடியரசுத் தலைவர்/ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதே, நமது அரசமைப்புச் சட்டம் கூறுவது.

தீர்ப்புக்கு எதிரான உத்தரவு

1999-ல் தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது ஆளுநராக இருந்தவர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவி. அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியபோது, கருணை மனுவின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய/மாநில அரசுகளுக்குத்தான் உண்டு என்றும், குடியரசுத் தலைவரோ/ஆளுநரோ முடிவெடுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்திருந்தார்.

ஆனால், தான் அளித்த தீர்ப்புக்கே மாறாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை, தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின்றி நிராகரித்து, அக்டோபர் 29, 1999-ல் உத்தரவிட்டார். ஆளுநரின் அந்தத் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 25, 1999 அன்று வழங்கிய தீர்ப்பில் ரத்துசெய்தது. தமிழக அமைச்சரவை கருணை மனுவின் மேல் முடிவெடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் ஆளுநர் கருணை மனுவின் மேல் உத்தரவிட வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் கூறியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமையேற்ற நீதிபதி கே.டி.தாமஸ், நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டதையும் அவ்வழக்கின் புலன் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதையும் கருத்தில் கொண்டு எழுவரையும் விடுவிக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார். சோனியா காந்திக்கும் இது பற்றி கடிதம் எழுதி, எழுவரையும் விடுவிக்கக் கோர வேண்டும் என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாகச் செயல்பட்ட ரகோத்தமன், இவ்வழக்கு பற்றி எழுதிய புத்தகத்தில் புலனாய்வில் பல குறைபாடுகள் இருந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் பங்கேற்ற அவர், எழுவரும் நீண்ட காலமாகச் சிறையில் இருப்பதால், அவர்களை விடுவித்துவிடலாம் என்றார். இந்த வழக்கில் குற்றவாளிகளின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த மற்றொரு புலனாய்வு அதிகாரி தியாகராசன், வாக்குமூலங்கள் சரியானபடி பதிவுசெய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல்செய்தார். மேற்சொன்ன அனைத்தும், இந்த எழுவரும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று சொல்லுவன அல்ல; மாறாக, இவை தண்டனையைக் குறைப்பதற்கான மன்னிப்பதற்கான நியாயங்கள். 29 ஆண்டு சிறைக்குப் பின் இப்போது விடுதலை செய்வதற்கான வலுவான காரணிகள்.

காங்கிரஸ், பாஜக முன்னுதாரணங்கள்

இது போன்ற எந்த ஒரு காரணியுமின்றி, காந்தியை படுகொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்ற மூவரை - கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா - 16 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருந்தது போதுமென அக்டோபர் 13, 1964-ல் பிரதமர் நேரு மறைந்த 5 மாதங்களில் விடுதலைசெய்தது காங்கிரஸ் அரசு.

இப்போதைய பாஜக அரசு, பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளத்தின் கோரிக்கையை ஏற்று காலிஸ்தான் கோரி ஆயுதமேந்திப் போராடியதற்காக ஆயுள் தண்டனை பெற்ற 8 பேரை குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தையொட்டி விடுதலைசெய்தது. இதே அணுகுமுறையை எழுவர் விடுதலையிலும் பின்பற்றுவதற்கு மத்திய பாஜக அரசு மறுப்பது சரியல்ல. தமிழக அமைச்சரவை முடிவெடுத்த பின்னரும், எழுவரை விடுதலைசெய்ய ஆளுநர் உத்தரவிடத் தவறியது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆகவே, எழுவரை விடுவிப்பதற்கான அழுத்தங்களை அதிமுக அரசு உண்டாக்க வேண்டும்!

- து.அரிபரந்தாமன்,

முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x