Published : 19 Jan 2020 10:24 AM
Last Updated : 19 Jan 2020 10:24 AM

தனுஷ்கோடி ஆவிகளைத் துரத்துகிறேன்!- கோணங்கி பேட்டி

தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதைசொல்லி கோணங்கி. கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர். ‘பாழி’, ‘பிதிரா’, ‘த’ உள்ளிட்ட நாவல்களைத் தொடர்ந்து ‘நீர்வளரி’ நாவலை இப்போது வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது.

ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி, காலத்தைச் சொல்லுங்கள்...

விளாத்திகுளத்திலிருந்து வந்த ச.ஜோதிவிநாயகத் தின் ‘தேடல்’ சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது. அப்போது என் வயது இருபது. அதைப் படித்து உற்சாகமான எழுத்தாளர் வண்ணநிலவன், ஜோதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து சிறுகதைக்கான தீவிரமான சுழற்சியை உள்ளுணர்வாகப் பெற்றேன். மெல்ல நாடோடியாய்ச் சுற்ற ஆரம்பித்த என்னை வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதை கட்டிப்போட்டது. அதிலுள்ள இருட்டைத் தொட்டு ‘இருட்டு’ கதையை எழுதினேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தோழர் எஸ்.எஸ்.தியாகராஜனின் கோவில்பட்டி மேன்சன் அறையில், நான் திருடிய ‘அஃ’ சிற்றிதழில் ந.முத்துசாமியின் ‘வண்டி’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. என்னை வெகுவாகப் பாதித்த என் பால்ய மனத்தில் ‘வண்டிப்பாதை’ என்ற நெடுங்கதையை ஐம்பது பக்கங்களுக்கு மேல் எழுதினேன். ‘இருட்டு’ சிறுகதையும், ‘பாழ்’ சிறுகதையும் என் கலைக்கு ஆதாரம். எல்லோர் வாழ்வின் விதியாகவும் இருக்க விரும்பிய என் விருப்பம்தான் என்னுடைய கதைகள்.

தமிழில் சாதனை படைத்த வடிவம் சிறுகதைகள். நீங்கள் அதில் யாருடைய மரபில் வருகிறீர்கள்?

ந.முத்துசாமியின் ‘வண்டி’, ‘நீர்மை’ கதைகளிலிருந்தும், கு.அழகிரிசாமியின் ‘அழகம்மாள்’, ‘திரிபுரம்’, ‘காற்று’ கதைகளிலிருந்தும், பூமணியின் ‘ரீதி’, ‘வயிறுகள்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்தும், பா.செயப்பிரகாசத்தின் ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ கதையிலிருந்தும், இராஜேந்திர சோழனின் ‘இச்சை’, ‘புற்றிலுறையும் பாம்புகள்’ கதைகளிலிருந்தும் நான் வருகிறேன். மூதாதைகளைச் சொன்னால் புதுமைப்பித்தனின் ‘கபாடபுர’த்தில் சிசுவாகப் பிறந்தேன். மௌனியின் ‘மனக்கோட்டை’யில் தேவாசுர யுத்தத்தில் சிதறிக்கிடக்கும் துகள்களைத் தேடித்தேடி அலைந்தேன். பிரமிளின் ‘காடன் கண்டது’ கதையின் புனைவு வனத்தில் வேடனாக ஓடிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, கம்பனின் அதீதமும், ந.முத்துசாமியின் அதீதமும் என்னைத் தீவிரமாக ஆட்கொண்டுவருகின்றன இன்றும்.

தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் புகழ்பெற்ற நாடகக் கலைஞர். அப்பா எம்.எஸ்.சண்முகம் ஒரு எழுத்தாளர். தம்பி முருகபூபதியும் அண்ணன் ச.தமிழ்செல்வனும் நாடக, சிறுகதைக் கலைஞர்கள்… இந்தக் கலைப் பின்னணியின் நினைவுகள் உங்களிடம் அழுத்தமாக உள்ளதல்லவா?

என் தாத்தா பாஸ்கரதாஸ், தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’க்குத் திரைக்கதை எழுதினார். ‘தேடிவந்தேனே புள்ளிமானே’ எனது தாத்தாவின் பாடல்தான். எச்எம்வி கீதத்தட்டு, கேட்லாக் புத்தகம், நாட்குறிப்பு, செய்தி நறுக்கு, டி.எம்.கமலவேணி கடிதக் கோப்பு, மதுரை மேலமாசி வீதி உடுப்பியில் 14-ம் எண் அறையின் வாடகைப் பற்று எல்லாம் நாகலாபுரம் பூர்வீக வீட்டில் விசாலமடைந்த நூலகமாக மாறின. நாடகப் பாடல்கள் எல்லாம் ரயில் பிச்சைக்காரர்களோடு சேர்ந்து அலைந்தன. என் தம்பி ச.முருகபூபதி நாடகக்காரனாகப் பிறக்கவும் காத்திருந்த பாஸ்கரதாஸின் ஆவி பேரனைப் பிடித்துக்கொண்டது. அப்பா எம்.எஸ்.சண்முகம் எழுதிய ‘பூட்டு பாம்படம்’, ‘நிலம் மருகும் நாடோடி’, ‘பெரிய வயல்’ நாவலும் எங்களுக்கு கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ போன்றது. ச.தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’, ‘வாளின் தனிமை’ புத்தகங்களிலிருந்து எழுதத் தூண்டும் சூலகம் பிரியாத அண்ணனின் நூலகத்திலிருந்தும் நான் பிறந்தேன்.

சிறுகதைகளிலிருந்து நாவலை நோக்கி ஏன் நகர்ந்தீர்கள்?

நாவல் எழுதுவதற்குச் சிறுகதையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். 1995-லிருந்து 2000 வரை எழுதப்பட்டதுதான் ‘பாழி’ நாவல். இந்த நாவல் சொல்கதையிலிருந்து மொழிகதையாக உருமாற்றம் அடைந்துள்ளது. நாவலுக்கு வரும் பாதையாக அமைந்தது, எனது ஐந்தாம் தொகுதியான ‘உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை’. எனது நாவல் வடிவம், எனது ஏழு சிறுகதைப் புத்தகங்களின் மடிப்பில் பொருளுடைய குணத்தை, கடினமான கலைக்கு அதிகபட்சமாக நெருங்கி புறத்தோற்றங்களை உதறி எறிகிறது மொழி. மூன்றும் ஏழுமாகி இரு வரியில் அடங்கிய திருவள்ளுவரின் ஏழு வார்த்தைகள் ஏழு விதமான துகள்களாக உள்ளன. மொழியின் ஆழத்துக்குக் குடைந்து பொருட்களை வெளியேற்றிப் படிக உடலாக ‘பாழி’ நாவலை அடைந்தேன்.

நீங்கள் தொடர்ந்து நடத்திவரும் ‘கல்குதிரை’ இதழை எந்தப் பின்னணியில் கொண்டுவந்தீர்கள்?

லத்தீன் அமெரிக்க இலக்கியம் என் மீது தாக்கம் செலுத்திய காலத்தில், எதார்த்தம் மீறிய கதைகளை, பரிசோதனைப் படைப்புகளை, அற்புத எதார்த்தக் கதைகளைத் தமிழில் எழுதிப் பார்ப்பதற்கான தேவையை உணர்ந்தேன். சூழலைப் புரட்டிப்போட நினைப்பவன் சிறுபத்திரிகையின் தொன்மமாக மாறுகிறான். ‘எழுத்து’, ‘கசடதபற’, ‘பிரக்ஞை’, ‘கொல்லிப்பாவை’, ‘இலக்கிய வட்டம்’ போன்ற சிற்றிதழ்களின் நீட்சியாக ‘கல்குதிரை’ வெளிவந்துகொண்டேயிருக்கிறது. ஒரு விவசாயிபோல ஒரு ஆண்டு காத்திருந்து ‘கல்குதிரை’யை இன்னமும் எழுத்தாளர்களோடு சேர்ந்து நடத்திக்கொண்டுவருகிறேன்.

உங்களது புதிய நாவல் ‘நீர்வளரி’ பற்றி?

இந்த நாவலுக்கு ‘மந்திர இழைகள் விடும் பொய்யாக் கொடி வையை’ என்றும் பெயரை யோசித்திருந்தேன். என் அம்மா பிறந்தது மதுரை. என் நாவலைத் தொடங்கியதும், கடைசியாக நாவலை மெய்ப்பு நோக்கித் திருப்பியதும் மதுரையிலிருந்துதான். இந்த நாவலில் டிசம்பர் 21-ஐக் குறியீடாகக் கொண்டு 21 கதைச் சுருள்களாக வைகை படர்கிறாள். ‘தசாவாள சக்கராகாரம்’ என்ற வார்த்தையை போர்ஹேயின் ‘வட்டச்சிதைவுகள்’ கதையின் எதிர்விதியாக எடுத்துக்கொள்கிறேன். வாளம் என்பது வளரி. கரிசல் வாளம், சுண்ணாம்பு வாளம், ஏழ்பனை ஓலைக்குடா வாளம், பிறை முளரி வாளம், உப்பு வாளம். வளரி என்கிற பூமராங்கை வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இது.

உங்களின் பயணங்களில் தொடர்ந்து இடைப்படும் தனுஷ்கோடி, ஹம்பி உங்களின் படைப்புணர்வில் செய்திருக்கும் ரசவாதம் என்ன?

நான் பார்த்த தனுஷ்கோடி, கடல் ஊழியால் ஏற்பட்ட வைகை மணல் மேடுகளாலான ஊரைத்தான். தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை இந்த மேடுகள் உள்ளன. பாலாடை மாதிரி மணல் மேலே தெரியும். ஆனால், கால் வைத்தால் காலை இழுத்து மூழ்கடித்துவிடும். பறவைகள் மட்டுமே தப்பிக்க முடியும். மனிதகுலம் வந்த முடிவற்ற பாதையாக அது இருக்கிறது. அது ராமாயணத்தையும் கடந்து மனித எலும்புகளும் விலங்குகளின் எலும்புமாக நீண்ட பாதையாகப் பார்க்கிறேன். அதனால்தான், தனுஷ்கோடியில் உள்ள ஆவிகளைத் தேடிப் போய்க்கொண்டேயிருக்கிறேன். தனுஷ்கோடி என்னை விடாது. ஹம்பிக்கு நான் முதன்முறை போனபோது அந்தக் கோயிலுக்குள் உள்ள குளத்துக்குள் ஹம்பியின் மொத்தக் கட்டிடமும் நிழல் மாதிரி விழும். அங்கே சீனிக்கல்லில் ஒரு மலையை வாலி கோச்தா என்கிறார்கள். வாலியின் எலும்புபோல அந்தப் பாறைகள் இருக்கின்றன. ஆனை கண்டி என்ற ஊர் மன்னர்கள் ஆண்டது. அங்கு இப்போதிருக்கும் சைக்கிள் கடைக்காரர்களும் மன்னரைப் போலத்தான் முழிக்கிறார்கள். ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் ஹம்பிக்குப் போவேன். ஹம்பி பாதித்த அளவுக்கு ஹலபேடும் பேளூர் சிற்பங்களும் என்னை ஈர்த்தவை. சிதிலங்களின் துகள்களை எடுத்துத்தான் நான் என் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் நான்கு நாவல்களின் பயணத்தைச் சொல்லுங்கள்…

‘பாழி’ – நிகண்டு வடிவத்தைப் பின்பற்றி கூடுதல், பிரிவு என்பதன் மயக்க வெளியை நீட்சியாக்கும் நிலத்தோற்றங்கள்தான். ‘பிதிரா’ – நூலே ஒரு பிதிரா. கலைகளின் கால்வழி மரபை எடுத்துக்கொண்டு கதையின் அந்தமாக மாறுவதுதான் ‘பிதிரா’. கிளிமுகப் பயணி, உப்புநூல் யாத்ரீகன் என்ற இருவர் எழுதிய கதை இது. முதல்வன் கவிஞன், பின்னவன் கதைசொல்லி. ‘த’ – தீநீரிலிருந்து த-வுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். தாவோவிலிருந்து த வருகிறதா? தனுஷ்கோடியிலிருந்து வருகிறதா? த – கடலில் இருக்கிறதா? நெய்தல் பெரும்பண் தோடி ராகத்தில் த மறைந்திருக்கலாம். ‘தாவொலி மூங்கில்’ என்று இந்த நாவலுக்குப் பெயர் வைத்திருந்தேன். தேவதச்சன் வந்து ‘த’ என்று பெயர் வைத்தார். இரண்டு நாவல்களுக்கிடையே அவர்தான் வந்து முறிச்சுடு என்பார். ‘நீர்வளரி’ நாவலில் நான் இருக்கும்போதும் தேவதச்சன்தான் வந்து, ‘போதும் நிறுத்திவிடு’ என்றார். நிறுத்திவிட்டேன்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x