Last Updated : 17 Jan, 2020 10:01 AM

1  

Published : 17 Jan 2020 10:01 AM
Last Updated : 17 Jan 2020 10:01 AM

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது!- ஜெயரஞ்சன் பேட்டி

பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

எழுத ஆரம்பித்தது எப்படி?

மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்தான் என்னை எழுத வைத்தன. 1980-களில் ‘எம்ஐடிஎஸ்’-ல் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். என்னைச் சந்திக்க வரும் ஊடக நண்பர்கள் பொருளாதாரத்தைப் பற்றிக் கட்டுரை கேட்பார்கள். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, வேளாண் துறையையும் அதன் பொருளாதாரத்தையும் பற்றி அதிகம் எழுதினேன். நான் மாணவனாக இருந்தபோது காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது காவிரியைப் பற்றி எழுதினேன். இதெல்லாம்தான் தொடக்கப் புள்ளி. அதற்குப் பிறகு, முப்பதாண்டு காலம் தேசிய, சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியில் இருந்துவிட்டேன். ஆனால், வெகுஜன மக்களுக்குப் பொருளாதார சிந்தனையைக் கொண்டுசெல்லாமல் மேல்மட்ட நிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்தேன். அந்தச் சூழலில், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னை இழுத்துக்கொண்டுபோய் விவாதங்களில் உட்கார வைத்தன. அதன் தொடர்ச்சியாக, ‘மின்னம்பலம்’ இணையதளத்தில் எழுதலானேன். அப்படித்தான், பணமதிப்பு நீக்கத்தின்போது 60 நாட்களில் 100 கட்டுரைகள் எழுதினேன். பின்னால், அது புத்தகமாகவும் வந்தது. நான் எழுதிய பிற பொருளாதாரக் கட்டுரைகளையும் தொகுத்து ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’ என்றொரு புத்தகத்தையும் வெளியிட்டோம்.

சமீப காலமாக நிறைய பொருளாதாரப் புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் படுகின்றன அல்லவா?

நல்ல புத்தகங்கள் வருகின்றன. தாமஸ் பிக்கட்டியின் நூல் தமிழில் வந்திருக்கிறது. ஒரு சாதாரண வாசகரால் பிக்கட்டியை எடுத்தவுடன் படிக்க முடியாது. ஆகவே, இது போன்ற புத்தகங்களில் நான்கைந்து பக்கங்களில் ஒரு எளிமையான அறிமுகம் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய வளர்ச்சி என்கிறோம், ஆனால் இந்த வளர்ச்சியால் யாருக்குப் பயன் என்று கேட்டுப் பார்க்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்திருக்கிறது, இதில் சாதாரண மக்களின் வருமானம் எப்படி இருக்கிறது, செல்வந்தர்களின் வருமானம் எத்தனை மடங்காக ஆகியிருக்கிறது; இதைப் பற்றித்தான் தாமஸ் பிக்கெட்டி எழுதியிருக்கிறார் என்று சொன்னால் வாசகர்கள் உள்ளே வருவதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

யாருடைய பொருளாதாரச் சிந்தனைகள் தமிழுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

வலதுசாரிச் சிந்தனைகளும், அதற்கு மாற்றாக இருக்கும் இடதுசாரிச் சிந்தனைகளும் வர வேண்டும். இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான மோதல்கள்தான் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கின்றன. எது சரி, எது தவறு என்பதை மக்களே முடிவுசெய்துகொள்வார்கள். வலதுசாரிச் சிந்தனையைப் பொறுத்தவரை, அவர்களே எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று யார் சொன்னார்களோ அவர்களே, ‘நாம் ரொம்பவும் அதிகமாகப் போய்விட்டோமோ’ என்று கவலை தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் பெரும் பணக்காரர் களான பில் கேட்ஸ் போன்றவர்கள், ‘எங்களிடம் அளவுக்கதிகமாகப் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. பன்னாட்டு நிதியமே, ‘நாம் ரொம்பவும் அதீதமாகப் போய்விட்டோமோ’ என்று அவர்களுடைய பத்திரிகையில் எழுதுகிறது. கட்டுக்கடங்காத ஏற்றத்தாழ்வு இருக்கும்போது முதலாளித்துவமே தன்னைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் ஒன்றும் அற உணர்ச்சியால் இப்படிக் கவலைப்படவில்லை. அமைப்புக்கே ஆபத்து வந்துவிடும்போல் இருக்கிறதே என்றுதான்.

தமிழ்நாட்டின் பொருளாதார முன்னெடுப்புகள் எப்படி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்திருக்கின்றன என்ற முறையில் விரிவாகப் பேசியிருக்கிறீர்கள் அல்லவா?

தமிழ்நாடு இவ்வளவு வளர்ந்த மாநிலமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம் சமூக நீதிதான். அது இல்லை என்றால் கேரளம், தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் இருப்பதுபோல் வெகுசிலருக்கான வளர்ச்சியாக மட்டுமே இருந்திருக்கும். அதுதான் மக்களை அடுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபடி போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி நகர்த்தும்போது அவர்கள் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்கள். அப்படி விடுபடும்போது அவர்களுடைய பணமும் சக்தியும் நேரமும் அவர்கள் அடுத்த கட்டங்களை நாடிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால் சாப்பாட்டுக்கு மற்றவர்களை சார்ந்திருந்த சூழல் இருக்கிறதல்லவா! எங்கள் ஊர் திருவையாறு பக்கத்தில், காவிரிக் கரையில் இருக்கிறது. தண்ணீர் அவ்வளவு ஓடும் அந்தப் பகுதியிலேயே வருஷத்தில் 110 அல்லது 120 நாட்கள்தான் விவசாய வேலை இருக்கும். மீதி நாள் வேலை இருக்காது. வேலை இருந்தால்தான் சம்பளம். அந்த மாதிரி சூழல் இருந்த காலத்தில் ஏப்ரல் வந்தால் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கும். ஜூன் 1-ம் தேதியெல்லாம் சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றும் இருக்காது. அப்போது ஆண்டை வீட்டுக்குப் போய்தான் தலையைச் சொறிந்துகொண்டு நிற்க வேண்டும். அவர்களும் உடனேயே கொடுத்துவிட மாட்டார்கள். கூனிக் குறுக வைத்து ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டு அதற்கப்புறம்தான் இரண்டு கலம் நெல் தருவார்கள். அண்ணாவும் அவர்களுக்குப் பின் வந்தவர்களுமாகச் சேர்ந்து அந்தச் சூழல் அடியோடு புரட்டிப்போடப்பட்டது. சாப்பாட்டுக்காக யாரும் யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை என்றானது. பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது. ‘எல்லோரையும் சோம்பேறிகளாக ஆக்கிவிட்டார்கள். யாரும் வேலைக்கு வர மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்வது மேல்குடிப் பார்வை மட்டுமல்ல, மத்தியதர வர்க்கத்துக்கும் அந்தப் பார்வை ரொம்பவும் வசதியாக இருக்கிறது. இப்படி இருக்கும்போதுதான் திராவிட இயக்கத்தின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

உங்களது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ புத்தகம் பல முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. எப்படி வந்தது இந்த யோசனை?

நான் ‘எம்ஐடிஎஸ்’-ல் சேர்ந்தபோதிலிருந்தே ஒரு விஷயம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்தது. அது நிலச்சீர்திருத்தம் தொடர்பானது. அப்போதெல்லாம் நிலச்சீர்திருத்தம் என்றால் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. இப்போது சீர்திருத்தம் என்றால் இல்லாதவர்களிடம் பிடுங்கி இருப்பவர்களுக்குக் கொடுப்பதாக மாற்றிவிட்டார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாதில் உள்ள ‘தேசிய ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்’ ஒரு நல்கை கொடுத்தது. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் குத்தகைதாரர்களின் வாழ்க்கை நிலை என்னவாகியிருக்கிறது என்பதுதான் எனது ஆய்வு. அதற்காகப் போய் பார்க்கும்போது எப்படி எல்லாம் தலைகீழாக மாறிப்போயின என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பெரிய அறிக்கை ஒன்று எழுதினேன். அதன் தமிழாக்கம்தான் ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற புத்தகம். யாரிடமிருந்து யாருக்கு நிலம் போனது, எந்தக் காலகட்டத்தில் போனது, சட்டங்கள் என்ன செய்தன, சட்டங்களைத் தாண்டி சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்பதையெல்லாம் இதில் சொல்லியிருக்கிறேன்.

உங்களின் அடுத்தடுத்த எழுத்துத் திட்டங்கள் என்னென்ன?

என்னுடைய ஆய்வுப் பணிகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது. அடுத்த புத்தகக்காட்சிக்குள் தமிழகப் பொருளாதார நிலை பற்றி இரண்டு நல்ல புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற யோசனை இருக்கிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x