Published : 11 Oct 2019 09:21 AM
Last Updated : 11 Oct 2019 09:21 AM

ஜி ஜின்பிங்: இன்னொரு மாவோ!

சி.ஹரி

மா சே துங்குக்குப் பிறகு சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக சீனாவில் உருவெடுத்துள்ளார் ஜி ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீன மக்கள் குடியரசின் அதிபர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், கட்சியின் தனிப்பெரும் தலைவர் என்று ஒரே சமயத்தில் பல உயர் பதவிகளை வகிக்கிறார். மாவோவின் சிந்தனைகள் எப்படி கட்சியின் சித்தாந்தங்களிலும் நாட்டின் சட்டங்களிலும் தாக்கம் செலுத்தினவோ அப்படி இன்றைய சீனாவில் ஜி ஜின்பிங்கின் சிந்தனைகளும் தாக்கம் செலுத்துகின்றன.

1953-ல் பிறந்த ஜி ஜின்பிங்கின் தந்தை ஜி ஜாங்க்ஸன், மாவோவின் ஆட்சிக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப் பரப்புப் பிரிவின் தலைவராகவும் மாகாணத் துணை முதல்வராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். ஆனால், மாவோ முன்னெடுத்த கலாச்சாரப் புரட்சியின்போது, கட்சியிலிருந்து ஜி ஜாங்க்ஸன் நீக்கப்பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறுவனான ஜின்பிங்கும் யான்சுவான் என்ற ஊரகப் பகுதியில் முகாமில் அடைக்கப்பட்டார்.

ஆயினும், தந்தையின் வழியில் அவர் அரசியல் நோக்கி நகர்வதில் இவையெல்லாம் எந்தத் தடையையும் உருவாக்கவில்லை. ஜின்பிங் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபடுத்திக்கொண்டார். அங்கே அவர் தொழிலாளியாக, விவசாயியாக, ராணுவ வீரராக வேலைகளைச் செய்துகொண்டே சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் படித்தார். பியுஜியான், ஷெஜியாங் ஆளுநராகப் பதவி வகித்தவர், 2007-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008-ல் சீனத் துணை அதிபரானார். பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அதிபராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

இதற்குப் பின் கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை மிக வலுவான இடத்திலும் அதிகாரங்கள் அத்தனையும் தன்னைச் சுற்றிலும் சுழல்வதாகவும் அவர் மாற்றிக்கொண்டார். இன்றைக்கு அவருக்குச் சவால்விடக்கூடிய தலைவர் எவரும் சீனாவில் இல்லை என்பது போக, வரலாற்றில் மாவோவுக்கு அடுத்து சக்தி வாய்ந்த தலைவர் என்ற இடத்துக்கும் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

ஜின்பிங்கின் முக்கியமான சாதனை என்றால், மக்கள் இடையேயான ஏற்றத் தாழ்வைக் குறைப்பதிலும், எளிய மக்கள் மேலேறிவரும் பாதையைத் தடுப்பதில் பெரிய தடைக்கல்லாக இருக்கும் ஊழலை ஒழிப்பதிலும் அவர் காட்டிவரும் தீவிரம். இதில் சொந்தக் கட்சியினர், வேண்டப் பட்டவர்கள், விசுவாசிகள் என்ற எந்தப் பாகுபாட்டையும் அவர் பார்க்கவில்லை. மேலும், நம்முடைய சாதி அமைப்பு போன்ற தடைச் சூழல் எதுவும் இன்றைய சீனாவில் இல்லை. ஜின்பிங் உண்டாக்கியிருக்கும் மோசமான பாதிப்பு என்றால், சீன அரசிலும் கட்சியிலும் யதேச்சதிகாரத்தை மேலும் அவர் வளர்த்திருக்கிறார்; ஜனநாயகத்தின் நிலை மேலும் மோசமாகியிருக்கிறது.

உலகின் தலைமையை அமெரிக்கா விடமிருந்து பறித்து சீனாவை அந்த இடத்தில் அமர்த்துவது ஜின்பிங்கின் முக்கிய மான லட்சியம். அவருடைய எந்த உறவும் முனைப்பும் இதை மையமாக உள்ளடக்கியது என்ற புரிதல் நமக்கு முக்கியமானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x