Published : 05 Aug 2019 09:03 AM
Last Updated : 05 Aug 2019 09:03 AM

தேசிய குடிமக்கள் பதிவேடு: விரைந்து அளிக்கப்படும் நீதியா? மறுக்கப்படும் நீதியா?

கௌதம் பாட்டியா

அசாமில் குடிமக்களின் பெயர்கள் அடங்கிய தேசியப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுவரும் இப்போதைய நடைமுறைகளுக்கு மூலகாரணமாக இருந்தது எது என்பது ஊடகங்களில் அதிகம் இடம்பெறவில்லை. அப்துல் குத்தூஸ் ‘எதிர்’ மத்திய அரசு வழக்கில் 15 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களின் பேரில், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த மே 17-ல் ஒரு முடிவை எடுத்தது; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா இடம்பெற்றிருந்தனர். ‘2003 குடியுரிமை (குடிமக்கள் பதிவு, தேசிய அடையாள அட்டை விவகாரம்) விதி’ சட்டத்தின் இரண்டு பத்திகளில், ‘முரண்பாடுகள் இருப்பதாக’ கருதி அந்த அமர்வு எடுத்த முடிவுதான் இப்போதைய நடைமுறைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் குடிமக்களைத் தீர்மானிப்பதற்கு ஒரே சமயத்தில் இருவேறு நடைமுறைகளை இருவேறு அமைப்புகள் பின்பற்றுகின்றன. ‘அந்நியர்கள் (அடையாளம் காணும்) நடுவர் மன்றம்’ போலவே ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்ஆர்சி) தயாரிக்கும் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, அதன் கண்காணிப்பில் செயல்படுகிறது. ‘அந்நியர்கள் நடுவர் மன்றம்’ தெரிவிக்கும் கருத்துக்கு முக்கியத்துவம் ஏதும் கிடையாது, ஏனென்றால், அது ‘அரசு நிர்வாக’ உத்தரவின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் என்று அப்துல் குத்தூஸ் வழக்கில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

தவறான அணுகுமுறை

இப்போதுள்ள விதிகளின்படி, அந்நியர் நடுவர் மன்றம் ஒருவரை இந்நாட்டுக் குடிமகன் இல்லையென்று கூறினாலும் அவருடைய பெயர் உடனடியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படாது. புதிய சான்றுகள் தரப்பட்டால் நடுவர் மன்றமே தன் முடிவை எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ளக்கூடும். குடிமக்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையானது, அரசு நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு தவறுகளுக்கு உட்பட்டதே. பிற்காலத்தில், தற்செயலாகச் சில தவறுகள் தெரியவரலாம். அப்படி ஆதாரத்துடன் தெரியும்பட்சத்தில், ‘குடிமகன் அல்ல’ என்று தீர்மானிக்கப்பட்டவர், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, தனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று கூறி ‘குடிமகனாக’ அறிவிக்கும்படி மீண்டும் கோரவும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்நியரை அடையாளம் காணும் நடுவர் மன்றத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு அமைப்பையும் ஒன்றையொன்று சாராமல் தனித்தனியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் கோரிக்கை.
ஆனால், உச்ச நீதிமன்றம் மனுதாரர்களின் இந்த வாதங்களை ஏற்கவில்லை. அந்நியர் நடுவர் மன்றத்தின் கருத்துகளை, ‘பகுதியளவு நீதித் துறை ஆணை’யாகவே கருத வேண்டும் என்று கூறி, மனுதாரர்களின் வாதங்களை நிராகரித்தது. அந்த நடுவர் மன்றமும் பகுதியளவு நீதிமன்ற அமைப்பாகவே நடத்தவும் பட்டது. எனவே, அதன் முடிவுகள் இறுதியானதாகவும் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் ஏற்கப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதே அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட அணுகுமுறையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன. இது லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையையே தனிப்பட்ட முறையில் பாதித்துவிடும்.

வெளிப்படையான குளறுபடிகள்

அமைப்பு என்று பார்த்தாலும், அதன் செயல்கள் என்று பார்த்தாலும் சாதாரணமாக நாம் காணும் எந்த நீதிமன்றத்துடனும் ஒப்பிடும் வகையில் அந்நியர் நடுவர் மன்றங்கள் இல்லை. முதலாவதாக, அரசு நிர்வாகத்தின் ஆணை மூலம் ஏற்படுத்தப்பட்டதே இந்த அமைப்பு. நடுவர் மன்றத்தில் உறுப்பினராகச் செயல்படுவதற்கான தகுதிகள் தளர்த்தப்பட்டு, ‘நீதித் துறை அனுபவம்’ என்ற மேலோட்டமான தகுதி போதும் என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, அரசு அதிகாரிகள்கூட உறுப்பினர்களாக்கப்படுகின்றனர்.

எல்லாவற்றையும்விட முக்கியம், ‘சாட்சியங்களைப் பார்க்க முடியாது’ என்று மறுக்கும் அதிகாரமும் நடுவர் மன்றத்துக்குத் தரப்பட்டிருக்கிறது. சாட்சியங்களை ஆராய்வதும் கேட்பதும், காலத்தைக் கடத்தும் என்பதுடன் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும் பார்க்கப்படுகிறது. எனவே, காவல் துறை அளிக்கும் சாட்சிகளை ஏற்றாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியரா இல்லையா என்று தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றும் நடுவர் மன்றத்துக்கு விலக்கு தரப்பட்டிருக்கிறது. உண்மைகளைத் தொகுத்து முடிவுரை எழுதினால் போதும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, நடுவர் மன்றங்கள் தங்களுக்குத் தாங்களே நடைமுறைகளை உருவாக்கிக்கொள்ளவும் தீர்மானிக்கவும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
இதனால்தான், கடந்த சில மாதங்களாக ஏராளமான, வெளிப்படையான குளறுபடிகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 64,000 பேர் விசாரணைக்கு அழைக்கப்படாமலேயே - அதாவது, விசாரிக்கப்படாமலேயே - இந்தியர்கள் அல்ல என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கான விடைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஒருவர் நாட்டின் குடிமகனா இல்லையா என்பதை மிகக் கவனத்துடனும் அக்கறையுடனும் ஆராய வேண்டும். அது அவரை மட்டுமல்ல; அவருடைய குடும்பத்தையும் தலைமுறையையும் பாதிக்கும் நடவடிக்கை என்ற கவனம் அதிகாரிகளுக்கு அவசியம். சட்டப்படி மட்டுமல்ல; தார்மிகப்படியும் இதில் நடந்துகொள்ள வேண்டும். அந்நியர் நடுவர் மன்றமோ இந்தக் கொள்கைகளுக்கெல்லாம் முரணாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘மனித உரிமைகளின் கடைசிப் பாதுகாவலர்’ என்று அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில் உச்ச நீதிமன்றம் தவறிக்கொண்டிருக்கிறது.

மனுக்களைப் பரிசீலிக்கக் காலவரம்பு நிர்ணயிப்பதும், உத்தரவுகளை அளிக்க முன்னுரிமை தருவதும் இந்த விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்காகவும், காலவரம்புடன் பணி செய்வதற்காகவும் மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது. இப்படி ஒரு தொழில்-வணிக நிறுவனத்தின் தலைவர் பேசலாம், உச்ச நீதிமன்றம் பேசக் கூடாது. நியாயம் வழங்குவதற்கான சட்ட நடைமுறைகளை இப்படி மீறி, விரைந்து செயல்படுவதாகக் காட்டிக்கொள்வது ‘சட்டப்படியான ஆட்சி’ என்ற அம்சத்தையே சிதைப்பதாகிவிடும்.

தவறான முன்தீர்ப்பு நெறி

குத்தூஸ் வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையைக் கடந்த சில மாதங்களாக அது முடுக்கிவிட்டுவரும் விதமும் 2000-களின் நடுவில் அது வழங்கிய ‘சர்வானந்த சோனோவால்-I’, ‘சர்வானந்த
சோனோவால்-II’ என்ற இரு தீர்ப்புகளின் நீட்சி என்றால் மிகையாகாது. உண்மையான ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், சரிபார்க்கப்படாத - மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாத தகவல்களை ஏற்று அந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் வாக்குரிமை இழந்தவர்களும் எண்ணிலடங்காமல் இருக்கும் இந்நாட்டில் இதையே விதியாகத் திணிக்கும் அபத்தமும் நிகழ்ந்தேறிவருகிறது. இவ்விதம் மனிதாபிமானமே இல்லாமல் தனிநபர்கள் மதிப்பிழக்கவைக்கப்படுகின்றனர். இந்த வகையில்தான் அந்நியர் (அடையாளம் காணும்) நடுவர் மன்றம் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 ‘வாழ்வுரிமை’யை அளிப்பது உண்மையானால், அந்நியர்களை அடையாளம் காணும் இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் முடிவுகளும் முற்றுமுதலாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

- கௌதம் பாட்டியா,

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்.

தொடர்புக்கு: gautambhatia1988@gmail.com

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x