Published : 05 Jun 2015 11:42 AM
Last Updated : 05 Jun 2015 11:42 AM

பொருளாதாரம் அளவுகோல் அல்ல!

‘இது முடிவா, ஆரம்பமா?’ என்ற தலையங்கம் படித்தேன். அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு பற்றியும், ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களுக்கு 5% இடஒதுக்கீடு அளித்திருப்பதுபற்றிக் கூறும்போது ‘குஜ்ஜார்களுக்கான இந்த இடஒதுக்கீடு சரிதானா? ஏனென்றால் கல்வி, பொருளாதார பலத்தில் நல்ல வலுவான நிலையில் இருப்பவர்கள் குஜ்ஜார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டப் பிரிவுகள் 15(4) மற்றும் 16(4) ஆகும். அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கான அளவுகோலாக சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க முடியாது. எனவே, பொருளாதாரரீதியாக வலுவானவர்கள் என்பதால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைப்பதற்கு சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும், பின்தங்கியவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அளவுகோல்களும் இருந்தால் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற முடியும். கல்விரீதியாகப் பின்தங்கியிருந்து சமூகரீதியில் முன்னேறியவர்களாக இருந்தால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வர முடியாது.

- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x