Published : 04 Jun 2015 02:48 PM
Last Updated : 04 Jun 2015 02:48 PM

உயிரோட்டமான களம்

கதைசொல்லி ஆசிரியர் கி.ராவின், ‘மனுசங்க...’ தொடரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் மண்மணம் பத்தியில் தொடர்ந்து படித்துவருகிறேன். 02.06.2015 தொடரில் எங்கள் கரிசல் மண்ணின் கேந்திர நகரமான கோவில்பட்டி பற்றிய அடையாளங்களைச் சிறப்பாகச் சிலாகித்துள்ளார் கி.ரா. கதிரேசன் கோவில் பாதை, மூப்பனார் பேட்டை போன்றவையெல்லாம் கோவில்பட்டியின் அடையாளங்கள்.

இந்த மூப்பனார் பேட்டையில்தான் கிராமங்களிலிருந்து மாட்டுவண்டியில் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றிவந்து சம்சாரிகள் வியாபாரிகளிடம் விற்பார்கள். கதிரேசன் கோவில் பாதையில் உள்ள திலாக்கிணறுகளையும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளார் கி.ரா.

இன்றைக்குப் பலர் குதிரைவாலி தானியம் எங்கே என்று தேடியலைகின்றனர். குதிரைவாலி, ராகி, கம்பு, சோளம் எனப் பல தானியங்களை விளைவித்த பூமிதான் கரிசல் மண். அன்றைக்கு இவையெல்லாம் அந்த மண்ணின் மைந்தர்களுக்கான உணவுகளாக இருந்தன.

கம்புதோசை, ராகிதோசை, சோளதோசை, ராகிக் களி என்பதெல்லாம் முக்கிய உணவுகள். மானாவாரியில் பயிராகும் பரு அரிசியான ‘புழுதிபிரட்டி’ கரிசல் மண்ணில் விளைந்தது. இந்த அரிசியின் மேற்பரப்பில் சிவப்பு நிறங்களில் திட்டுத்திட்டாக இருக்கும். மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

கி.ரா. படைப்பின் நாயகன். சீனி நாயக்கர் வானம்பார்த்த கரிசல்காட்டின் சம்சாரி. அப்புராணி சப்புராணியாக வாழ்ந்தவர். இந்த மண்ணில் பாரதியும், வ.உ.சி-யும்

பிறந்ததால் கோவில்பட்டியில் காங்கிரஸும், பொதுவுடைமைக் கட்சிகளும் தீவிரமாகக் களத்தில் இருந்தன. பேரறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கியபோது, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திமுகவை கோவில்பட்டியில்தான் கருணாநிதி கொடியேற்றித் துவக்கிவைத்தார். தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன், காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திக்குளம் சுவாமிகள் எனப் பல ஆளுமைகள் உலா வந்த நகர் கோவில்பட்டி. விவசாயிகள் போராட்டங்களின்போது அதன் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்களுக்குப் போராட்ட தளமும், களமுமாக இருந்தது கோவில்பட்டிதான் .

இவ்வாறான உயிரோட்டமான போராட்டக் களமான எங்கள் மண்ணைப் பற்றி கி.ரா. எழுதிவருவதைப் பலரும் விரும்பிப் படிக்கின்றார்கள். ‘தி இந்து’வுக்கு கரிசல் மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- கே.எஸ். இராதாகிருஷ்ணன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x