Last Updated : 10 May, 2014 12:00 AM

 

Published : 10 May 2014 12:00 AM
Last Updated : 10 May 2014 12:00 AM

மிகெல் டி செர்வாண்டிஸ்: எழுத்தும் பழியும்

ஐரோப்பாவின் முதல் நவீன நாவல் டான் கிஹாட்டி (Don Quixote). இதன் ஆசிரியர் மிகெல் டி செர்வாண்டிஸ் (Miguel De Cervantes. இவரை ஐரோப்பிய நவீன இலக்கியத்தின் முன்னோடி எனக் கொண்டாடுகிறார்கள். இந்த ஸ்பானிய நாவல் 1604ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் செர்வாண்டிஸ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னாலும் இரண்டுமுறை சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார். கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு அல்ஜீரியாவில் சிறைக் கைதியாகவும் அடிமையாகவும் இருந்திருக்கிறார்.

மிகெல் டி செர்வாண்டிஸ் 1547ஆம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிடில் பிறந்தவர். இவரும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் போல் முதலில் கவிதைகளைத்தாம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து சொற்களுடனான தன் போரை விட்டுவிட்டு நிஜமான ஒரு போரைச் சந்திக்கச் சென்றார். எழுதுகோலை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கையில் எடுத்தார். இத்தாலியில் இருந்த ஸ்பானிஷ் ராணுவப் பிரிவில் வீரனாகச் சேர்ந்தார். லெப்னட்டோ போரில் (Battle of Lepanto) செர்வாண்டிஸ் ஸ்பானிஷ் படைப் பிரிவின் சார்பாகப் போர் புரிந்தார். அது நடந்தது 1571ஆம் ஆண்டில். இப்போரில் செர்வாண்டிஸ் படுகாயம் அடைந்தார். அவருடைய இடதுகை முழுவதும் காயம் அடைந்தது.

1575ஆம் ஆண்டு செர்வாண்டிஸும் உடன் போர் புரிந்த அவருடைய சகோதரன் ரோட்ரிக்கோவும் தங்கள் உடல் மிகப் பலவீனமானதால் ஸ்பெயின் திரும்ப முடிவெடுத்தனர். அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது கடற்கொள்ளையர்களால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். பிறகு அவர்கள் அல்ஜீரியாவில் அடிமையாக விற்கப்பட்டனர். அவர்களுடைய பெற்றோர் செர்வாண்டிஸையும் ரோட்ரிக்கோவையும் மீட்கப் பெரும் முயற்சி எடுத்தனர். தங்கள் உடமைகளை விற்றனர். பலரிடமும் கடன் கோரிப் பெற்றனர்.

அவர்களின் உறுதியான முயற்சியின் விளைவாக செர்வாண்டிசின் தம்பியாகிய ரோட்ரிக்கோ (Rodrigo) 60 பொற்காசுகளுக்கு (60 Ducats) 1577ஆம் ஆண்டும் விடுவிக்கப்பட்டார். செர்வாண்டிஸுக்கு அவர்கள் அதிகத் தொகையைப் பிணயமாகச் செலுத்தச் சொன்னார்கள். அதற்குக் காரணம், எழுத்தாளர் என்ற முறையில் பிரபுக்களுடனும், அரசவையிலும் அவருக்கு இருந்த பழக்கம். இவற்றை செர்வாண்டிஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களின் மூலம் கொள்ளையர்கள் அறிந்திருந்தார்கள். அந்தத் தொகையைச் செலுத்த அவரது பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

மீண்டும் எழுத்து

அவரையும் அவருடைய சகோதரரையும் மீட்க அவரது பெற்றோர் பெரும் தொகையைச் செலவழித்திருந்தனர். உடமைகள் எல்லாம் விற்கப்பட்டிருந்தன. கடன் சுமை பெருகியிருந்தது. சிறைவாசம் காரணமாக செர்வாண்டிஸின் உடல் பலவீனம் அடைந்திருந்தது. கடினமான பணிக்கு உடனடியாகச் செல்ல இயலாத நிலையில் செர்வாண்டிஸ் இருந்தார். அதனால் அவர் ஒரு யோசனைக்கு வந்தார். இயல்பிலே எழுத்தார்வம் இருப்பதால் நாடகங்கள் எழுதலாம் என முடிவுசெய்தார். அந்நாட்களில் ஸ்பெயினில் நாடகங்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைச் சார்ந்து இயங்குபவர்கள் ஓரளவு பொருளாதார நலன்களை அடைந்திருந்தனர். செர்வாண்டிஸ் மேடை நாடகங்களுக்குக் கதை எழுதினார். நாட்டுக்குத் திரும்பிய 1580ஆம் ஆண்டிலே தன்னுடைய சிறை அனுவங்களை வைத்து இரு நாடகங்களை - El Trato de Argel (The Treaty of Algiers), Los Baos de Argel (The Baths of Algiers) - எழுதினார். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஓரளவு தன் பொருளாதார மந்த நிலையைச் சமன் செய்யுமென நினைத்தார். ஆனால் அவர் எண்ணம் வெற்றிபெறவில்லை. அவருடைய இரு நாடகப் பிரதிகள் மட்டுமே மேடை ஏறின. எழுத்தை நம்பி வாழ முடியாத சூழலே அவருக்கும் வாய்த்தது.

பிறகு அவர் ஸ்பானிஷ் படைகளுக்கான உணவுப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார். அதிலும் செர்வாண்டிஸ் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசம் அவரைச் சோர்வடையச் செய்தது.

சிறையில் இருந்து திரும்பிய பிறகு அரசாங்க வேலைகளைத் தவிர்த்து எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனாலும் லெளகீகரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. செர்வாண்டிஸின் முதல் குறுநாவல் லா கலடியா (La Galatea) 1585ஆம் ஆண்டு வெளிவந்தது. நாட்டுப்புறக் காதலைச் சொல்லும் இப்புதினம் பெரிய வீச்சை உண்டாக்கவில்லை.

டான் கிஹாட்டி வெளியீடும் குற்றச்சாட்டும்

1604ஆம் ஆண்டின் இறுதியில் செர்வாண்டிஸ் தன் புதிய நாவலான டான் கிஹாட்டை (முதல் பகுதி - El ingenioso hidalgo don Quijote de la Mancha) நிறைவுசெய்கிறார். அதன் எழுத்துப் பிரதியைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுமதிக்காக அரச பொறுப்பிலிருப்பவர்களுக்கும் கொடுக்கிறார். 26-செப்டம்பர்-1604ஆம் நாளில் வல்லோடொலிட் அரசவை அதிகாரிகளால் நாவலை அச்சடிக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 1605ஆம் ஆண்டு தொடக்கத்திலே டான் கிஹாட்டின் முதல் பதிப்பு வெளிவருகிறது. அதை அச்சிட்டபோதும் விற்பனைக்குக் கொண்டுவந்தபோதும் நாவலாசிரியர், பதிப்பாளர் இருவருக்குமே அது வெற்றி பெறும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை.

ஆனால் நாவல் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஸ்பெயினில் அது புதிய அலையை உண்டாக்குகிறது. விற்பனை துரிதமடைகிறது. அருகிலிருக்கும் அரகான் நாட்டிலும் போர்ச்சுகல் நாட்டிலும்கூட நாவலை அச்சடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. 1605ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் டான் கிஹாட்டி நாவல் ஏறத்தாழ ஐந்து பதிப்புகளைக் கண்டிருந்தது.

நாவலின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்நாவலை அடுத்தடுத்த பாகங்களில் நெடும் புனைவாகத் தொடர்ந்து எழுத நினைத்து அயராது இயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய துருதிஷ்டம் விடவில்லை.

தொடர்ந்த குற்றச்சாட்டு

1605ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வல்லாடிலோட் நகரத்தில் எஸ்குய்வா (Esgueva) ஆற்றுப்பாலத்துக்கு அருகில் கத்தோலிக்க ராணுவத்தைச் சேர்ந்த டான் கஸ்பார் டி எஸ்பிலிட்டா (Don Gaspar de Ezpaleta) என்னும் தளபதியை அடையாளம் தெரியாத இருவர் வாளால் தாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே யாரோ வருவதைக் கண்டு அந்த இரு நபர்களும் தப்பிச் சென்றனர்.

கஸ்பாரின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கஸ்பார் உதவி வேண்டி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த குடியிருப்பு ஒன்றின் அருகில் வந்து விழுந்து வேதனையில் கத்தினார். அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த செர்வாண்டிஸ் காயம் அடைந்த அந்த மனிதர் வலியால் துடித்த குரலைக் கேட்டு ஒருவன் துணையுடன் கஸ்பாரைத் தூக்கிச் சென்று வீட்டிற்குள் வைத்துக் காப்பாற்ற முயன்றார். ஆனால் முயற்சிகள் பலன் இன்றி கஸ்பார் இறந்தார்.

வல்லாடொலிட் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. டி செர்வாண்டிஸூம், அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆக செர்வாண்டிஸூக்கு இது மூன்றாம் சிறைவாசம். எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தொடர்ந்து நிகழ்ந்த இச்சம்பவங்கள் அவரை அயர்ச்சியில் ஆழ்த்தின. இதற்கு முன்பு வெளிவந்த அவருடைய குறுநாவல் பெரிதாக வெற்றியைத் தரவில்லை. ஆனால் அவருடைய புதிய நாவலுக்கு அங்கீகாரம் கிடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதை அனுபவிக்க முடியாமல் சிறைச்சாலையில் கிடந்தார் செர்வாண்டிஸ்.

நீதி விசாரணையின்போது இறந்துபோன கஸ்பார் செர்வாண்டிஸின் மகளையோ அவருடைய விதவைத் தங்கையின் மகளையோ விரும்பி இருந்ததாகவும் அதனாலேயே செர்வாண்டிஸ் கோபம்கொண்டு கஸ்பாரைக் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றக் காவலுக்குப் பிறகு செர்வாண்டிஸின் குடும்பத்தினருக்கு ஜாமீன் கிடைத்தது. வழக்கு விசாரணை முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என அவர்கள் விடுவிக்கப்பட்டனர். செர்வாண்டிஸின் நாயகன் கிஹாட்டி விநோத மிருகம் என நினைத்து காற்றாலையுடன் சண்டைபோடுவான். கேலிக்குரியதாக நினைத்த அந்தக் காட்சி செர்வாண்டிஸின் வாழ்க்கையுடன் பார்க்கும்போது உண்மையில் கேலியாகத் தோன்றவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x