Last Updated : 12 Dec, 2014 09:24 AM

 

Published : 12 Dec 2014 09:24 AM
Last Updated : 12 Dec 2014 09:24 AM

இஸ்ரோவின் பிரச்சினை தீருமா?

பிற நாடுகளின் உதவியையே இஸ்ரோ எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இந்தியாவின் ஜிசாட்-16 தகவல் தொடர்பு செயற்கைக் கோள், தென் அமெரிக்காவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில், குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க உதவும்.

இஸ்ரோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு எந்த விதத்தில் இப்போது பிரச்சினை நிலவுகிறது? ஏன் அப்படிப் பிரச்சினை நிலவுகிறது என்று கேட்கலாம். மிகச் சுருக்கமாகச் சொன்னால், ஜிசாட் மாதிரியில் இன்னும் நிறைய செயற்கைக் கோள்கள் பறக்கவிடப்பட வேண்டும். இப்போதுள்ள செயற்கைக் கோள்கள் போதாது. அதுதான் பிரச்சினை.

இரண்டு வகைகள்

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அடிக்கடி செயற்கைக் கோள்களைப் பறக்கவிடுகிறதே, அப்படியிருக்கும்போது செயற்கைக் கோள்கள் போதாது என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியா தயாரித்துப் பயன்படுத்தும் செயற்கைக் கோள்கள் பொதுவில் இரு வகைப்பட்டவை. முதல் வகை செயற்கைக் கோள்கள், தொலை உணர்வு செயற்கைக் கோள்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. வானிலிருந்து படம் எடுப்பது, நிலவள ஆய்வு, நிலவரைபடம் தயாரிப்பு, பயிர்கள் கண்காணிப்பு, வனவள ஆய்வு, மீன்வள ஆய்வு, வானிலிருந்து கண்காணிப்பு என்று பல வகை யான பணிகளுக்கான செயற்கைக் கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவ்வித செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்று பவை. அதாவது, இவை தமது சுற்றுப்பாதையில் தென் துருவத்தையும் வட துருவத்தையும் கடந்து செல்பவை. இந்த வகை செயற்கைக் கோள்களின் நோக்கம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அவை அவ்விதமாகத்தான் பூமியைச் சுற்றிவந்தாக வேண்டும். பொதுவில், இவை சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தவையாக பூமியைச் சுற்றிவரும்.

இந்த வகையான செயற்கைக் கோள்கள் பொதுவில் எடை குறைந்தவை. இவற்றைச் செலுத்தும் நோக்கில்தான் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டது. வடக்கு-தெற்காக பூமியைச் சுற்றுவதற்கான செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான வாகனம் என்ற பொருளில், இந்த ராக்கெட்டுக்கு ஆங்கிலத்தில் போலார் சேட்டிலைட் லான்ச் வெஹிகிள் (பி.எஸ்.எல்.வி.) என்று பெயரிடப்பட்டது. ஆனால், இந்த ராக்கெட் வடக்கிலிருந்து தெற்கு நோக்கித்தான் பாயும்; கிழக்கு நோக்கிப் பாயாது என்று அர்த்தமல்ல. ஒரு ராக்கெட்டை எந்தத் திசையிலும் செலுத்த முடியும். ஆனால், ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வகை ராக்கெட்டுக்கு அப்படி ஒரு பெயரை வைத்துவிட்டார்கள்.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது 1993-ம் ஆண்டில் முதல் முயற்சியில் தோல்வி கண்டது என்றாலும், அப்போதிலிருந்து இதுவரை 25-க்கும் அதிகமான தடவைகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. இந்த ராக்கெட் பொதுவில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. வேறு வகையில் சொல்வதானால், முதல் வகை செயற்கைக் கோள்கள் அனைத்தையும் உயரே செலுத்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நமக்கு உதவுகிறது.

செயற்கைக் கோளும் ராக்கெட்டும்

தொலைக்காட்சி ஒளிபரப்பு, இணையதள வசதி, தகவல் தொடர்பு, வானிலை தகவல் சேகரிப்பு போன்ற வற்றுக்கான செயற்கைக் கோள்கள் முற்றிலும் வேறு ரகம். இவை இரண்டாவது வகை செயற்கைக் கோள் களில் அடங்கும். இந்த செயற்கைக் கோள்கள், பூமியிலிருந்து மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைக் கிழக்கு மேற்காகச் சுற்றிவருபவை. அவை அந்த உயரத்தில் இருந்தால்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு சாத்தியமாகும்; மற்ற பணிகளும் சாத்தியமாகும். பொதுவில் இந்த வகை செயற்கைக் கோள்களின் எடை அதிகம். உதாரண மாக, இப்போது உயரே சென்றுள்ள ஜிசாட்-16 செயற்கைக் கோளின் எடை 3,180 கிலோ. இதில், 48 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.

சுமார் மூன்று டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் உட்பட இந்தியாவுக்குத் தேவை யான எல்லா வகை செயற்கைக் கோள்களையும் நாமே தயாரிக்கிறோம். சொல்லப்போனால், செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் நாம் பெருமைப்படும் அளவுக்கு நன்கு முன்னேறியிருக்கிறோம்.

ஆனால், மூன்று டன் அளவு எடை கொண்ட செயற்கைக் கோள்களை மேலே கூறிய அளவு உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் தற்போது இந்தியாவிடம் இல்லை. செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு வேகமாக முன்னேறினோமோ அந்த அளவுக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னேறவில்லை. ஆகவேதான், மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விமானம் மூலம் தென் அமெரிக்காவில் கூரூ என்னும் இடத்துக்கு எடுத்துச்சென்று, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலம் அதைச் செலுத்தச் செய்கிறோம். எடுத்துச் செல்லும் செலவு, செலுத்தித் தருவதற்கான கட்டணம் போன்ற வகையில் ஒவ்வொரு தடவையும் ரூ. 450 கோடிக்கும் அதிகமாகச் செலவாகிறது. இதுவரை ஏரியான் மூலம் 18 தடவை இந்தியத் தகவல்தொடர்பு செயற்கைக் கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன.

பிறர் கையை எதிர்பார்க்காமல் நான்கு டன் எடை கொண்ட தகவல்தொடர்பு செயற்கைக் கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில்தான் ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 என்னும் சக்தி மிக்க ராக்கெட்டை உருவாக்குவதில் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த வகை ராக்கெட் உருவாக் கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் பிற்பாதியில் இது முதல் தடவையாக வானில் செலுத்தப்பட இருக்கிறது. முதல் பரிசோதனை, வெற்றியாக அமைந்தாலும் இது பயனுக்கு வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.

டிரான்ஸ்பாண்டர்

இப்போது டிரான்ஸ்பாண்டர் சமாச்சாரத்துக்கு வருவோம். டிரான்ஸ்பாண்டர் என்பது தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் அனைத்திலும் இருக்கிற கருவிகளாகும். நீங்கள் தொலைக்காட்சியில் தினமும் பார்க்கும் நிகழ்ச்சிகள் உட்பட, இந்தியாவில் உள்ள பல நூறு சேனல்காரர்களும், தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் (பங்கு மார்க்கெட் நிறுவனங்களும் இதில் அடங்கும்) தங்களது சிக்னல்களை மேலே உள்ள தகவல் தொடர்பு செயற்கைக் கோளின் டிரான்ஸ்பாண்டர்களை நோக்கி அனுப்புகிறார்கள். அவை, அந்த சிக்னல்களைப் பெற்று, இந்தியா முழுவதும் அந்த சிக்னல்கள் கிடைக்கும் வகையில் கீழ் நோக்கி அனுப்புகின்றன. இந்தியாவுக்குத் தெற்கே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்தபடி இப்போது 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் செயல்பட்டுவருகின்றன. இவை அனைத்திலும் உள்ள மொத்த டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை 200கூட இல்லை. செயற்கைக் கோளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் இது போதவில்லை. தேவை அதிகரித்த அளவுக்கு டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

எட்டப்படாத இலக்கு

வீட்டு மாடியில் டிஷ் ஆண்டெனாவை நிறுவி, அதன் மூலம் டிவி நிகழ்ச்சிகளைப் பெறும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வசதியை அளிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்குக் குறிப்பிட்ட அலைவரிசையில் மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும்படி கோரிவருகின்றன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை இஸ்ரோ நிறைவேற்ற முடியாத காரணத்தால், பிற நாடுகளின் செயற்கைக் கோள்களில் சுமார் 100 டிரான்ஸ்பாண்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. இது நல்லதல்ல என்று சுட்டிக் காட்டப்படுகிறது. 2012-ம் ஆண்டின் இறுதி வாக்கில், இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் 500 டிரான்ஸ்பாண்டர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் பாதிகூட எட்டப்படாத நிலைதான் உள்ளது.

மொத்தத்தில், செயற்கைக் கோள் டிரான்ஸ்பாண்டர்கள் விஷயத்தில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x