Published : 22 Nov 2014 09:22 AM
Last Updated : 22 Nov 2014 09:22 AM

சுமுக உறவுதான் சாதிக்கும்

ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் பெரும் நிம்மதி! போதைப்பொருள் கடத்தியதாகக் கைதுசெய்யப்பட்டு, பிறகு மரண தண்டனையும் விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லெட் எந்த வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கும் வந்துசேர்ந்துவிட்டனர். இதே வழக்கில் தண்டனை பெற்ற 3 இலங்கை மீனவர்கள் இன்னமும் விடுதலை பெறாமல் சிறையிலேயே இருக்கிறார்கள்.

இவர்கள், 2011 நவம்பரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கடந்த அக்டோபர் 30-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகளில் தண்டனை குறைக்கப்படுவதோ ரத்துசெய்யப்படுவதோ அடிக்கடி நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தின் கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முன்னெடுத்த மிகப் பெரிய போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தன. பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவர்களுடைய மரண தண்டனையை ரத்துசெய்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டது இலங்கை அரசு.

உண்மையில் இது கடலோடி மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. கடலோடிச் சமூகத்தினரின் எந்தப் போராட்டங்களை யும் பிரச்சினைகளையும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த பொதுச்சமூகத்தையும் உலுக்கி, விரிவான தளத்தில் முன்னெடுக்கப் பட்டதே இந்தப் போராட்டத்தின் மற்றுமொரு வெற்றி.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சுமுகமாகவும் வலுவாகவும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் சாத்தியம். இந்தியப் பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின் செல்வாக்கு, இலங்கை மீது வலுப்படாமல் இருக்க இந்தியா அதனுடன் நெருக்கமான உறவு கொள்வது அவசியம். அத்துடன் இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரின் நல்வாழ்வுக்காகவும் இலங்கை அரசுடன் நெருக்க மான உறவை வைத்திருப்பது முக்கியம். இந்தியா, இலங்கைக்கு இடையிலான கடல்பரப்பில் மீன் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும், இரு நாட்டு மீனவர்களுக்கும் பலன் ஏற்படவும், இப்பகுதியின் அரிய கடல் வளங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் சுமுக உறவு நிலவுவதுதான் அடிப்படையானது.

இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ததைப் போன்றே இத்தாலியக் கடற்படையினரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இத்தாலியும் விரும்பக்கூடும். இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அப்படியே கேட்கக்கூடும். ஆகவே, இதுபோன்ற விவகாரங்களில் இந்தியா உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் அணுகுமுறையையும் வரையறையையும் இந்த விவகாரம் மாற்றியமைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்தியக் குடிமக்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நாட்டுக்குத் தொழில், வியாபாரம் தொடர்பாகச் சென்றாலும் அவர்களுடைய நலனைப் பாதுகாப்பது அரசின் கடமை. அதில் அரசியல் குறுக்கிடாமல் மக்களுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டு விவேகத்துடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்களின்போது அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளாமல் ஆதாயம் தேடுவது என்பது எதிர்மறையான விளைவைவே ஏற்படுத்தும். மூர்க்கத்தால் அல்ல, சுமுகமான ராஜ்ஜிய உறவுகள் மூலமாகவே அண்டை நாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் முன்னுதாரணமாக ஆகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x