Published : 03 Aug 2017 09:46 AM
Last Updated : 03 Aug 2017 09:46 AM

யஷ்பால்: அறிவியலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு!

நா

டு விடுதலை பெற்ற பிறகு, நம் நாட்டு விஞ்ஞானிகளுக்குத் தங்களின் முன்னிருந்த மாபெரும் சவால் அறிவியல் ஆய்வு நிறுவனங்களைக் கட்டமைப்பது! தங்களின் அறிவைக் கொண்டு தங்களுடைய பிரபலத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல், இதர விஞ்ஞானிகளுடன் இணைந்து, விண்வெளி, அணு ஆற்றல் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான, இந்தியத்துவம் மிக்க நிறுவனங்களை அவர்கள் கட்டமைத்தார்கள். அவர்களின் வழிவந்தவர்களில் ஒருவர்தான் பேராசியர் யஷ்பால். கடந்த ஜூலை மாதம் 24-ல் காலமானார்.

காஸ்மிக் கதிர்கள் தொடர்பாக ஆழமான ஆய்வுகளை முன்னெடுத்த யஷ்பால், ஒரு விஞ்ஞானியாக மட்டுமே இருந்துவிடாமல், தான் பெற்ற அறிவியல் ஞானத்தைக் குழந்தைகளிடமும், சாமானியர்களிடமும் கொண்டு செல்வதில் ஆர்வமிக்கவராக இருந்தார். அந்த ஆர்வம்தான், 1975-76-ம் ஆண்டுகளில் ‘சைட்’ (SITE – Satellite Instructional Television Experiment செயற்கைக்கோள்சார் தொலைக்காட்சி கற்பித்தல் பரிசோதனை) திட்டமாக வெளிப்பட்டது. நமது செயற்கைக்கோள்களை, கல்விக்காகப் பயன்படுத்த முடியும் என்பதை இந்தத் திட்டம் நிரூபித்தது.

அவரைப் பற்றிய ‘யஷ்பால்: எ லைஃப் இன் சயின்ஸ்’ எனும் ஆவணப் படம் இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது. யூசுப் சயீத் என்பவர் இயக்கியிருக்கிறார். யஷ்பாலின் ஆரம்பக் காலம், அவர் காலத்திய அறிவியல் ஆய்வுகள் ஆகியவற்றினூடாக, இந்திய அறிவியல் துறையின் வளர்ச்சியையும் அந்த ஆவணப் படம் சொல்கிறது. அவர் அளித்த பேட்டிகள், அவர் விஞ்ஞானிகளை எடுத்த நேர்காணல்கள் ஆகியவையும் இந்தப் படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், அவரின் சிந்தனைகள் பலவும் காலத்துக்கு ஏற்றதாகவும், காலம் கடந்து நிற்பதாகவும் இருப்பதை அறிய முடிகிறது.

ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார் யஷ்பால்: “விழுமியக் கல்வி என்பது, குழந்தைகளின் மூளையைச் சலவை செய்வதுதான். தயவுசெய்து குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் கல்வியை விட்டொழியுங்கள்!” . இந்த விஷயத்தைத்தான் அவர் தலைமையிலான குழு 1993-ம் ஆண்டு அவர் தயாரித்த ‘லேர்னிங் வித்அவுட் பர்டன்’ எனும் அறிக்கையாக மத்திய அரசிடம் பரிந்துரைத்தது.

“அவரின் அறிக்கைகள் அனைத்தையும் ஒரே வார்த்தையில் சுருக்கிவிட முடியும். ‘கப்ளிங்’. இந்த வார்த்தைதான் அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தை” என்கிறார் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (என்சிஇஆர்டி) முன்னாள் இயக்குநர் கிருஷ்ண குமார். ‘கப்ளிங்’ என்ற அந்த வார்த்தைக்கான அர்த்தமாக யஷ்பால் சொல்வது, இதுதான்: ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, உரையாடலுக்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த ‘கப்ளிங்’ குறித்து நாம் புரிந்துகொண்டால்தான், “இன்றைக்கு இருக்கும் பள்ளிக் கல்வியும், இயற்கையாகவே குழந்தைக்கு இருக்கும் கற்றுக்கொள்ளும் திறனும் ஒன்றிணைந்துப் போவதில்லை” என்று யஷ்பால் சொன்னதை, நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆவணப் படத்தைப் பார்க்க:

https://www.youtube.com/watch?v=vDd5XApV2QU

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x